Tuesday, December 28, 2010

விளையாட்டுத் துறையின் எதிர்காலம்

ஒலிம்பிக் போட்டியானாலும், காமன்வெல்த் போட்டியென்றாலும் அல்லது ஆசிய விளையாட்டுகளானாலும் சரி, பதக்கப்பட்டியலில் முன்னணியில் வரும் நாடுகளை உலக அரங்கில் பிரமிப்போடு பார்ப்பது என்பது சகஜமான ஒன்றாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத் தகுதிநிலையை பதக்கங்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை என்றாலும்கூட, அந்த நாட்டின் கெüரவத்தை நிலைநிறுத்துகிற காரணியாக இது பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்ததில் மகிழ்ச்சியும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாவது இடம் கிடைத்திருப்பதில் ஓரளவு மனநிறைவும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

இது 2012-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஒரு விளையாட்டு வீரனை உருவாக்குவதில் பல்வேறு காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தை வளரும் சூழலை சமூகமயமாதல் என்று சமூகவியலார் கூறுகின்றனர். ஓர் உயிரினமாக இவ்வுலகுக்கு வரும் மனிதனை மனிதனாக மாற்றுவது அவன் பிறந்து வளரும் குடும்பச் சூழலேயாகும். குடும்பம் எனும் சமூகநிறுவனத்தின் மூலமாகவே அவன் சில மனப்பான்மைகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் இவற்றைப் பெறுகிறான்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அரவணைத்து அன்பு பாராட்டுதல், பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தல் போன்ற தன்மைகள் குழந்தைகளுக்கு வளரும் பிராயத்தில் கிடைக்குமேயாயின் அவர்கள் சாதனையாளர்களாக மிளிர வாய்ப்புகள் அதிகம். தேவையற்ற பயஉணர்வு, எளிதில் மனந்தளர்தல், விரக்திமனப்பான்மை, எதிர்மறைச் சிந்தனைகள் போன்ற தன்மைகள் கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் அவர்களைப் போலவே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சாதனை உணர்வு மற்றும் ஊக்கம் போன்றவை தன்னம்பிக்கைமிக்க குடும்பச் சூழலில் உருவாகும் ஒன்றாகும். இவ்வகைக் குடும்பங்களில் எப்படியாவது வென்றாக வேண்டும் எனும் உணர்வு குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கப்படுகிறது. இந்த இயல்புகளின் பின்னணியில்தான் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகிறார்கள். ஆண் குழந்தைகள் மட்டுமல்லாது பெண் குழந்தைகளும் விளையாட்டுப் போட்டிகளில் முழுமனதோடு பங்கேற்கும் நிலையை பள்ளிகள் உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பொறுத்த அளவில் இந்த ஊக்குவிக்கும் முயற்சி மிகமிகக் குறைவாகவே உள்ளது.

சாதனையாளர் என்ற வகையில் ஒரு விளையாட்டு வீரனோ அல்லது வீராங்கனையோ வளரும் சூழலில் உளவியலின் பங்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது புலனாகிறது. ஆங்கிலத்தில் இப்படியொரு பழமொழி உண்டு. Half the game is played in mind என்பதே அது. மனதளவில் ஒரு நிகழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதையும் வெற்றிக்குத் திட்டமிடுதலையுமே இப்பழமொழி உணர்த்துகிறது.

அடுத்ததாக ஒருவிளையாட்டு வீரனின் வாழ்க்கையில் ஊட்டச்சத்துள்ள உணவின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க இயலாது. விளையாட்டில் வெல்வதற்கு மனவலிமை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல்வலிமையும் முக்கியமானது. திடகாத்திரமான உடல் இல்லாத மக்கள் எந்த அளவுக்கு, உடல்வலிமையைப் பயன்படுத்தி வெல்லவேண்டிய தடகளம், குத்துச்சண்டை, வட்டு எறிதல் போன்ற போட்டிகளில் துடிப்பாகப் பங்கேற்க இயலும்? உடல் வலிமைக்கு அடிப்படைக்காரணி ஊட்டச்சத்துமிக்க உணவாகும். இத்தகைய சூழலில் ஒரு நாளிதழில் வெளியான செய்தி நமது சிந்தனைக்கு உரிய ஒன்றாகிறது.

காமன்வெல்த் நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையில் எடை குறைந்த நிலையில் உள்ள குழந்தைகளைக் கொண்ட நாடு இந்தியா என்பதே அச்செய்தி. இந்தியக் குழந்தைகளில் 43 விழுக்காடு குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாகவும், 5 வயதுக்குள்பட்ட பல லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் காமன்வெல்த் விளையாட்டு போன்ற போட்டிகளில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் save the children எனும் அமைப்பின் தலைமை நிர்வாகி தாமஸ்சாண்டி கூறுவதாகச் செய்தியாளர் ஆர்த்தி தார் குறிப்பிடுகிறார்.

ஒரு விளையாட்டுப் போட்டியை உடல், உரம், திறமையின் வெளிப்பாடு என்று கொண்டாடுகிற அதேவேளையில் நம் குழந்தைகளின் இளம் பிராயத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஆர்த்தி தார். கரு உருவான காலத்திலிருந்து குழந்தையின் இரண்டாம் பிறந்தநாள் வரை ஏறத்தாழ முதல் 33 மாதங்கள்வரை சத்துக்குறைவான உணவு கொடுக்கப்படுமேயாயின் அது நிவர்த்திக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் இச்செய்தியாளர்.

கிராமப் பகுதிகளில் மட்டுமன்றி, நகரங்களிலும்கூட குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய சத்தான உணவு வகைகள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் அடங்கிய, குறைந்த விலையில் கிடைக்கும் உணவுப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நலிவுற்றோர் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரிடையே ஏற்படுத்தப்படும் இந்த விழிப்புணர்வு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் உருவாகின்றனர். நமது விளையாட்டு வீராங்கனைகள் குறித்து சமூக ஆராய்ச்சி மையத்தின் அஞ்சுதுபே பாண்டே என்பவர் வெளியிட்ட கருத்து குறிப்பிடத்தக்கது. ஆச்சரியப்படும் வகையில் பெரும்பாலான விளையாட்டு வீராங்கனைகள் மிகவும் சாதாரணமான பின்புலத்தைச் சார்ந்தவர்களென்றும், ஆனால் அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் மனஉறுதி மற்றும் உண்மையான மகளிர் வலிமையின் வெளிப்பாடு எனவும் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றியடைந்த வீராங்கனைகளைப் பற்றி குறிப்பிடுகிறார் அஞ்சுதுபே பாண்டே. சர்வதேச அளவில் இந்தியப் பெண்கள் பெறும் வெற்றி, மீண்டும் மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தும் போட்டியுணர்வு ஆகியன மகளிர் மேம்பாட்டில் மூலதனம் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது எனவும் கூறுகிறார். இச்சூழலில் பள்ளிகள் மற்றும் மாவட்ட, மாநில அளவில் விளையாட்டில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் உணவில் பெற்றோரும், வழிகாட்டிகளும், பயிற்றுநர்களும் கவனம் செலுத்தும்போது மிகப்பெரும் சாதனைகள் நம் வசப்படும் என்பது உறுதி.

மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் பேசக்கூடிய துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்து கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் இவற்றை நம்முடைய ஊரகங்களில் ஏற்பாடு செய்வதன் மூலமாகவும் நிச்சயமாக நல்ல விளைவுகளை எதிர்பார்க்க முடியும்.

பொதுமக்கள் கூடுமிடங்களான சமுதாயக் கூடங்கள் போன்றவற்றில் சத்துணவு உள்ளிட்ட செய்திகள் அடங்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். நம்முடைய சூழலுக்கு ஏற்றவாறு கதையம்சத்துடன் கூடிய செய்திப்படங்கள், கேளிக்கைகளுடன்கூடிய செய்தி நாடகங்கள் இவைகள் மூலமாக ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இயலும். "மாதா ஊட்டாத சோற்றை மா ஊட்டும்' என்று சொல்வதைப்போல வார்த்தைகளால் மட்டுமே இயலாத ஒன்றைப் படங்களின் மூலமாகக் கொண்டு செல்ல இயலும். இதைத்தான் ஆங்கிலத்தில் A picture is worth thousand words என்று சொல்வார்கள். நம்பிக்கையோடு முயற்சிப்போம். விளையாட்டுத் துறையில் சாதிப்போம்!

வருமுன் காப்போம்!

ஆண்டுதோறும் மழைக்காலத்தின்போது தமிழகம் வெள்ளக்காடாவதும், மழை வெள்ளத்தில் விவசாயப் பயிர்களும், வீடுகளும் மூழ்கிச் சேதமடைவதும் வாடிக்கையாகிவிட்டது. வழக்கம்போல இந்த ஆண்டும் மழை வெள்ளத்தால் தமிழகமே மிதந்தது.

குறிப்பாக, சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் குழு கணக்கிட்டு, நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

கோடைகாலத்தில் வறட்சியில் சிக்கித் தவிப்பதும், மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்குவதுமான நிலைமை, தமிழகம் போன்ற அருமையான புவியமைப்பைக் கொண்டுள்ள மாநிலத்துக்குத் தகுமா? இயற்கையின் சீற்றத்தைத் தணிக்காமல் மேலும் சீண்டிப் பார்க்கும் வேலையைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வோராண்டும் மழைக்காலத்துக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து அக்கறை காட்டும் அரசு, அதற்கு முன்னரே மழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போதிய அக்கறை காட்டுவதில்லை. அதன் விளைவுதான் இப்படி ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதம்.

தமிழகத்தில் நீண்டகாலப் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், பருவமழைக் காலங்களில் அப்படியொன்றும் அபரிமிதமாக மழை பெய்துவிடவில்லை. ஆண்டுக்கு ஆண்டு மழைப் பொழிவு குறைந்து கொண்டுதான் வருகிறது. இந்த ஆண்டு கொட்டித் தீர்த்த மழைகூட வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னத்தால்தானே தவிர, முற்றிலும் பருவமழையன்று.

ஒருசில நாள்களே பெய்தாலும், இந்த மழையால் ஊரே வெள்ளக்காடானது எப்படி? தொலைநோக்குப் பார்வையின்றி நீர்நிலைகளைக் கவனிக்காமல் விட்டதே இதற்குக் காரணம். எங்கு பார்த்தாலும் குளங்கள், கண்மாய்கள், ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லும் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கிக் கிடக்கின்றன. ஒன்று அமலைச் செடிகள், முட்புதர்கள் என இயற்கையான ஆக்கிரமிப்பு; மற்றொன்று மனிதர்களால் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்பு. இதனால், தண்ணீரின் போக்கில் தடை ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது.

மொத்தத்தில் ஆக்கிரமிப்பே மழைச்சேதத்தை அதிகமாக்கிவிட்டது. மழைச்சேதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் குழுவிடம் மக்கள் முறையிட்டதும் இதைப்பற்றித்தான்.

ஒருவழியாகத் தண்ணீர் வந்து சேர்ந்த குளங்களும் ஆண்டுக்கணக்கில் தூர்வாரப்படாமல், கரை பலப்படுத்தப்படாமல் இருந்ததால் மணல் மேடிட்டு, எளிதில் உடைப்பும் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. கால்வாய்களின் நிலையும் இப்படித்தான். ஒருநாள் மழைக்குத் தாக்குப்பிடிக்காமல் கால்வாய்க் கரைகள் உடைந்ததால் வெள்ளம் வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களை மூழ்கடித்துவிட்டது.

நகர்ப்பகுதிகளில் இப்போதெல்லாம் அழகுக்குத்தானே முக்கியம் தரப்படுகிறது? சிங்காரச் சென்னை என்று இனிக்க இனிக்கச் சொன்னால் போதுமா? பாலங்களும், சாலைகளும் அழகாக இருந்தால் ஆயிற்றா? நகரில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்கள், ஓடைகள் சீராக இருந்தால்தான் அந்த நகரில் அடிப்படை உள்கட்டமைப்பு நன்றாக இருப்பதாக அர்த்தம். ஆனால், நகர்ப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைகளைக் கொட்டும் கிடங்காக மாற்றப்பட்டு இருப்பதால், தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? அந்தந்த நேரத்துக்குப் பிரச்னையைத் தீர்க்கும் வழியை மட்டும் பார்க்காமல், நிரந்தரமான தீர்வு குறித்து அரசு ஆலோசனை செய்ய வேண்டும். ஆண்டுதோறும் மழைச்சேதம் ஏற்படுவது இயல்புதானே என வாளாவிருக்காமல், நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீவிரமாக முயற்சிக்க வேண்டும். மக்களுக்கு இலவசமாக என்னவெல்லாம் தரலாம் என்று யோசிப்பதைத் தவிர்த்துவிட்டு, தொலைநோக்குச் சிந்தனையுடன் நீண்டகாலப் பயன்தரும் திட்டங்கள் குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.

மழைச்சேதத்துக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யும்போதே, நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டத்துக்கும் ஓரளவு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மழைச்சேதம் குறித்து இரண்டே நாளில் ஆய்வு செய்த "மின்னல் வேகத்தைப்'போல் அல்லாமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இதுகுறித்து ஆய்வு செய்யலாம்.

அரசு நிலங்கள்தான் இப்போது எளிதில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. ஆற்றையே ஆக்கிரமித்துக் கரையில் விவசாயம் செய்பவர்கள் வாழும் காலமிது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து எங்கிருந்தோ ஆய்வுக்கு வரும் அதிகாரிகளைவிட, உள்ளாட்சி நிர்வாகங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை விடுங்கள், கால்வாய்களையும், குளங்களையும் ஆக்கிரமிக்கும் செயலையாவது தடுத்து நிறுத்தலாம் அல்லவா? வெள்ளம் வெளியேறும் வழியை அடைத்துவிட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது என்று சொல்வது என்ன நியாயம்?

இப்போது ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், பெரும்பாலும் குளங்களைத் தூர்வாரும் பணிதான் மேற்கொள்ளப்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களைப் பயன்படுத்தி இதுபோன்று ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நீர் வரத்துக் கால்வாய்களைக் கண்டறிந்து தூர்வாரினால் மழைக்காலத்தின்போது மிகுந்த பயனளிக்கும். வந்த பின் துயருருவதைவிட வருமுன் காப்பதுதானே நலம்!

Monday, December 27, 2010

வின்ஸ்டன் சர்ச்சில் பார்வையில் காந்திஜி

சமகாலத்தில் வாழ்ந்த இரு தலைவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது, சரித்திர ஆய்வாளர்களின் பழக்கம். பிரிட்டனின் போர்க்காலப் பிரதமராக இருந்த சர்ச்சிலையும், இந்திய தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்திஜியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு சுவையான அனுபவம்.

÷சர்ச்சில் ஆயுத பலத்தை நம்பியவர்; அண்ணல் காந்தியோ அஹிம்சையை நம்பியவர். சர்ச்சில் அதிகார பலத்தால் இந்தியாவை அடக்கி ஆள நினைத்தவர்; அண்ணல் காந்தியோ அன்பால், சத்தியாக்கிரக வழியால் இந்திய விடுதலைக்குப் போராடியவர். சர்ச்சில் பொதுவாக இந்தியர்களையும், குறிப்பாகக் காந்தியையும் வெறுத்தவர்; இகழ்ந்தவர். அண்ணல் காந்தியோ இந்தியாவை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்களையும் நேசித்தார்; ஏன் சர்ச்சிலையும் அன்போடு நேசித்தவர். இருவரும் தாங்கள் ஏற்றுக் கொண்ட லட்சியத்தால் வேறுபட்டு நின்றார்கள். உணவு, உடை, பழக்க வழக்கம், அரசியல் அணுகுமுறை ஆகிய அனைத்திலும் வேறுபட்டு நின்றார்கள். இருவரும் இரண்டு மாறுபட்ட துருவங்கள் என்றால் எப்படி ஒப்பிட முடியும்? வேறுபட்டு நிற்கும் இருவரின் குண வித்தியாசங்களை ஆய்வு செய்து பார்க்கலாமல்லவா!

÷"காந்தி' என்ற சொல்லே சர்ச்சிலுக்கு எரிச்சலை ஊட்டியது; கோபத்தை வரவழைத்தது. 23-2-1931-ல் நடைபெற்ற சிறிய தொழிலாளர் கூட்டமொன்றில் சர்ச்சில் பேசுகிறார்:

÷""காந்தி ஒரு சாதாரண வக்கீல்; கீழ் தேசத்தின் "பக்கிரி'யைப் போல் காட்சி அளிப்பவர்; தூர நின்று பார்த்தால் அவர் ஆடை எதுவும் அணிந்திருக்கிறாரா, இல்லையா? என்பதில் சந்தேகம் வரும்! சற்று உற்றுப் பார்த்தால், அவர் ஒரு அரை நிர்வாணப் பக்கிரி போல் தோற்றமளிப்பார்! அது பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை! அதே அரை நிர்வாண உடையுடன், பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதி - வைஸ்ராய் - வாழும் மாளிகைக்குச் செல்கிறார்! அவருடன் சரிநிகர் சமமாக அமர்ந்து பேசுகிறார்: அவர் ஒரு ""ராஜ துரோகி''யாக இருக்கிறார். இதைத் தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை'' - என்கிறார்.

÷அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் - 1930-ல் அண்ணல் காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தை நடத்தினார்; அதன் பயனாக மக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தார்கள்; அப்பொழுதுதான் வைஸ்ராய் லார்டு இர்வின், அண்ணல் காந்தியின் அரசியல் பலத்தை, மக்கள் செல்வாக்கை உணர்ந்தார். சிறையிலிருந்து விடுதலை செய்து, காந்திஜியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அது கேட்டு சர்ச்சில் வெகுண்டெழுந்து பேசுகிறார்:

÷""காந்தியோடு பேசுவதையும், ஒப்பந்தம் செய்து கொள்வதையும் நான் எதிர்க்கிறேன்; பிரிட்டானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்; பிரிட்டிஷ் வணிகமும் வெளியேற்றப்பட வேண்டும் என்கிறார் காந்தி. பிரிட்டிஷார் ஆட்சிக்குப் பதிலாக, இந்தியர்களின் ஆட்சியைக் கொண்டுவரப் பார்க்கிறார். காந்தியோடு நம்மால் ஒத்துப் போகவே முடியாது'' என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.

÷""அதிகார பலத்தாலும், உறுதியான செயல்பாட்டாலும் தான், நாம் உலகின் பெரும்பகுதியை ஆள்கிறோம்; ஆனால் வைஸ்ராய் இர்வின் பயந்தவராக, பலவீனமானவராக நடந்து கொள்கிறார். அப் பலவீனத்தை காந்தி நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்'' என்றார் சர்ச்சில்.

÷26.3.1931 அன்று அரசியல் நிர்ணயகுழுவில் பேசும்போது, தன்னை அறியாமல் அண்ணல் காந்தியைப் புகழ்ந்து விடுகிறார் சர்ச்சில். ஆம்!

÷""காந்தி இந்திய மக்களை முழுமையாக அறிந்தவர்; அவர்களைப் போலவே உடை அணிகிறார்; அவர்கள் உண்ணும் உணவையே தானும் உண்கிறார்; அவர்கள் மொழியிலேயே பேசுகிறார். இதுபற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் தனக்கு வேண்டிய உணவை, வைஸ்ராய் மாளிகைக்குக் கொண்டு வரச் சொல்லி, அவர் முன்னால் உணவருந்துகிறார்! இது பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதியை மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசையே அவமதிப்பதாகும்! அதன் மூலம் சாதாரண இந்திய மக்கள், பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் துணிவைத் தூண்டி விடுகிறார் காந்தி'' என்கிறார் சர்ச்சில்.

÷ஒருமுறை ""காந்தியமும், அதன் அணுகுமுறையும் முழுமையாக நசுக்கப்பட வேண்டும்'' என்றார்.

÷இரண்டாவது உலகப் போரின்போது, பிரிட்டன் கூட்டணி அரசின் பிரதமராகப் பொறுப்பேற்றார் வின்ஸ்டன் சர்ச்சில். அப்பொழுது லேபர் கட்சியைச் சேர்ந்தவர்கள் காந்திஜியின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நம்பினார்கள். ஹிட்லர் முசோலினியின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், பிரிட்டனின் சுதந்திரத்துக்காகவும் போராடும் நாம், இந்தியாவின் சுதந்திரத்தை, காந்தியின் கோரிக்கையை எப்படி மறுக்க முடியும்? எனக் கேட்டார்கள். அந்த வாதத்தின் நியாயத்தையும் சர்ச்சில் ஏற்க மறுத்தார்.

÷வியக்கத்தக்க ஏன்? வருந்தத்தக்க தகவல் ஒன்றும் உண்டு! 1943-ல் காந்திஜி உண்ணா நோன்பு இருந்தபோது, அவர் இறந்துவிடுவார் என்றுகூட எதிர்பார்த்தாராம், நம்பினாராம் சர்ச்சில். எவ்வளவு ஆழ்ந்த வெறுப்பு, கோபம் காந்திஜியின் மீது சர்ச்சிலுக்கு!

÷1944-ம் ஆண்டு காந்திஜி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்து அரசு இந்தியாவிலிருந்து விலகிக் கொள்வதற்கான காலஅட்டவணை தயாரிப்பது தொடர்பாக, காந்திஜியுடன் கடிதப் போக்குவரத்து தொடங்கினார் வைஸ்ராய். அப்பொழுது வெகுண்டெழுந்த சர்ச்சில்:

÷""காந்தி ஒரு துரோகி: சிறையில் தள்ளப்பட வேண்டியவர் அவர். அவரோடு பேசுவதையும், கடிதப் பரிமாற்றம் செய்வதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று கடுமையாகவும், கண்டிப்பாகவும் பேசினார். இந்தியா பற்றி சர்ச்சில் எடுத்த நிலையை, பெரும்பாலான பிரிட்டன் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

÷2002 டிசம்பரில் வெளிவந்த ""நியூ ஸ்டேட்ஸ்மென்'' பத்திரிகை சர்ச்சில் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறது. ""பெரும்பாலான ஆங்கிலேயர்களிடமிருந்து மாறுபட்டு நிற்பவர் சர்ச்சில்; அவர் ஒரு மிக மோசமான பிரிட்டானியர்; மிக மிக மோசமான ராஜ விசுவாசி; இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தவர்; நிறவெறி பிடித்தவர்; காந்தியை வெறுத்தவர்.

÷அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள் இரண்டே தான். அவை: இரண்டாவது உலகப் போரின் போது, தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த இங்கிலாந்தை, வெற்றிப் பாதைக்கு நடத்திச் சென்றது. அடுத்தது இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றது''.

÷அண்ணல் காந்தி ஆயுதம் தாங்கிய படை நடத்தவில்லை; அன்பால், சத்தியத்தால் மக்களை நல்வழிப்படுத்தினார். அண்ணல் காந்தி நோபல் பரிசு பெறவில்லை; ஆனால் அதைவிட உயர்ந்த சிம்மாசனம் ஆன ""மக்கள் இதயங்களில்'' இடம் பிடித்தார்; உலக அமைதிக்கு வழிவகுத்தார். இந்தியாவுக்கு அஹிம்சை வழியில் விடுதலை தேடித் தந்தார்; இலங்கையும், பிற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளும் விடுதலை பெற வழிவகுத்தார். மகான் புத்தரைப் போல், ஏசுநாதரைப் போல் மக்கள் நல்வழிப்படுத்தினார். தனக்காக வாழாமல் உலகுக்காக வாழும் உத்தமர் ஆனார். உலகம் போற்றும் ""மகாத்மா'' ஆனார்.

÷""காந்திஜி, சர்ச்சில் - இருவரில் எவர் பெரியவர் உயர்ந்தவர் என்ற ஆய்வு தொடங்கினால், காந்திஜியோடு போட்டியிடுவதற்கு எவ்விதத்திலும் தகுதியில்லாதவர் சர்ச்சில்'' என்கிறார் ஏ.ஏ. கில் என்ற ஆங்கில எழுத்தாளர்.

கனிந்து வரும் "மா'

உலகிலேயே அதிகளவு மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா மட்டுமே. ஆண்டுக்கு 125 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியானபோதிலும், ஏற்றுமதி செய்யப்படும் அளவு 1 விழுக்காட்டுக்கும் குறைவு. இப்போது 83 ஆயிரம் டன்களாக இருக்கும் ஏற்றுமதி அளவு அடுத்த நிதியாண்டில் (2010-11) 90 ஆயிரம் டன்களாக உயரும் (அதாவது 8 விழுக்காடு அதிகமாக இருக்கும்) என்று அபேடா (வேளாண் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி ஆணையம்) எதிர்பார்க்கிறது.

தமிழ்நாட்டில் 2001-02-ம் ஆண்டில் 1.10 லட்சம் ஹெக்டேரில் மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 4.38 லட்சம் டன்கள்தான் உற்பத்தியானது. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 1.62 லட்சம் ஹெக்டேரில் 9 லட்சம் டன்கள்தான் உற்பத்தி செய்கிறோம். ஆனால் ஆந்திரமும், உத்தரப் பிரதேசமும் நம்மைவிட நான்கு மடங்கு உற்பத்தி செய்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை முக்கனி என்று சொன்னால் அவை மா, பலா, வாழை. அந்த அளவுக்கு மாம்பழத்தின் புகழ் இருந்தாலும், இந்திய அளவில் தமிழகத்தின் உற்பத்தி என்ன என்று பார்த்தோமேயானால், முதல் 5 இடத்தில்கூட தமிழகம் இடம்பெற முடியவில்லை. ஏன் இந்த நிலை? என்றால் நம் பலத்தை நாம் அறியவில்லை அல்லது நம் தமிழர்களுக்கு அறிவிப்பார் யாருமில்லை.

பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பது தமிழர் வழக்கம். அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும். வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்த அளவுக்கு அனுபவ ஞானம் இருந்தாலும்கூட, மாம்பழத்துக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், தானே முன்னின்று செயல்படுத்தவும் தமிழக அரசு இத்தனை காலம் தயங்கி நின்றதால் தமிழகத்திலிருந்து மாம்பழ ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் எடுபடாமலேயே போய்விட்டன.

உலகச் சந்தையில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில். உணவு மேசையில் வைக்கக்கூடிய சுவையான பழங்களில் மாம்பழமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டின் வேளாண் துறையின் பழமரங்கள் துறை அதிகாரிகளை சேலத்துக்கு அழைத்து வந்து, அவர்களது தொழில்நுட்பத்தைச் சொல்லித் தரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இப்போதாகிலும் இப்படியொரு முயற்சி செய்யப்பட்டுள்ளதே என்பதற்காக தமிழக அரசைப் பாராட்டத்தான் வேண்டும்.

இஸ்ரேல் நாட்டின் வல்லுநர்கள் சேலம் மட்டுமன்றி மாம்பழம் எங்கெல்லாம் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அந்த இடங்களுக்குச் சென்று, விவசாயிகளிடம் இஸ்ரேலிய தொழில்நுட்ப அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு விளையும் மாம்பழத்தின் டன் அளவு அதிகரிக்கும். இப்போது தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேருக்கு 5.52 டன் மாம்பழ விளைச்சல்தான் உள்ளது. இது சராசரி இந்திய அளவான ஒரு ஹெக்டேருக்கு 6.2 டன் என்பதைவிட குறைவு. இதற்குக் காரணம், மாம்பழச் சாகுபடியில் நாம் புதிய சாகுபடி முறைகளைக் கையாளத் தவறிவிட்டோம் என்பதுதான்.

இஸ்ரேலில் மொத்தம் சுமார் 2,000 ஹெக்டேரில்தான் மாம்பழச் சாகுபடி நடைபெறுகிறது என்பதும், அங்கே ஒரு ஹெக்டேருக்கு 25 முதல் 30 டன்கள் வரை மாம்பழம் விளைகிறது என்பதையும் இஸ்ரேலிய நாட்டின் வேளாண் அலுவலர்கள் சொல்லும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது.

அதே அளவுக்கு உற்பத்தி தமிழ் மண்ணிலும் கிடைக்கும் என்பது உறுதியில்லை. ஆனால், ஒரு ஹெக்டேருக்கு சில டன்கள் விளைச்சல் அதிகரித்தாலும்கூட, மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சியை மாம்பழ வியாபாரிகள் பெற முடியும். மேலும், இந்த மண்ணில் விளையும் பழங்களுக்கு அரிய சுவையும் மணமும் உள்ளது என்பதுதான் சிறப்பு. இந்தச் சிறப்பை இழக்காமல், விளைச்சலை மட்டும் மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்யவேண்டும். மேலை நாடுகளில் உரம்போடாத மரங்களில் விளையும் பழங்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் அத்தகைய பூச்சிமருந்து இல்லா மாம்பழ உற்பத்திக்கும் ஊக்கப்படுத்த வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் விளையும் துஷேரி ரக மாம்பழம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதில் நாம் பின்தங்கிவிட்டோமோ என்றே தோன்றுகிறது.

உ.பி., பிகார் மாநிலங்களில் சில கிராமங்களில் இப்போதும்கூட ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தவுடன் ஒரு மா மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 15 ஆண்டுகளில் அந்த மரத்தில் மாம்பழம் கிடைக்கத் தொடங்கிவிடும். அந்தப் பணத்தை அப்படியே சேமிப்பாக வைத்து, அப்பெண் குழந்தையின் கல்யாணத்தை முடித்துவிடுவதால், அந்தக் கிராமங்களில் பெண்குழந்தைகள் பிறந்தால் யாரும் கவலைப்படுவதே இல்லை என்ற செய்தியைப் படிக்கும்போது, நம் கிராமங்களில்-ஏன் இந்த நிலைமை ஏற்படவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

மாங்காயை மிக மலிவாக வாங்கி அவற்றை ரசாயனக் கல் வைத்துப் பழுக்க வைத்து சந்தையில் விற்கும் பேராசை வியாபாரிகளிடம் சிக்கியுள்ள மா சாகுபடியாளர்களுக்கு, பழமாக விற்கவும், பிரத்யேகமான பழ மரங்களைச் சாகுபடி செய்யவும் ஊக்கப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இப்போது புதிய தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ளும் விவசாயிகள் பலனைக் காண்பதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதற்குள்ளாக மாம்பழ ஏற்றுமதி, மாம்பழக்கூழ் தொழில்கள் பற்றிய அறிவை நம் மா சாகுபடியாளர்களிடம் ஏற்படுத்தவும் வேண்டும்.

தோல்விக்குப் பின்னால்...

செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பாதை மாறியதால், அது மண்ணில் விழுந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வானிலேயே வெடித்துச் சிதறும்படிச் செய்தனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்புவதில் தோல்வியடைந்திருக்கிறோம்.

1979-ம் ஆண்டு முதலாக 7 முறை செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஏவப்பட்டு, நான்கு முறை தோல்வி அடைந்திருக்கிறோம். இத்தகைய தோல்விகள் வளர்ந்த நாடுகளிலும் ஏற்படுவது உண்டு. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பெரிய இழப்பு. தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் மதிப்பு ரூ. 125 கோடி. சென்ற ஏப்ரல் மாதம், பாதை தவறி கடலில் விழுந்த ராக்கெட்டின் மதிப்பு ரூ. 150 கோடி.

இதற்காக நம்பிக்கை இழந்து செயற்கைக்கோள்களை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல அர்த்தம். இத்தகைய முயற்சிகளை நாம் நிறுத்த முடியாது, நிறுத்தவும் கூடாது. இத்தகைய அறிவியல் சாதனைகள்தான் நம்மை உலக அரங்கில் தலைநிமிர வைக்கும். பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய அறிவியல் வளர்ச்சிதான் ஒரு வளரும் நாட்டுக்கு முக்கிய அடையாளம் என்பதை மறுக்க முடியாது.

ஏன் மீண்டும் மீண்டும் இத்தகைய தோல்வியை இந்தியா சந்திக்க நேர்கிறது என்பதை மிகத் துல்லியமாக, நுட்பமாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது மிகமிக அவசியம். இதற்காக இரண்டொரு நாளில் ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ராக்கெட் விண்ணுக்குச் செலுத்தியபோதும் இத்தகைய குழு அமைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும்கூட இப்போது புதிதாக ஒரு தவறு ஏற்பட்டு, அதன் காரணமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்த முடியாமல் போயுள்ளது.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் தேவையான முன்னேற்றம் காணவில்லை என்பது வெளிப்படை. தற்போது நாம் விண்ணில் செலுத்திக்கொண்டிருக்கும் ராக்கெட்டுகளில் ரஷியாவிடம் பெற்ற கிரையோஜெனிக் இன்ஜின்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன. புவியீர்ப்பு விசையை மீறி, சுமார் 2000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏந்திச்செல்ல வேண்டுமானால், மண்ணிலிருந்து புறப்படும் வேகம் மிகமிக அதிகமாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தொழில்நுட்பமாக கிரையோஜெனிக் இன்ஜின் அமைந்துள்ளது. இந்த முறையும் கிரையோஜெனிக் இன்ஜினை முடுக்கிவிடுவதில் ஏற்பட்ட கோளாறுதான் ராக்கெட் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. சரியாக எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

தற்போது ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்தாலும்கூட, முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு காலத்தால் பின்னடைவு நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த பிரச்னையை அணுக வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

முதலாவதாக, ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொறியியல் மாணவர்கள் எல்லோரையும் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாற்றுகின்றன. நல்ல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் கல்வியை அளிப்பது இல்லை. இதையும் மீறி நல்ல ஆராய்ச்சியாளர்கள் உருவானால் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆளில்லை.

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எங்கள் மாணவர் ஆண்டுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று விளம்பரம் செய்யும் அவலம்தான் கடந்த பத்து ஆண்டுகளில் உருவெடுத்திருக்கிறது. எங்கள் மாணவர் இஸ்ரோவில் சேர்ந்திருக்கிறார் என்றோ, டிஆர்டிஓ-வில் ஆராய்ச்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றோ, கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்திருக்கிறார் என்றோ சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மட்டுமல்ல, அரசும் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்திவிட்டது.

இரண்டாவதாக, ஆராய்ச்சியாளர்களைவிட அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறுவது எல்லா நிலைகளிலும் ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சியாளர் நியமனங்களில்கூட, அமைச்சருக்கும் ஆட்சியாளர்களுக்கும் வேண்டியவர், தகுதியில் சற்று பின்தங்கியிருந்தாலும்கூட தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் இவர்கள்தான் சில ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்று, பொறுப்பான பதவிகளில் அமர்கிறார்கள். அப்போது இவர்களது திறமைக்குறைவு எல்லாவற்றின் மீதும் படிகிறது.

மூன்றாவதாக, ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இஸ்ரோ என்றாலும், புதிய பீரங்கிகளை உருவாக்கும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானாலும் (டிஆர்டிஓ) தங்களுக்குத் தேவையான மிகச் சிறு கருவிகளையும் வெளியில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தம் மூலமாகவே பெறுகின்றன. இத்தகைய அயல்பணி ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிற்கூடம், தரத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான தொழிற்கூடமாக இருந்தால் மட்டுமே, ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் பயனுறும். இதில் ஒரு சிறிய பாகத்தை தரக்குறைவான தொழிற்கூடத்திடம், அரசியல் நிர்பந்தம் அல்லது மேலதிகாரியாக இருக்கும் ஆராய்ச்சியாளரின் நிர்பந்தம் காரணமாக ஒப்பந்தம் கொடுத்து, செய்து வாங்கினால், இத்தகைய தோல்விகள் ஏற்படவே செய்யும்.

லாடம் சரியில்லாவிட்டால் குதிரை சரியாக ஓடாது. குதிரை சரியாக ஓடாவிட்டால் அதன் மீது அமர்ந்துள்ள ராணுவ வீரன் சரியாக சண்டையிட முடியாது. வீரன் சண்டையிட முடியாவிட்டால், போரில் தோல்வி தவிர்க்க முடியாதது. தரத்துக்கும் அறிவுக்கும் முன்னுரிமை தரப்படாவிட்டால் இதுபோன்ற தோல்விகளைத் தவிர்க்க இயலாது.

Wednesday, December 22, 2010

வளர்ச்சி முக்கியமாயிற்றே!

புவிவெப்பமாதல் தடுப்பு நடவடிக்கையில், முதல்முறையாக இந்தியா தனது உறுதியான முடிவை அறிவித்துள்ளது. மெக்ஸிகோ, கான்குன் நகரில் நடைபெறும் ஐ.நா. புவிவெப்ப தடுப்பு நடவடிக்கை மாநாட்டில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சட்டப்படியான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா, சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றோ, புவிவெப்பம் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. இருப்பினும் இத்தகைய முடிவுக்கு, இந்தியாவில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டியிருப்பதே காரணம்.

இவ்வளவு வெளிப்படையாக உலக அரங்கில் பேச வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் சீனா. அண்டை நாடான சீனா, வளிமண்டல மாசுக்கான வாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் யாரும் தன்னை நிர்பந்திக்க முடியாது என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு இணையான தொழில்போட்டியில் உள்ள சீனா இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டுவிட்ட பிறகு, அதேபோன்ற நிலைப்பாட்டை ஏற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியில் பெருந்தடைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே, சீனாவுக்கு இணையான காய் நகர்த்தல் என்றே இந்த முடிவை நாம் ஏற்கவேண்டியுள்ளது.

புவி வெப்பமடைதலால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க வேண்டுமானால், புவிவெப்பம் அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸýக்கு மேலாக உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும் என்றும் கியோட்டோ தீர்மானத்திலும், அதன்பின்னர் கோபன்ஹேகனில் நடைபெற்ற மாநாட்டிலும் பேசப்பட்டன.

இந்த இலக்கை அடைவதற்கு மிக அடிப்படையான தேவை தொழில் மாசுக் கட்டுப்பாடுதான். தொழிற்சாலைகள் கரியமில வாயு உள்ளிட்ட வளிமாசு வாயுக்களை வெளியேற்றும் பழைய தொழில்நுட்ப நடைமுறைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும். இத்தகைய நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதென்பது அமெரிக்காவுக்குச் சாத்தியமானது என்றாலும், வளரும் நாடுகளுக்கு மிகப் பெரும் பொருள்செலவைத் தரக்கூடியது. இத்தகைய மாறுதல்களைப் புகுத்தும்போது சில தொழில்களில் ஆள்கள் குறைக்கப்பட நேரும். வேலையிழப்பு ஏற்படும். சில தொழில்கூடங்களை முற்றிலுமாக இழுத்து மூடவேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இத்தகைய முடிவுகளைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். தடாலடியாகப் புகுத்தினால் குழப்பமும், தொழிலாளர் வாழ்க்கைச்சீரழிவும்தான் எதிர்வினையாக முடியும்.

இத்தனை ஆண்டுகளாக வளிமண்டல மாசுக்கு அடிப்படைக் காரணமாகிய அமெரிக்கா இன்று நல்லபிள்ளை நானே என்று கூறிக்கொண்டாலும், தன் நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட முன்வருவதில்லை. வளரும் நாடுகளால்தான் அதிக மாசு என்று கூறி, அவர்களுக்குப் புத்தி சொல்கிறது. நிதி தருகிறேன் தொழில்நுட்பத்தை மாற்றுங்கள் என்று சொல்கிறது. இந்தியாவுக்கு இவர்கள் தருவதாகச் சொல்லும் நிதியுதவி வெறும் வழிச்செலவு மட்டுமே.

குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக, இந்த நிதியைப் பெறும் நாடுகளில் வளிமண்டல வாயு வெளியேற்றம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சட்டப்படியாக கண்காணிப்போம் என்கிற நிபந்தனையையும் விதிக்கிறார்கள். இது ஒரு மறைமுகமான நெருக்கடி ஆகும். சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு இணையாக தொழில் போட்டியை நடத்த முடியாமல் பின்தங்கிப் போகும் சூழலுக்கு இட்டுச்செல்லும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய முடிவை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்கூடங்களையும் நவீனப்படுத்த போதுமான நிதி நம்மிடம் இல்லை. மேலும், இதற்காக தொழில் மேம்பாட்டுநிதி ஏற்படுத்தினாலும், அதைத் தின்பவர்கள் வழக்கமான போலிகளும், ஊழல் பேர்வழிகளாகவுமே இருப்பார்கள். இன்றைய சூழல் அப்படியாக இருக்கிறது. இந்தியாவில் இயல்பான தொழில்நுட்ப மாற்றத்தை நிகழ்த்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில்துறைக்கு சக்தி தந்து, அவர்கள் மாறும்படிச் செய்யும்நடைமுறைக்குச் சில ஆண்டுகள் அவகாசம் தேவை. புவி வெப்பமாதல் மிகமுக்கியமான பிரச்னை என்றாலும், இந்தியாவின் வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள மக்கள் தொழில்வாய்ப்பை இழக்காமல் இருப்பதும் முக்கியம்.

உலகச்சுற்றுச்சூழல்மீது இந்தியாவுக்கும் கவலையும் கரிசனமும் இருக்கவே செய்கிறது. ஆனால், இதனை எங்கள்மீது மட்டும் திணிக்காதீர்கள் என்பதுதான் இந்த வெளிப்படையான அறிவிப்பின் பொருள்.

Monday, October 25, 2010

பிரதமர் ஜப்பான் பயணத்தால் தென்மாநிலங்களுக்கு லாபம்: சீனாவால் சாதகம்

பிரதமர் ஜப்பான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் பெரிய அளவு உறவு நெருக்கம் இல்லாத நிலையில் பிரதமர் மன்மோகன், "கிழக்காசியாவின் பக்கம் கவனம்' என்ற கருத்தில் ஜப்பான், வியட்னாம், மலேசியாவிற்கு மேற்கொண்ட பயணம், பொருளாதார அடிப்படையில் பயன் தரும். சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன், ஜப்பான் பிரதமர் நயாடோகனுடன் நடத்திய பேச்சுக்கள் பெரிதாக பலன் தரும் என்ற எதிர்பார்ப்பில்லை.ஆனால், சீனாவின் பொருளாதார அணுகுமுறையில் திருப்தியில்லாத ஜப்பான், இந்தியாவின் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், இதுவரை, "அபூர்வ கனிம வளங்களுக்கு' சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் ஜப்பான், இந்தியா பக்கம் தன் கவனத்தை திருப்ப முன்வந்திருக்கிறது.

இம்மாதிரி கனிமங்கள் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகம் என்று சர்வதேச மதிப்பீடு அறிக்கை தெரிவிக்கிறது.அருணாச்சல் மாநிலத்தில் அர்த்தமற்ற முறையில் உரிமை கொண்டாடும் சீனா, நமக்கு தொந்தரவு தருவதற்கு அந்த விஷயத்தை முக்கியத்துவப்படுத்துகிறது. அதே போல, ஜப்பான் தீவுகளில் சிலவற்றிலும் அர்த்தமற்ற உரிமை கொண்டாட விரும்பும் சீனாவை, ஜப்பான் விரும்பவில்லை.ஆகவே, இந்தியாவில் உள்ள "அபூர்வ கனிம வளங்களை' வாங்கிக் கொண்டால், அதற்கேற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தினால், அது நீண்ட காலத்திற்கு தனது புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவிடும் என்று ஜப்பான் கருதுகிறது. அந்த அடிப்படையில் தொழில் துறை பயன்பாட்டிற்காக, "பெங்களூரு - சென்னை' இடையே அதிவிரைவு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி உதவ நிதி தரவும் தயாராக இருக்கிறது.

ஆகவே, பிரதமர் மேற்கொண்டிருக்கும் ஜப்பான் பயணம் உடனடியாக பலன் தரும் வகையில் பரபரப்பு இருக்காது என்றாலும், நீண்ட கால அடிப்படை உறவில், தொழில் வளர்ச்சியில், பொருளாதார வளர்ச்சியில் வளம் காட்ட வழிவகுக்கும் என்ற கருத்து உருவாகியிருக்கிறது. அதுவும் தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் புதிய தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

மரங்களை வளர்ப்போம்

நம்நாட்டில் மொத்த நிலப்பரப்பு 32.87 லட்சம் சதுர கிலோ மீட்டர். இதில் 7.75 லட்சம் சதுர கிலோ மீட்டரில் வனப் பகுதிகள் உள்ளன. இது மொத்த நிலப்பரப்பில் 23.75 சதவீதமாகும். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33.33 சதவீதப் பரப்பளவை வனப் பரப்பாக ஏற்படுத்த வேண்டும் என்பது தேசிய வனக் கொள்கையாகும்.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1.30 லட்சம் சதுர கிலோ மீட்டர். அதில் 22,877 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு வன நிலமாகும். இது தமிழகத்தின் நிலப்பரப்பில் 17.59 சதவீதமாகும்.

இன்னும் 11.4 கோடி மரங்கள் வளர்க்கப்பட்டால்தான் வனப்பரப்பளவு 33 சதவீதத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. உலக வெப்பமயமாதலைத் தவிர்க்க மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற பிரசாரமும் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் மரம் வளர்ப்பதற்காக "சமூகக் காடு வளர்ப்புத் திட்டம்' போன்ற திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

அரசு, அமைச்சர்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் அவ்வப்போது மரக் கன்றுகள் நடும் விழாக்கள் நடைபெறுகின்றன.

ஆனால், இவையெல்லாம் மரம் வளர்ப்பதில் பெரிய வெற்றியைக் கொடுத்தனவா? என்று கேட்டால், இல்லை என்பதே நிதர்சனம்.

மரம் வளர்ப்பதில் பொதுமக்களின் நேரிடையான பங்கு இல்லாததே இதற்குக் காரணம்.

நகரப் பகுதிகளில் மரம் வளர்க்க இடம் இல்லை. கிராமப்பகுதியில் மட்டுமே மரம் வளர்க்க முடியும். சாதாரண விவசாயிகள் பெரும்பாலும் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை மட்டும் பயிர் செய்கின்றனர். அப்படிப் பயிர் செய்யும் வயல் வரப்பில் தங்களுடைய வீட்டுத் தேவைக்காக ஒரு சில தென்னை, மா மரங்களை வளர்க்கின்றனர்.

அதிக அளவில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் ஏக்கர் கணக்கில் தென்னை, மா போன்ற மரங்களை வளர்க்கின்றனர். சாதாரண மக்களை மரம் வளர்க்கும் திட்டத்தில் இணைப்பது எப்படி என்று அரசு, சமூக சிந்தனையாளர்கள், உளவியலாளர்கள் இதுவரை சிந்திக்காதது ஏன் என்பதும் கேள்விக்குரியது.

ஒவ்வொரு கிராமத்திலும் அரசுக்குச் சொந்தமான இடங்கள் நிறைய உள்ளன. அந்த இடங்களில் கிராம மக்களைக் கொண்டே மரங்கள் வளர்க்கலாம்.

அரசுக்குச் சொந்தமான இடத்தை ஒரு கிராமத்துக்கு என்று பொதுவாக ஒதுக்கி, அதில் ஒவ்வொரு குடும்பமும் தலா 10 அல்லது 20 மரங்களை வளர்த்துக் கொள்ளலாம் என உத்தரவிடலாம்.

20 ஆண்டுகள் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் விளைபொருள்களை மரத்தை வளர்ப்பவர்கள் அனுபவிக்கலாம். ஆனால், வளர்ந்த மரங்களை வெட்டக் கூடாது என்று அறிவிக்கலாம்.

உதாரணத்துக்கு, தென்னை மரம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விளைச்சல் கொடுக்கும் என்று வைத்துக் கொண்டால், அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் மகசூல் விவசாயிக்கே சொந்தமாகும்.

நிலமற்ற ஏழை விவசாயிகள், குறு, சிறு விவசாயிகள் 15 ஆண்டுகளுக்கு 20 தென்னை மரங்களிலிருந்து வருமானம் கிடைக்கும் என்றால் ஏன் மரம் வளர்க்க வர மாட்டார்கள்?

நேரிடையான பலன் கிடைக்கும் என்றால் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.

இதைப் போலவே கல்லூரி மாணவ, மாணவிகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தலாம். ஒவ்வொரு கல்லூரிக்கும் சில ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அங்கு மரங்களை மட்டும் வளர்க்க வேண்டும். அதுவும் மாணவ, மாணவிகள் நேரிடையாகச் சென்று வளர்க்க வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒரு கல்லூரியில் 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அந்தக் கல்லூரிக்கு 500 மரங்கள் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும். வாரம் முழுவதும் சுழற்சி அடிப்படையில் மாணவர்கள் நேரிடையாகச் சென்று மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

பள்ளி, கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் முதல் நாளே ஒரு மரக்கன்றை நட்டு வைக்க வலியுறுத்தலாம். அந்த மரத்துக்கு அந்த மாணவரின் பெயரையே சூட்டலாம். இதன் மூலம், அந்தக் மரக்கன்றைப் பராமரிப்பதில் மாணவர்களிடையே ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிக் காலங்கள் முடியும் வரை அந்த மரத்தைப் பராமரிக்க அறிவுறுத்தலாம்.

இப்படிச் செய்வதால் மரம் வளர்ப்பதோடு, இளைய தலைமுறையினரிடம் மரம் வளர்ப்பது குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும்.

தொழிற்சாலைகள் பெருகி வரும் சூழ்நிலையில், ஒவ்வொரு தொழிற்சாலையும் ஒரு குறிப்பிட்ட ஏக்கரில் மரம் வளர்க்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரலாம்.

எல்லாம் கேட்பதற்கு நல்லா இருக்கு... ஆனால் நடைமுறையில் நிறைய பிரச்னைகள் வருமே என்ற கேள்வி எழலாம்.

மரம் வளர்க்கிறேன் என்று இடத்தை வாங்கிக் கொண்டு சிறிது காலம் கடமைக்குச் சில மரங்களை வளர்த்துவிட்டு பிறகு, அந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தினால் என்ன செய்வது?

மரம் நன்றாக வளர்ந்து 20 ஆண்டுகள் பலன் தந்த பின்னர் அந்த மரங்களில் இருந்து வரும் விளைச்சல் யாருக்குச் சொந்தம்?

இப்படி நடைமுறைச் சிக்கல்கள், கேள்விகள் நிறைய எழலாம்.

முறையாகச் சிந்தித்து, தெளிவாக முடிவெடுத்தால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

சீனப் பூனைக்கு யார் மணி கட்டுவது?

ஆசியப் பிராந்தியத்தில் சீனா வல்லமை மிக்க நாடாக பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் வளர்ந்துவிட்டது. அதைச் சுற்றியிருக்கும் நாடுகளான "இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் பொருளாதாரத்திலும், ராணுவ ரீதியிலும் வளர்வது அதன் கண்களை உறுத்துகிறது.

ராணுவ ரீதியாக மோதி தன் வலிமையைக் காட்ட விரும்பாத சீனா, ராஜதந்திர ரீதியாகக் காய் நகர்த்துகிறது. ஆசியப் பிராந்தியத்தின் நிகரற்ற சக்தியென்று தன்னை நிரூபிக்க அரும்பாடுபடுகிறது. இதற்கு அதனுடைய சக்தியை விரயம் செய்யாமல் எடுபிடிகள் போலுள்ள நாடுகளான பாகிஸ்தானையும், வடகொரியாவையும் லாகவமாகப் பயன்படுத்துகிறது.

உலகச் சந்தையில் அமெரிக்க தயாரிப்புகள் அதிகம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றின் விலையோ மிக அதிகம். அடுத்தபடியாக ஜப்பான், தென் கொரியா, இந்தியா இவை மூன்றும் அசுர வேகத்தில் சீனப் பொருளாதாரத்துடன் போட்டி போடுகின்றன. சீனாவோ இவற்றின் வேகத்தை முடக்க நினைக்கிறது.

ஒரு மனிதனுக்கு பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை இம்மூன்றில் எது வந்தாலும் அவன் வளர்ச்சியானது முடிந்துவிடும். இது நாட்டுக்கும் பொருந்தும், வீட்டுக்கும் பொருந்தும், ஹிட்லருக்குப் பிடித்தது மண்ணாசை. அவர் உயிர் விடுவதற்கும் அதுதான் காரணம். ஜப்பான் தன் நெஞ்சில் இரண்டு அணுகுண்டுகளைச் சுமந்த வலி இன்னும் மறையவில்லை. இது வரலாறு சொல்லும் உண்மை.

இந்த பாணியை சீனா இப்பொழுது கையில் எடுத்துள்ளது. ஆனால் வேறு பாதையில்.

ஜப்பான், சீனா எல்லையை ஒட்டியுள்ள மூன்று தீவுகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது. தைவான் தனக்குக் கீழ்ப்படியாமலிருப்பதால் அதனை விழுங்கக் காத்திருக்கிறது. தென் கொரியாவை வளைக்கத் தன் கைப்பிள்ளை வடகொரியாவை ஏவி ரகளை செய்கிறது.

இந்தியா மீது ஒரு கண் வைக்க பாகிஸ்தானைத் தயார்படுத்தி வைக்கிறது. இப்படி ஆசியப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையைத் திரை மறைவிலிருந்து சீனா அரங்கேற்றி வருகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் செய்த நேர்முகப் போரை விரும்பாமல் ராஜதந்திர ரீதியில் தன் கைப்பிள்ளைகளை ஏவி வேலை செய்கிறது சீனா. பர்மா மக்களின் துயரம் மிக மிக அதிகம். ஜனநாயகம் மலர மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், பர்மா ராணுவம் விரும்பவில்லை. பர்மாவை ஒட்டியுள்ள நாடு இந்தியா. இதற்குள் எளிதாக ஊடுருவ முடியும் என்ற வழி ஒன்றுக்காகவே பர்மா மீது காதல் சீனாவுக்கு.

1962-ல் இந்திய - சீனப்போரில் இந்தியா இழந்திட்ட பகுதி இப்பொழுதுள்ள கேரள மாநில அளவுதான். இதை சீனா இந்தியாவுக்கு விட்டுத் தருமா? உலகமே எதிர்த்தபோது திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. அதை சுதந்திர நாடாக அறிவிக்குமா?

அருணாசல பிரதேசத்தை சீனா தனக்குச் சொந்தங் கொண்டாடுகிறது. ஜப்பானுடன் மூன்று தீவுகளுக்கு இப்போது தள்ளு முள்ளு. இப்படி தனக்கொரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா? ஜப்பான் சீனாவில் செய்துள்ள முதலீடுகள் மிக அதிகம். அதை இழக்க விரும்பவில்லை சீனா. இதற்காகச் சமாதானப்படுத்த சில ஜப்பான் மீனவர்களை விடுதலை செய்துள்ளது சீனா. நேரடி மோதல் முடியாவிட்டால் தன் கைப்பிள்ளை வடகொரியா மூலம் ஹிம்சைதர ஆரம்பிப்பது அதன் வழக்கம்.

இப்படி ஆசிய பிராந்தியத்தில் தன் நிலம் என்று உரிமை கொண்டாடும் சீனா இந்திய நிலப்பரப்பை விட்டு விலகுமா? பர்மாவுக்கு இந்தியா தந்த "கோகோ' தீவில் சீன ராணுவத்துக்கு என்ன வேலை?

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு, காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளில் சீனாவுக்கு என்ன அக்கறை? எனினும் சோவியத் ரஷியாவானது 13 நாடுகளாகச் சிதறிய பிறகு உலக அரங்கில் கம்யூனிசத்துக்குத் தலைமை ஏற்றுள்ள சீனா இன்னொரு பனிப்போருக்கு ஆயத்தமாகிவிட்டது.

ஜனநாயகம் அமைதியாக இருக்கத் தெற்கு ஆசியாவில் தன்னைக் காத்துக் கொள்ள இந்தியாவும் தயார் நிலையிலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும். உலக அரங்கில் மற்ற நாடுகளைப் புரிந்துகொள்ளும் இந்தியா சீனாவைப் புரிந்து கொள்ளாதது மிக வியப்பாகவே உள்ளது.

சீனாவின் வலையில் இந்தியா சிக்குவது சாத்தியமில்லை என்று உணர்த்த வேண்டிய தருணமிது. ஜப்பானைப் போன்று சீனாவின் பொருளாதாரம் நம் சந்தையிலுள்ளது. சீனாவின் சகல விதமான வளர்ச்சிக்கு அதன் பொருளாதாரம் மிக முக்கியமான காரணமாகும். ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா இவற்றின் சந்தையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் சீனா தன் கொள்கையிலிருந்து மாறுபட்டு முரண்டு பிடிக்கிறது.

சீனப் பொருள்களின் இறக்குமதிக்கும் அவர்களின் வர்த்தகத்துக்கும் இந்தியா முட்டுக்கட்டை போடுவதன் மூலம் சீனாவுக்குப் பாடம் புகட்டலாம்.

நேரடியாக நம்மால் முட்டுக்கட்டை போட முடியாது. உலக வர்த்தக அமைப்பு யார் வேண்டுமானாலும் எந்தப் பொருளையும் எங்கேயும் விற்கலாம் என்று சொல்கிறது. இதனால் நேரடியாகத் தடை செய்தால் நமக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் தரம் இல்லாத பொருள்களை இறக்குமதி செய்வதில்லை.

மேற்கத்திய நாடுகளும் அப்படியே. அதையும் மீறி இறக்குமதி செய்தால் அதன் மீது அதிகமான வரி விதிக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் உற்பத்திப் பொருள்களைக் காட்டிலும் இறக்குமதிப் பொருள்கள் விலை அதிகம்.

ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. சீனா பொருள்கள் தரம் குறைந்ததாக மலிவு விலையில் நம் சந்தையை நிரப்புகின்றனர். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம். 120 கோடி மக்கள்தொகை சீனாவுக்கு நல்ல லாபத்தைத் தருகிறது. இதற்குப் பலியாவது நல்ல தரத்தில் உற்பத்தி செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்கள். இப்படி நாமும் சீனாப் பொருள்களை மறைமுகமாக வரி மற்றும் தரம் ரீதியாகக் கட்டுப்படுத்தினால் இந்தியாவில் இன்னொரு தொழில்புரட்சி சாத்தியமோ, பொருளாதார ரீதியில் பலம் கொண்டதால் ஆட்டம்போடும் சீனா இனி யாரையும் மிரட்ட முடியாது.

எல்லை தாண்டி வரும் ஆபத்து!

வங்கதேச நலனுக்காகப் போரிட்டு, பாகிஸ்தானிடமிருந்து அந்த நாட்டைப் பிரித்து,பாகிஸ்தானுடன் மேலும் பகையைச் சம்பாதித்து, வங்கதேசம் என்றொரு தேசத்தை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்த இந்திரா காந்தி கனவிலும் நினைத்திருக்க மாட்டார், வங்கதேசத்தால் எதிர்காலத்தில் இப்படியொரு பிரச்னை ஏற்படப் போகிறது என்று.

எப் பிரச்னையால் அன்று பாகிஸ்தானிடம் இந்திரா காந்தி போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டாரோ, அதே பிரச்னைதான் இன்றும். ஆனால் இன்று இருக்கும் தலைவர்களால் எல்லையைத் தாண்டி நாட்டுக்குள் ஊடுருவும் வங்க அகதிகளையும், தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்தக்கூட முடியாத இயலாமை.

நாட்டுக்குள் 2 கோடி வங்கதேசிகள் ஊடுருவிய பின்னர்தான் இவர்களுக்கு எல்லைக் கோட்டில் வேலி அமைக்க வேண்டும் என்ற எண்ணமும், அவர்களைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்கிறது என்றால் இவர்களது கடமை உணர்ச்சியையும், தேசபக்தியையும் எப்படிப் "பாராட்டுவது' என்றே தெரியவில்லை.

அசாம், மேகலயா, திரிபுரா, மிஜோரம் ஆகிய 4 மாநிலங்களில் 4,096 கிலோ மீட்டர் தூரம் உள்ள வங்கதேசத்தின் எல்லை, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது என்றால் அது மிகையல்ல.

தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எல்லையின் வழியாக 1972-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவுக்குள் வந்த 12 லட்சம் வங்கதேசிகள், மீண்டும் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவில்லை என எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கின்றனர்.

அந் நாட்டின் நிலைத்த தன்மையற்ற ஆட்சியால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அகதிகளாக அந்த நாட்டு மக்கள், நமது நாட்டுக்குள் ஊடுருவி வந்தனர். ஆனால் இன்று நிலைமையே வேறு. கஞ்சா, அபின் என போதை வகையறாக்களும், தடை செய்யப்பட்ட சீன நாட்டுப் பொருள்கள், நவீன ரக ஆயுதங்கள், இந்திய கள்ள நோட்டுகள் என அனைத்துப் பொருள்களும் நாடு முழுவதும் தங்குதடையின்றி கடத்தப்பட்டு, கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றன.

இதற்கெல்லாம் மேலாக உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் தீவிரவாதமும், தீவிரவாதிகளும் உலகத்தின் பல பகுதிகளில் பயிற்சிபெற்று, இந்தியாவுக்குள் வங்கதேச எல்லை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகின்றனர். அண்மைக்காலமாக தீவிரவாதத்தின் வாசலாகவே வங்கதேசத்தின் எல்லைப் பகுதி உள்ளது.

எந்த நாட்டில் குண்டு வெடிப்புகள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தாலும் ஏதாவது ஒரு வகையில் அதில் வங்கதேசிகள் சம்பந்தப்படுகிறார்கள் என உள்துறை அமைச்சகம் தனது பங்குக்கு எச்சரிக்கிறது.

ஆனால், நம்ம ஊர் அரசியல்வாதிகளோ, வங்கதேசிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் என ஓர் இந்தியனுக்கு வழங்க வேண்டிய சகல உரிமைகளையும் வழங்கி, அங்கேயும் வாக்கு அரசியல் நடத்துகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் வந்தேறிகளாகக் குடியேறிய வங்கதேசிகள் இப்போது சில பகுதிகளில், அப் பகுதி அரசியலை நிர்ணயிக்கக் கூடிய சக்திகளாக வலுப்பெற்றுள்ளதற்கு வாக்குகளுக்கு விலைபோகும் அரசியல்வாதிகளும், பணத்துக்கு விலைபோகும் அரசு அதிகாரிகளும்தான் முழுக் காரணம்.

வங்கதேசிகளின் ஊடுருவலை நிறுத்துங்கள், அந் நாட்டில் இருந்து மேற்கு வங்கம், அசாம், மிஜோரம், மேகலயா, திரிபுரா மாநிலங்களில் குடியேறி இருக்கும் வங்கதேசிகளைக் கண்டறிந்து, அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

உச்ச நீதிமன்றமே இவ் விஷயத்தில் தலையிட்டு, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியும், நமது அரசோ வங்கதேசிகளைக் கண்டறிவது கடினம் என இரு கைகளையும் முடிந்த அளவுக்கு விரித்துக் காட்டுகிறது. நமது கண்காணிப்பு முறை பலவீனமாக இருப்பதன் காரணமாகத்தான், எல்லை தாண்டும் வங்கதேசிகளைக் கண்டறிவதிலும், தடுப்பதிலும் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுவதாக ப.சிதம்பரம் தான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் கூறினார்.

வங்கதேசிகளை அவர்கள் நாட்டுக்குள் அனுப்புவதற்கு குழுக்களை நியமித்து இருப்பதாகக் கூறுகிறது மத்திய அரசு. ஆனால், எத்தனை வங்கதேசிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற முழுமையான விவரத்தை இதுவரை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு இணையாக, வங்கதேசிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. இப்போது அது 2 கோடியாக அதிகரித்துள்ளது என வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசிகளின் ஊடுருவல் குறித்து ஆய்வு செய்த ஒரு தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டை அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இப்படி வரம்பில்லாமல் வங்கதேசிகள் வந்து குடியேறுவதுபற்றி மத்திய அரசு சிறிதும் லட்சியம் செய்யாமல் இருப்பதை அரசியல் சட்டக் கடமையிலிருந்து மத்திய அரசு தவறியதாகத்தான் கருத நேரும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தும், இவ் விஷயத்தில் அரசு இன்னும் மெத்தனம் காட்டுகிறது.

உதாரணமாக, எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியை 2007-ம் ஆண்டுக்குள் முடிப்பதாகக் கூறிய மத்திய அரசு, இன்னும் அந்தப் பணியை முடித்தபாடில்லை.

இனியும் மத்திய அரசு தனது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லையென்றால், ஊடுருவிய வங்கதேசிகள் இந்தியாவில் உரிமையும் கோருவார்கள்.

Wednesday, October 6, 2010

உலகளவில் அழிந்து போனதாக கருதப்பட்ட கடல் உயிரினங்கள் இனங்கள் கண்டுபிடிப்பு

உலகளவில் முதல் முறையாக கடலில் உள்ள உயிரினங்கள் குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 5 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கருதிய சில உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகளவில் கடலில் எவ்வளவு உயிரினங்கள் உள்ளன என்பது குறித்து இரண்டாயிரத்து 925 கோடி ரூபாய் செலவில் முதல் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டது. கடுங்குளிர் நிலவும் துருவ பிரதேசங்கள் தொடங்கி, வெப்பம் அதிகமுள்ள நிலநடுக்கோடு பகுதி வரை பல்வேறு தட்ப வெப்பநிலையில், அலைகள் வரும் கடற்கரை முதல் கடும் இருள் சூழ்ந்த ஆழ்கடல் பகுதி வரையுள்ள பல்வேறு பகுதிகளில், கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் முதல் உலகில் பெரியதான நீலத்திமிங்கலம் வரை எல்லா உயிரினங்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 10 லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகள் கடலில் இருக்கலாம் என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 7 லட்சத்து 50 ஆயிரம் உயிரினங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின் போது புதியதாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதிய மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் அடித்தளமாக 21ம் நூற்றாண்டு திகழ்வதுடன், புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு; கடல் வாழ் உயிரினங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்; கடல்வழி பாதைகள் ஆகியவை இந்த கணக்கெடுப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பில் 670 நிறுவனங்கள், 2 ஆயிரத்து 700 விஞ்ஞானிகள், 9 ஆயிரம் நாட்களில் 540க்கும் மேற்பட்ட முறை கடலில் பயணம் செய்து 3 கோடி முறை உற்றுநோக்கி ஒரு லட்சத்து 20 ஆயிரம் இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பில் பணியாற்றிய விஞ்ஞானி ஜெஸ்சி அயூசுபெல் கூறுகையில், "உலகில் முதல் முறையாக தற்போது கடல் உயிரினங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு, கடந்த 250 ஆண்டு காலத்தில் மக்களுக்கு தேவையானவற்றை அளிக்கும் அகராதி மற்றும் கலைக்களஞ்சியம் போன்று தகவல்களை கொடுக்கும். கடலில் செய்யப்பட்டுள்ள ஆய்வு மூலம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் கடலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும், எதிர் காலத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிய வந்துள்ளது,' என்றார்.

கணக்கெடுப்பு குழுவை சேர்ந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஐயன் பயனீர் கூறுகையில், "இதுவரை நமக்கு தெரிந்த உயிரினங்கள் தவிர, இதுவரை கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் அதிகளவில் முதல் முறையாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலில் வாழும் உயிரினங்களுக்கு ஒழுங்கான சீதோஷ்ண நிலை, ஆக்சிஜன், அதிகளவு உணவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளன,' என்றார். கணக்கெடுப்பில், 16 ஆயிரத்து 764 இன மீன் வகைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. 5 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கருதிய சில உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இன்னும் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை மற்ற விஞ்ஞானிகளுக்கு அளித்துள்ளது.

நம் கௌரவப் பிரச்னை...

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என்பது ஒரு கௌரவப் பிரச்னை மட்டுமல்ல, உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த விளையாட்டுப் போட்டிகள் வாய்ப்பளிக்கின்றன. அதுமட்டுமல்ல, எந்தவொரு விளையாட்டுப் போட்டி ஒரு நாட்டில் நடைபெறும்போதும், அந்த விளையாட்டுப் போட்டியில் தங்கள் நாட்டு வீரர்கள் உலக சாதனையாளர்களுடன் பங்கு பெறுவதன் மூலம் தேர்ச்சி அடையவும், முடிந்தால் உலக சாதனைகளைப் படைக்கவும்கூட இந்த விளையாட்டுப் போட்டிகள் உதவும் என்பதும் ஒரு காரணம்.

ஏனைய நாடுகள் இதுபோன்ற சர்வதேச உலகப் போட்டிகளை நடத்த முன்வரும்போது, முதல் கட்டமாகத் தங்களது நாட்டில் அந்த விளையாட்டுகளில் வெற்றி வாய்ப்புடைய இளைஞர்களைத் தேடிப் பிடித்துப் பயிற்சி அளிக்கிறார்கள். ஓரளவுக்கு, உலக அரங்கில் போட்டியிடுமளவு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தயாரான பிறகுதான் இதுபோன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தப் பல வளர்ச்சியடையும் நாடுகள் முன்வருகின்றன.

கடந்த முறை சீனாவில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தபோது, அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு விளையாட்டுக்கும் பத்து முதல் பதினைந்து வயதுவரை உள்ள இளைய தலைமுறையினரை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வென்று சீனா உலகையே பிரமிப்பில் ஆழ்த்த முடிந்தது.

இதெல்லாம் நமக்குத் தெரியாததல்ல. நம்மிடம் மனிதவளத்துக்கும் பஞ்சமில்லை. திறமைக்கும் பஞ்சமில்லை. ஆனால், திறமைசாலிகளை முறையாக அடையாளம் கண்டு, கிராம அளவிலிருந்து தொடங்கி போட்டிகள், பயிற்சிகள் என்று முனைப்புடன் செயல்பட இந்தியாவில் நிர்வாக இயந்திரம் தயாராக இல்லாததுதான் நமது குறை.

இந்திய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாதியின் தன்னிலை விளக்கம் முற்றிலும் நிராகரிக்கப்படக்கூடியதல்ல. விளையாட்டு கிராமத்திலுள்ள மொத்தம் 36 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 18 குடியிருப்புகளைத்தான் கட்டி முடித்து ஒப்படைத்திருக்கிறார்கள். இப்போதுதான் அவசரக் கோலத்தில் மீதமுள்ள 18 குடியிருப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. குடியிருப்புகளில் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுதான் ஒலிம்பிக் கமிட்டியின் வேலையாக இருக்க முடியுமே தவிர, குறித்த நேரத்தில் கட்டி முடிப்பது அவர்கள் வேலை இல்லையே. இதற்கான பழியை தில்லி அரசும், மத்திய நகர்ப்புற அமைச்சகமும்தானே ஏற்றுக்கொள்ள வேண்டும்!

சர்வதேச அளவிலான போட்டிகள் நடக்கும்போது, அதன் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகமும், மத்திய விளையாட்டு அமைச்சகமும் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்க வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் தன்மீது எந்தப் பொறுப்பும் சுமத்தப்படக்கூடாது என்பதில் எல்லா பிரிவினரும் உஷாராக இருப்பதன் விளைவுதான், இதுபோன்ற குளறுபடிகளுக்குக் காரணம். தவறுக்குப் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிக்கும் இந்திய சுபாவத்தின் அடையாளத்துக்குக் காமன்வெல்த் போட்டிகள் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டன.

விளையாட்டு வீரர்கள் வரத் தொடங்கிவிட்டனர். இங்கிலாந்திலிருந்து வீரர்கள் வருவதற்கு முன்பே அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காக 20 உதவியாளர்கள் வந்துவிட்டனர். கென்யாவிலிருந்து 112 பேர், நைஜீரியாவிலிருந்து 69 பேர், ஸ்காட்லாந்திலிருந்து 60 பேர் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தில்லி வந்து சேர்ந்துவிட்டனர்.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் கூற்று பொறுப்பின்மையின் உச்சகட்டம் என்றாலும்கூட, கல்யாண முகூர்த்தம் நெருங்க நெருங்க, நாம் குறைகளைக் குத்தித் தோண்டி நாமே நம்மீது சேற்றை வாரி இறைத்துக் கொள்வதைவிட, மணப்பந்தலில் கவனம் செலுத்துவதுதானே நியாயம்? கடைசி நிமிடத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று விட்டேற்றித்தனமாக இருக்கக்கூடாதுதான். ஆனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நெருங்கிவிட்ட நிலையில், இனி நாம் சுறுசுறுப்பாக இயங்கி, முடிந்தவரை இந்தியாவின் கௌரவம் சர்வதேச அளவில் பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடைசி நிமிடத்திலும் நம்மவர்கள் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். இங்கிலாந்து மகாராணி தனது வயோதிகம் காரணமாகப் போட்டிக்கு வர இயலாததால் இளவரசர் சார்லûஸ அனுப்பி வைத்திருக்கிறார். மகாராணி வராததால் போட்டிகளை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று நமது அதிகார வர்க்கம் குரலெழுப்பி வீண் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த காலனிகள் சுதந்திரம் அடைந்த பிறகும், பிரிட்டனுடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக ஏற்பட்டதுதான் "காமன்வெல்த்' என்கிற அமைப்பு. இந்த அமைப்பில் தலைமை வகிப்பது பிரிட்டிஷ் ராஜகுடும்பம். நாம் "காமன்வெல்த்' அமைப்பில் இருந்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் எதுவும் இல்லை. ஆனால், அந்த அமைப்பில் அங்கம் வகித்து, அதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் முற்பட்ட பிறகு, பிரிட்டிஷ் இளவரசர் போட்டிகளைத் தொடங்கி வைக்கக் கூடாது என்று முரண்டு பிடிப்பது அநாகரிகம்.

இதுவரை செய்துவிட்ட குளறுபடிகள் போதுமே. இனிமேலாவது, இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி, கீழ்த்தரமான அரசியலை காமன்வெல்த் போட்டிகளில் அரங்கேற்றாமல், இந்தியாவின் கௌரவத்தையும், காமன்வெல்த் போட்டிகளின் வெற்றியையும் கருத்தில்கொண்டு செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்.

ஊடகங்களும் சரி, சற்று அடக்கி வாசித்தால் நல்லது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் ஒருசில நாள்களே உள்ள நிலையில், நடந்துவிட்டிருக்கும் தவறுகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதைவிட, தவறுகளை எப்படி எல்லாம் திருத்துவது என்பதிலும், கூடியவரை உலக அரங்கில் இந்தியாவின் கௌரவம் காப்பாற்றப்படுவதிலும் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

"ஆதார்' எனும் ஆதாரம்!

இந்தியாவின் முதல் தேசிய அடையாள அட்டை (ஆதார்) மகாராஷ்டிர மாநிலத்தில் ஓர் ஆதிவாசி குடியிருப்பில், ரஜ்னா சோனாவாணே என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதல் தேசிய அடையாள அட்டையை யாரோ ஒரு பெருநகரவாசிக்கு அளிக்காமல், கடைக்கோடியில் உள்ள ஆதிவாசி குடியிருப்பில் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியதுதான்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, முதல் ஆதார அட்டை ஆகஸ்ட் 2010 முதல் பிப்ரவரி 2011-க்குள் வழங்கப்பட்டுவிடும் என்று இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம் அறிவித்த திட்டத்தின்படியே இது நடந்துள்ளது என்பதும்கூட, இவர்கள் சொன்னபடி 2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி மக்களுக்கும் ஆதார அட்டைகளை வழங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தருகிறது.

நகரவாசிகளைவிடவும் மிகவும் முக்கியமாக கிராம மக்களுக்குத்தான் இத்தகைய அடையாள அட்டை தேவையாக இருக்கிறது. ஆதார அட்டையைப் பெற்றுக்கொண்ட முதல் பெண் தனது நன்றி தெரிவிப்பில்கூட, "ஆதாரம் இனி என் வாழ்வின் ஆதாரம்' என்று கூறியிருப்பது மிகமிக உண்மை.

தற்போதைய சூழ்நிலையில் குடும்ப அட்டையை வங்கிகள்கூட ஓர் அடையாளமாக ஏற்கத் தயங்கும் அளவுக்குப் போலி குடும்ப அட்டைகள் மலிந்துவிட்ட நிலையில், எல்லா பயன்பாட்டுக்கும் பொருந்துகின்ற ஆதாரம் போன்ற அடையாள அட்டைகள் மிகமிக அவசியமாகின்றன. பன்னிரண்டு இலக்கங்கள் கொண்ட ஆதார அட்டை எண்ணைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணைப்பை வழங்க முடியும். ஒருவேளை, ஆதார அட்டை எண்ணும் செல்போன் எண்ணும் ஒன்றாக இருக்கும் நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த ஆதார அட்டை உண்மையிலேயே ஏழைகளுக்குத்தான் அடிப்படையான விஷயங்களில் தேவையாக இருக்கிறது. முதலாவதாக உணவு, இரண்டாவதாக மருத்துவம், மூன்றாவதாகக் கல்வி. இந்த அட்டையை வழங்கிப் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஆதாரம் இல்லாத காரணத்தால் ஏழைகளால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை, குடும்ப அட்டை பெற முடியவில்லை. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை. இந்த ஆதார அட்டை அத்தகைய நிலையைப் போக்கும் என்று கூறியுள்ளார். அது உண்மைதான். இருப்பினும், இந்த ஆதார அட்டை வெறும் ஆதாரமாக இல்லாமல், எல்லா பயன்பாட்டுக்கும் தொடர்புடைய ஆவணமாக மாற்றப்பட்டாக வேண்டும்.

இந்த ஆதார அட்டைகளை அடிப்படையாக வைத்து பொருள் விநியோகத்தைத் தொடங்கும்போது, ஏழையின் பெயரைச் சொல்லி உணவு தானியங்களை வேறு இடங்களுக்குக் கடத்தவும், பொது விநியோக மையங்களில் கொடுக்காமல் தவிர்க்கப்படுவதுமான நிலையைத் தவிர்த்துவிட முடியும். மேலும், இந்த ஆதார அட்டையில் இருப்பவர் எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், எந்தெந்தத் தடுப்பூசிகள் அரசால் போடப்பட்டன, இவர் எந்தெந்தத் திட்டத்தில் பயனடைந்தார் என்கிற அனைத்துத் தகவல்களும் - இந்த ஆதார எண்ணைத் தட்டினாலே கணினியில் பார்க்க வகைசெய்ய முடியும். ஆதார அட்டையால் பயன்பெறப் போகிறவர்கள் முழுக்க முழுக்க ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த அட்டை ஒவ்வொரு இந்தியனின் பிறந்த தேதி, தாய் தந்தை, ஊர், மாவட்டம், மாநிலம், ரத்த வகை ஆகியவற்றோடு, ரேகைப்பதிவு அடையாளங்களையும் கொண்டிருக்கும் என்பதால் இதன் பயன்பாடு பலவகைப்பட்டதாக இருக்கிறது.

பெருவிரல் ரேகைப் பதிவு இருப்பதால் இதில் போலிகள் வராது என்றாலும்கூட, நம் அரசு ஊழியர்கள் செய்யும் குளறுபடிகளால் இத்திட்டம் அர்த்தமற்றதாக மாற்றப்படும் அபாயங்கள் உள்ளன. கைரேகைப் பதிவு சரியாக இருந்தாலும் பெயர் மாறுதல், தவறாக அச்சிடுதல், பிறந்த தேதியைத் தவறாகக் குறிப்பிடுதல் என்று எல்லா குளறுபடிகளையும் செய்யும் துணிவும் ஆற்றலும் கொண்டவர்கள் நம் அரசு இயந்திரத்தின் உறுப்புகளாக இருக்கிறார்கள். தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை இதற்கு ஒரு சான்று.

வாக்காளர் அடையாள அட்டைகளுக்காகப் புகைப்படம் எடுத்து, நேரடி சரிபார்ப்பு முடித்தும் பலருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவே இல்லை. தேர்தல் நேரத்தில் வழங்கப்படாமல், எங்கோ ஒளித்து வைக்கப்பட்டு, பிறகு குப்பையில் கொட்டப்பட்ட வாக்காளர் அட்டைகள் பற்றி நிறையச் செய்திகள் வந்தும், எந்தவொரு அதிகாரி, ஊழியர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

வாக்காளர் பதிவேட்டில் உள்ளவருக்கு எப்படி அடையாள அட்டை மட்டும் இல்லாமல் போகும்? அதற்குப் பொறுப்பானவர் யார்? என்கிற விசாரணைகூட இல்லையென்றால், இதற்குக் காரணம் அலுவலர்களின் சோம்பேறித்தனமா அல்லது அரசியல்வாதிகளின் சதியா? எது உண்மை?

வாக்காளர் அடையாள அட்டை வழங்கவில்லை அல்லது தவறான புகைப்படம், பிழையான பெயரில் வழங்கப்பட்டது என்று சொன்னால், வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்வதில்லை.

தொலைந்துபோனதால் வேறு அடையாள அட்டை வழங்கக் கோரும் மனுவைக் கொடுத்து, வாக்காளரைக் குற்றவாளியாக்கும் நடைமுறைதான் தற்போது அமலில் இருக்கிறது.

இதே நிலைமை ஆதார அட்டைக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தவறுக்குக் காரணமான ஊழியர், அதைச் சரிபார்க்கத் தவறிய அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம். அதைச் செய்ய அரசு தயங்குமானால், வாக்காளர் அடையாள அட்டை குழப்பம் போலவே, ஆதார அட்டை அர்த்தமிழக்கும்.

நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, குளறுபடிகளோ, குறைபாடுகளோ இல்லாத, எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய, எல்லா பயன்பாட்டுக்கும் உதவக்கூடிய அடையாள அட்டை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், ஊடுருவல்கள் தவிர்க்கப்படுவது மட்டுமல்ல, சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.

Wednesday, September 29, 2010

தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு

நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முன்னோடி திட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் தேம்ப்ளி எனும் பழங்குடியின கிராமத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வெளிநாட்டவர் ஊடுருவலைத் தடுக்க அடையாள அட்டை அவசியம் உணரப்பட்டது. அத்துடன் அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இத்தகைய அடையாள அட்டை அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்தே அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவதற்காக இன்ஃபோசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி தலைமையில் அடையாள அட்டை வழங்குவதற்கு தனி ஆணையம் அமைக்கப்பட்டதோடு, இத்திட்டத்தைச் செயல்படுத்த பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக மும்பையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தேம்ப்ளி எனும் பழங்குடியின கிராமத்தில் 10 பேருக்கு அடையாள அட்டைகளை பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை வழங்கினார்.

"ஆதார்' (ஆதாரம்) எனப்படும் இத்திட்டம் மிகவும் முன்னோடியானது என்றும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டினார்.

பயோ-மெட்ரிக் அடிப்படையில் அதாவது அடையாள அட்டை வைத்திருப்பவரின் புகைப்படத்தோடு கைவிரல் ரேகையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இத்தகைய முறையில் அடையாள அட்டை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே அடையாள அட்டையாக இது விளங்கும். இதை வழங்கி பிரதமர் மன்மோகன் பேசியது:

தொழில்நுட்பத்தின் பலன் இந்த அளவுக்கு உலகின் வேறெங்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. நாட்டிலுள்ள அனைவருக்கும் வெகு விரைவில் இத்தகைய அடையாள அட்டை வழங்கப்படும். நவீன இந்தியாவின் புதிய தோற்றத்தை வெளி உலகுக்குப் பறை சாற்றுவதாக இந்தத் திட்டம் அமையும். தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றத்தை இது உணர்த்தும்.

சாதாரண மக்களுக்கு அரசின் நலத் திட்டப் பயன் சென்று சேர்வதற்கு இந்த அடையாள அட்டைகள் உதவியாக இருக்கும். இத்தகைய அடையாள அட்டை இல்லாததால்தான் ஏழை, எளிய மக்களால் வங்கிக் கணக்கு தொடங்க முடிவதில்லை, ரேஷன் அட்டை பெற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அடையாள அட்டையில் உள்ள எண் வழங்கப்படும் நபரின் ஆயுள்காலம் முழுமைக்குமானது. இதை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு புலனாகும் என்றார் மன்மோகன் சிங்.

""மிகச் சிறிய கிராமத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் விரைவிலேயே நாட்டிலுள்ள அனைவருக்கும் கிடைக்கும் என்பது மிகப் பெரிய விஷயமாகும். வளர்ச்சி மட்டுமே நமது நோக்கமல்ல. ஒருங்கிணைந்த-ஒட்டுமொத்த வளர்ச்சியே நமது இலக்கு,'' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டார்.

21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்நுட்பத் துறை மிக முக்கிய பங்காற்றும் என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உறுதியாக நம்பினார். அவரது கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயம் மேம்படும். ஏனெனில் நலத் திட்டப் பயன்கள் விரைவாகக் கிடைக்கும். இதன் மூலம் எவ்வித முறைகேடும் நிகழாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Monday, August 30, 2010

நேபாள எப்.எம். (பண்பலை) ரேடியோக்கள் வாயிலாக இந்தியாவிற்கு எதிராக மாவோயிஸ்டுகள் விஷமபிரசாரம்?

நேபாள எம்.எம். ரேடியோ வாயிலாக இந்தியாவுக்கு எதிராக மாவேயிஸ்ட்கள் விஷமப்பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவின் பீகார், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் இத்தகைய நேபாள எம்.எம். ரேடியோக்கள் பரவலாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும், இதனை முறியடிக்க இம்மாநிலங்களில் கூடுதல் இந்திய எப்.எம். ரேடியோ நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பீகார், உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நேபாள நாட்டு எப்.எம். ரேடியோக்கள் மக்களிடையே நன்கு செல்வாக்கு பெற்றுள்ளன.இம்மாநிலத்தில் உள்ள கிராம, பழங்குடியின மக்கள் நேபாள எம்.எம்.ரேடியோக்களை விரும்பி கேட்கின்றனர். மேலும் நோபளத்தில் மாவோயிஸ்ட்டுகள் அந்நாட்டு அரசியலில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால். இந்த அமைப்புகள் நேபாள எம்.எம். (பண்பலை) ரேடியோ வாயிலாக இந்தியாவிற்கு எதிராக விஷமப்பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே இம்மாநிலங்கள் மாவோயிஸ்டுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் ரேடியோ வாயிலாக பரப்பப்படும் மாவோயிஸ்டு பிரசாரமாக ஓடுக்குவதற்கு மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இத்தகைய அனுமதியற்ற முறையில் ஓலிபரப்பப்படும் எப்.எம்.ரேடியோக்களை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தது. மேலும் நேபாள எப்.எம். ரேடியோக்களுக்கு போட்டியாக மத்திய அரசு இந்த மாநிலங்களில் கூடுதல் எப்.எம். ரேடியோ நிலையங்களை தொடங்க, அகில இந்திய வானொலிக்கு ரூ. 100 கோடியினை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒதுக்கியிருந்தது. இதே போன்று பாகிஸ்தான் டி.வி.சானல்கள் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும், இதனை முறியடிக்க இம்மாநிலத்தில் இந்திய டி.வி. சானல்கள் அம்மாநில குக் கிராமம் வரை தெரிவதற்காகக கூடுதல் சக்தி மிக்க டிரான்ஸ்மீட்டர் பொருத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூக்கை நுழைக்கிறது சீனா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்கிட்டில், சீனா தன் மக்கள் விடுதலை ராணுவ வீரர்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்துள்ளது. இதை, சர்வதேச கொள்கை மையம் என்ற அமைப்பின் ஆசியத் திட்ட இயக்குனரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, சீனாவின் செயல்களில் அதிக எச்சரிக்கை காட்டுகிறது இந்திய அரசு.

அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்று கூறி அதற்கான வரைபடங்களில் குழப்பம் ஏற்படுத்தி வரும் சீனா, ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலும் தற்போது மூக்கை நுழைக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே, அம்மாநிலத்திலிருந்து சீனாவுக்குச் செல்பவர்களுக்கு, அம்மாநிலம் இந்தியாவுக்கு தொடர்பில்லாத தனிப்பகுதி என்று குறிப்பிடும் வகையில் முத்திரை பதித்து விசா வழங்கியது. இது ஸ்டேபிள் விசா நடைமுறையாகும்.

இந்தியா தலையிட்டு இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்த பின்பு, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து செல்பவர்களுக்கு வழக்கம் போல் விசா வழங்கும் சீனா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவருக்கு மட்டும் விசா வழங்குவதில்லை. அப்படி விசா தரப்பட வேண்டும் என்றால் அம்மாநிலம் "சர்ச்சைக்குரியது' என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று வாதிட்டு வருகிறது.

கடந்த வாரம், இந்திய ராணுவத்தின் வடக்குப் பிரிவின் தலைமைத் தளபதி பி.எஸ்.ஜாஸ்வால், சீனத் தலைநகர் பீஜிங்கில் நடக்க இருந்த ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவருக்கு சீனா விசா தர மறுத்து விட்டது. இதையடுத்து, இந்தியாவில் ராணுவப் பயிற்சிக்காக வர இருந்த இரண்டு சீன ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியா விசா தர மறுத்து விட்டது.இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, சீனா, தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பி.ஓ.கே.,) தன் படைகளைக் குவித்து வருகிறது.

இதுகுறித்து சர்வதேசக் கொள்கை மையத்தின் ஆசிய திட்ட இயக்குனர் செலிக் எஸ்.ஹாரிசன் கூறியிருப்பதாவது:பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மக்கள். இதையடுத்து, சீனாவின் ராணுவமான, "மக்கள் விடுதலை ராணுவ' வீரர்கள் ஏழாயிரத்திலிருந்து 11 ஆயிரம் பேர் வரை அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அப்பகுதியில், சீனா தன் பிடியை தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதுவாக, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளை செய்யவும் முனைந்துள்ளது. இதன் மூலம், வளைகுடா நாடுகளுடன் சீனா எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.சீனாவின் இச் செயலை பாகிஸ்தான் ஆதரிப்பது, அது அமெரிக்காவின் கூட்டாளி அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு செலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கடந்த வாரத்தின் இறுதியில் இந்திய ராணுவ அதிகாரிகளோ, சீன ராணுவ அதிகாரிகளோ எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியத் தரப்பு அதிகாரிகள் சீனாவுக்குச் செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அப்படி எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய இந்திய அதிகாரிகள் சிலர்,"சீனாவின் மறுப்பு குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது.இருப்பினும், இருதரப்பு எல்லை அதிகாரிகளுக்கிடையிலும், இந்த விவகாரத்தில் உருவாகியுள்ள முரண்பாடுகள் குறித்து இருதரப்பு உயர் அதிகாரிகள் இடையிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என்று குறிப்பிட்டனர்.

அருணாச்சல விவகாரம்: புதிய பிரச்னை: இந்நிலையில், சீன நகரமான ஷாங்காயில் கடந்த ஜூலை மாதம் நடந்த சர்வதேச கண்காட்சியில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் சீனர்கள் சிலர் நுழைந்து, இந்திய தேசிய வரைபடம் கொண்ட பிரசுரங்களை எடுத்துச் சென்றதாக புதிய விவகாரம் கிளம்பியுள்ளது.

Wednesday, August 25, 2010

இது நல்லதற்கல்ல...

ஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையை உடைய நாடு இந்தியா. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. 15 பொதுத் தேர்தல்களை நடத்திவிட்டிருக்கிறோம். உலகளாவிய அளவில் ஒரு பொருளாதார வல்லரசாக அடுத்த பத்து ஆண்டுகளில் கோலோச்சும் வாய்ப்புடைய நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று என்கிற நிலையையும் அடைந்துவிட்டோம். ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் நாம் மிகவும் கவனக் குறைவாகவும், எச்சரிக்கை இல்லாமலும் இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அணு ஆயுதச் சோதனை நடத்தி விட்டோம் என்பதாலேயே பாதுகாப்புத் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகக் கருதிவிட முடியுமா, என்ன? ராணுவத்துக்கும், கப்பற்படைக்கும், விமானப்படைக்கும் தளவாடங்கள் வாங்குவதிலும், ராணுவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருப்பதிலும்தானே நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.

இந்திய ராணுவத்துக்கு சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, நவீன பீரங்கிகள் வாங்கி 26 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நமது ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா?

26 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ராணுவத் தளவாடக் கொள்முதல் முயற்சி, இந்திய ராணுவத்தை முடக்கிவிட்டிருப்பதைப் பற்றி நமது ராணுவ அமைச்சகமோ, ஆட்சியாளர்களோ கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால், ராணுவ அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்குகிறார்கள்.

போபர்ஸ் பிரச்னையில் ஊழலைப் பற்றிய விசாரணை முடிவுக்கு வரவில்லை என்பதும், யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் போயிற்று என்பது தெரியவில்லை என்பதும், இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளியான குவாத்ரோச்சியை அரசே தப்பவிட்டதுடன், பிடிக்கும் முயற்சியையும் அநேகமாகக் கைவிட்டு விட்டது என்பதும் ஒரு தனிக்கதை. போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் ஒருபுறம் இருந்தாலும், போபர்ஸ் பீரங்கிகள் தரத்தில் குறைந்தவை அல்ல என்பதை, கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் உறுதிப்படுத்தினார்கள். மலை உச்சிகளில் இருந்து இந்திய ராணுவம் போரிட மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னவோ போபர்ஸ் பீரங்கிகள்தான்.

கடந்த எட்டு ஆண்டுகளாகவே, இந்திய ராணுவம் தனது தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டு, அதற்காக மத்திய ராணுவ அமைச்சகத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறது. ராணுவத்துக்காகத் தளவாடங்களை வாங்கப்போய் அது ஊழல் குற்றச்சாட்டில் முடிந்துவிடுமோ என்கிற பயத்தில், ராணுவ அமைச்சகமோ ஏதாவது காரணம்காட்டித் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.

எட்டு ஆண்டு நச்சரிப்பின் பயனாக, இழுத்துச் செல்லும் வகையிலான 155 மி.மீ. பீரங்கிகளை வாங்குவதற்கான சோதனைத் தேர்வு கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. இந்த வகை பீரங்கிகளை வழங்குவதற்காகக் கோரப்பட்ட சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளில் இரண்டே இரண்டு தயாரிப்பாளர்கள்தான் கலந்துகொண்டனர். அவர்களில் ஒன்று சுவீடன் நாட்டு பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் "நவீனமயமாக்கப்பட்ட' போபர்ஸ் பீரங்கி. இன்னொன்று, சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் கைனடிக்ஸ் என்கிற நிறுவனத்தின் பீரங்கி.

கடைசி நிமிடத்தில், சிங்கப்பூர் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக மத்தியப் புலனாய்வுத் துறை அறிவிக்க, ஒரே ஒரு ஒப்பந்தப்புள்ளி மட்டுமே உள்ள நிலையில், போபர்ஸ் பீரங்கிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மீண்டும் பீரங்கி வாங்கும் முயற்சி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

நியாயமாகப் பார்த்தால், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு இத்தனை தவணை சலுகைகள் வழங்கப்பட்டதே தவறு. பரிசோதனைக்கு அழைத்த பிறகு, தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் காரணம் காட்டி, ஒரு நிறுவனம் 15 நாள்கள் அவகாசம் கோர வழியிருக்கிறது. சிங்கப்பூர் நிறுவனமோ மூன்று முறை இதுபோலப் பரிசோதனைக்கு நாள்கள் அறிவிக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் ஏதாவது சாக்குப்போக்குக் கூறி, சோதனையைத் தள்ளிப்போட்டு வருகிறது. 2008-லிருந்து இதுதொடர்ந்து வருவது போபர்ஸ் நிறுவனம் பீரங்கிகளை வழங்குவதைத் தடுப்பதற்காகக்கூட இருக்கலாம்.

பீரங்கியின் தரம் நன்றாக இருந்தால், போட்டிக்கு வேறு தளவாடம் இல்லாத நிலையிலும் அந்த பீரங்கியை வாங்கும் அதிகாரம் ராணுவத்துக்கு உண்டு. ஒரு நிறுவனத்திடம் நேரடியாக வாங்குவதைத் தடை செய்வதே, அதிகமான விலைக்கு ஒரு பொருள் வாங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விலை நிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்தான் சோதனைக்கே அழைக்கிறார்கள் எனும்போது, சிங்கப்பூர் நிறுவனம் சி.பி.ஐ.யால் பிரச்னைக்குரியதாக, வேறு பல விஷயங்களில் தரமற்ற தளவாடத் தயாரிப்பு, லஞ்சம் கொடுக்க முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட நிலையில், போபர்ஸ் பீரங்கிகளையே வாங்கினால்கூடத் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

அது போபர்ஸ் பீரங்கியா, வேறு ஏதாவது பீரங்கியா என்பதல்ல பிரச்னை. ஊழல் இல்லாமல், தரமான ராணுவத் தளவாடங்கள் பெறப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தேவை. எப்போதோ ஊழல் நடந்தது என்பதைக் காரணம் காட்டி, ராணுவத்துக்குப் புதிய தளவாடங்களே பெறப்படாமல், தேசத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முற்படுவது முட்டாள்தனம். குறைந்தபட்சம், 155 மி.மீ. பீரங்கியை உருவாக்கிட ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக(டிஆர்டிஒ)த்தின் முயற்சியை ஊக்கப்படுத்தவாவது வேண்டும்.

Thursday, August 19, 2010

பயமல்ல... நிஜம்!

பசுமை இல்ல வாயு பற்றியும், புவி வெப்பமடைதல் பற்றியும் யாராவது எழுதினாலோ, பேசினாலோ அவர்கள் தேவையில்லாமல் மக்களைப் பயமுறுத்தும் எதிர்மறைச் சிந்தனையாளர்கள் என்பதுபோல மிகவும் சாதுர்யமாகத் தங்களது விளம்பர யுக்திகளின் மூலம் வர்ணிக்க முற்படுகின்றன, பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமீட்டும் எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று எச்சரித்தால், மனித இனம் வசதியாக வாழ்வதைப் பார்க்கப் பிடிக்காத வயிற்றெரிச்சல் வாதிகள் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

இயற்கையுடன் விளையாடத் தொடங்கி இருக்கிறோம். ஒருசில தலைமுறைகள் மனித இனம், அதிலும் ஒரு சிறிய விழுக்காடு மட்டும், வசதியாக வாழ்வதற்காக வருங்கால உலகத்தையே பாலைவனமாக்கும் முயற்சி அரங்கேறி வருகிறது. இதன் விளைவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னும்கூட மனிதன் சுதாரித்துக் கொண்டு, வசதிகளைச் சுருக்கிக் கொண்டு வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முன்வராமல் போனால் அதை என்னென்று கூறுவது?

இந்த ஆண்டு ரஷியா இதுவரை காணாத வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட ரஷிய நாட்டு மக்கள், ஏரிகள், நதிகள் என்று பெரும் திரளாகப் படையெடுத்துக் கோடை வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ள முற்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 233 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். பூமி வெப்பமடைதல் பொய்யென்றால், ரஷியாவில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்குவானேன்?

இந்தியாவுக்கு வருவோம். இமயமலையில் பனிப்பாறைகள் உருகி, பனிச் சிகரத்தின் உயரம் கணிசமாகக் குறைந்து வருகிறதே, அது ஏன்? டேவிட் ப்ரிஷியர்ஸ் என்கிற அமெரிக்கர் 1983-லிருந்து ஐந்து தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோதெல்லாம் இமயமலையையும், அதன் பனிப்பாறைகளையும், சிகரங்களையும் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பவர். பனிச்சிகரங்களின் உயரம் குறைந்து வருவது அவருக்கு அதிர்ச்சி அளித்ததால், முன்பு எந்த இடத்திலிருந்து ஒரு சிகரத்தைப் படம் பிடித்தாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் படமெடுத்துப் பதிவு செய்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.

சுமார் நாற்பது மாடிக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடமாகச் சுருங்கினால் எப்படி இருக்கும், அதுபோல பல பனிச் சிகரங்கள் சுருங்கி இருப்பதை டேவிட் ப்ரிஷியர்ஸ் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறார். ருங்பெக் பனிச் சிகரம் செங்குத்தாக சுமார் 330 அடி உயரம் குறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.

இமயமலையிலுள்ள பல பனிச் சிகரங்கள் அசுர வேகத்தில் சுருங்கத் தொடங்கி இருப்பதை சீன ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படியே போனால், கைலாயம்கூடக் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா போன்ற பனிச் சிகரங்கள் ஆண்டுக்கு 26 அடி உயரம் குறைந்து வருவதாகத் தெரிகிறது.

இதற்கு மூல காரணம் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு. வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உள்வாங்க இயற்கையால் முடியாமல் போகிறது. காற்று மண்டலத்தில் வியாபித்துவிட்டிருக்கும் கரியமில வாயுவால் வானமண்டலமே வெப்பமடைந்திருக்கிறது.

மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையின் அளவு குறைந்து விட்டிருக்கிறது. பருவநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, உருகும் பனியை ஈடுகட்டும் அளவுக்கு குளிர்காலத்தில் பனி உறைவது இல்லை. மேலும், பெட்ரோல், டீசல் புகையிலிருந்து வெளியேறும் கரியமில வாயு பனிச் சிகரங்களில் படர்வதால் வழக்கத்தைவிட அதிகமாக பனிச்சிகரம் உருகிவிடுகிறது; பனி உறைவதும் இல்லை.

புவி வெப்பமடைதல், பனிச் சிகரங்கள் உறைதல் போன்றவைகளின் தொடர்ச்சியாக நாம் சந்திக்கப் போகும் சவால் இன்னொன்றும் இருக்கிறது. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் வெளியாகி இருக்கும் "சயன்ஸ்' இதழ், இதன் தொடர்விளைவுகள் சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகளைப் பெரிய அளவிலும், கங்கை, சீனாவில் பாயும் மஞ்சள் நதி மற்றும் யாங்க்ட்ஸ் நதிகளை சிறிய அளவிலும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது.

சிந்து மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 60 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் தன்மையது இந்த பனிச் சிகரங்கள் உருகும் போக்கு என்பதை நாம் உணர்வதாகவே தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், குறிக்கோளையும் நிர்ணயிப்பது பல பில்லியன் டாலர் லாபம் மட்டுமே. பெருவாரியான மத்தியதர, மேல் மத்தியதர, பணக்கார மக்களின் எண்ணப்போக்கை நிர்ணயிப்பது இன்று அனுபவிக்கும் கார், ஏ.சி., குளிர்பதனப் பெட்டி, விமானம் போன்ற வாழ்க்கை வசதிகள் மட்டுமே.

"எப்போதோ வரப்போகும் ஆபத்தைப் பற்றி இப்போதே சிந்தித்துக் கவலைப்படுவது போன்ற முட்டாள்தனம் இருக்க முடியுமா? புவி வெப்பமடைதல், கரியமில வாயு, பனிச் சிகரங்கள் உருகுதல் என்றெல்லாம் இந்த எதிர்மறைச் சிந்தனையாளர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்? நாம் அப்போது உயிரோடு இருக்கப் போகிறோமா? இருப்பதுவரை சுகமாக வாழ்வதை அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் நாளையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்'' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி-

உங்களுக்கெல்லாம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிடையாதா? வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே உங்களுக்கு இல்லையா?

வேண்டாம் வேதாந்தம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் தரும் இரண்டு விவகாரங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன. முதலாவதாக, நாட்டில் முறைகேடான கனிமச் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இரண்டாவது, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் விவகாரங்கள். மத்திய அரசு இப்போதுதான் ஒன்றில் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொன்றில் நடவடிக்கை எடுக்க ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் யார் காதிலோ விழுந்து ஏதோ விஷயங்கள் நடக்கவே செய்கின்றன என்பது உறுதிப்படுவதன் மூலம் இந்த விழிப்புணர்வுக் குரல்களுக்கு வலுவும் தெம்பும் ஏற்படும்.

மத்திய அரசு அமைத்துள்ள குழு, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி, இரும்பு, மக்னீசியம் தாதுக்கள் முறைகேடாகச் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து ஆந்திர மாநிலம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர் ஒரிசா ஆகிய இடங்களில் ஆய்வுகள் செய்து தனது அறிக்கையை அளிக்கும்.

கனிமங்களை முறைகேடாகத் தோண்டியெடுத்தல் சாத்தியமா என்ற ஐயம் எழக்கூடும். ஆம், அவை நடைபெறுகிறது என்பதும், சில இடங்களில் மாநில அரசுகளின் மறைமுக ஒத்துழைப்புடனும், சில இடங்களில் மிக ரகசியமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறைகேடாகத் தோண்டியெடுக்கும் நிலக்கரியை இங்குள்ள ஆதிவாசிகள் மலைகளின் குறுக்கு வழியில் சுமந்து செல்கிறார்கள். இவர்களை வழிமறிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் மாமூல்போக, இவர்களது கூலியில் ஒரு நாளைக்கு ரூ.50 கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளுக்கு இது கடத்தல் என்றோ முறைகேடு என்றோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ஒருநாள் கூலி மட்டும்தான். அவர்கள் வாழ்க்கை அப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த முறைகேடான கனிமச் சுரங்கங்களும் தாதுப்பொருள் கடத்தலும் ஆதிவாசிகளின் உழைப்பைச் சுரண்டுவதும் ஒருபுறமிருக்கட்டும், அரசு அனுமதியுடன் நடைபெறும் சுரங்கங்களில்கூட, அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, இதில் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிகச் சிறந்த, தரமான இரும்புத் தாது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள ராயல்டிதொகை ஒரு டன் இரும்புத் தாதுக்கு | 27. ஆனால் உலகச் சந்தையில் பெல்லாரி இரும்புத் தாதுவின் விலை டன் | 6,000 முதல் | 7,000 வரை. சுரங்கம் தோண்டும் செலவு, போக்குவரத்துச் செலவு, வேலையாள் கூலி, கட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கும் லஞ்சம் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட ஒரு டன் இரும்புத் தாதுக்கு குறைந்தது | 5,000 கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அப்படியானால், ஏன் அரசு இவ்வளவு மலிவாக ராயல்டி தொகையை நிர்ணயிக்க வேண்டும்?

இது கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, ஆந்திரம், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்கூட, கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த வேறுபாட்டைக் களைந்தாலே அரசுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். முறைகேடாக கனிமங்களைச் சுரண்டுபவர்களைவிட, முறையாகச் சுரங்கம் அமைத்து சுரண்டுபவர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரிசாவில் வேதாந்தா என்கிற நிறுவனம் நியம்கிரி என்ற மலையில் தொடங்கவிருந்த பாக்ûஸட் கனிமம் தோண்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருப்பதுடன், வேதாந்தா நிறுவனம் எவ்வாறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

"....இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கச் செய்வதுடன், இரு பழங்குடி மக்களின் நலனுக்கு முரணாக அமையும் இந்தத் திட்டத்தை அனுமதித்தால், ஆதிவாசிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் மீதும் அவர்களது சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே, ஆதிவாசிகள் நம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான்.

கனிம ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ், அண்மையில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகக் கூறி, 2400 ஹெக்டேர் நிலத்தை, பூரி-கொனார்க் நெடுஞ்சாலையில் வாங்கியது பெரும் பிரச்னையானதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இதே நிறுவனத்தின் பாக்ûஸட் திட்டத்துக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் முன்புறம் அப்படியே இருக்க பின்புறம் நிறையச் சுரண்டப்பட்டு, சிலையே பாதிப்படைந்ததாகப் புகார்கள் உண்டு. சிலையின் பின்புறத்தைப் பார்த்தவர் இல்லை. மத்திய அரசு கடுமையாகவும், நியாயமாகவும், முதுகெலும்புடனும் செயல்படாவிட்டால் இந்தியாவையும் கூட பழனியாண்டவர் நவபாஷாண சிலைகதை போல ஆக்கிவிடுவார்கள்.

எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். வேதாந்தத்தை நம்பும் இந்தியாவுக்கு வேதாந்தம் புகட்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. எல்லாம் விதிப்பயன், வேறென்ன?

Tuesday, August 17, 2010

சூப்பர் பக்” கிருமியை கண்டு பயப்பட தேவை இல்லை: சென்னை விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் “சூப்பர் பக்” எனும் புதுவகை பாக்டீரியா கிருமி பரவி உள்ளதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

அந்த புதுவகை பாக்டீரியாவுக்கு அவர்கள் புதுடெல்லி பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே “சூப்பர் பக்” கிருமியை ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் சென்னை தரமணியில் உள்ள ஏ.எல். முதலியார் முதுநிலை அடிப்படை மருத்துவ ஆய்வு மையத்தில் படித்தவர். தற்போது லண்டனில் இங்கிலாந்து விஞ்ஞானி டிமோத்தி வால்சுடன் சேர்ந்து சூப்பர் பக்கிருமி பற்றி விரிவான ஆய்வு செய்து வருகிறார்.

விஞ்ஞானி கார்த்திகேயன், தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து கூறியதா வது:-

சூப்பர் பக்கிருமி பற்றி உலகின் பல நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் சூப்பர்- பக்கிருமிக்கு ஒவ்வொரு பெயர் வைத்துள்ளனர்.

ஐரோப்பிய விஞ்ஞானிகள் மட்டும்தான் சூப்பர்- பக்கிருமிக்கு புதுடெல்லி பெயரை சேர்த்து வைத்துள்ளனர். இது தொடர்பாக எனது ஆய்வறிக்கை திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி பேசி வருகிறேன்.

சூப்பர்- பக்கிருமி பற்றி 6 மாதங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்தியாவில் இருந்து இந்தகிருமி பரவியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

சூப்பர் பக்கிருமி எந்த மருந்துக்கும் கட்டுப்படாது என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அதை கட்டுப்படுத்தி விட முடியும். எனவே சூப்பர்-பக் கிருமிபற்றி பயம் வேண்டாம்.

சூப்பர்- பக்கிருமி பற்றி தொடர்ந்து நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் அதற்குரிய மருந்துகண்டு பிடிக்கப்படும்.

இவ்வாறு விஞ்ஞானி கார்த்திகேயன் கூறினார்.

எம்.பி.,க்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு தேவையா? முடிவு எடுக்காமல் அமைச்சரவை திணறல்

எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை மூன்று மடங்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. இந்த அதிகரிப்பு தேவையா என, அமைச்சர்கள் பலர் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால், ஒருமித்த கருத்து ஏற்படாமல், இதுதொடர்பாக முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை நேற்று தள்ளி வைத்தது.

எம்.பி.,க்கள் தற்போது மாதம் ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதுபோக பார்லிமென்ட் நடக்கும் நேரங்களிலும், சபை கமிட்டியின் அமர்வுகள் நடக்கும் போதும், தினமும் ஆயிரம் ரூபாய் அலவன்ஸ் பெறுவர். இதுபோக மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு எம்.பி., க்கும் தொகுதி அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. குறிப் பிட்ட அளவுக்கு இலவச விமான பயணங்கள் மற்றும் ரயில் பயணங்கள், வாடகை இல்லாத வீடுபோன்ற சலுகைகளும் உண்டு. இந்நிலையில், ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. இதனால், தங்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசில் செயலர் பதவியில் இருப்பவர் மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். அதை விட ஒரு ரூபாயாவது அதிகமாக தங்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் எம்.பி.,க்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கேற்ற வகையில், காங்கிரஸ் எம்.பி., சரண்தாஸ் மகந்த் தலைமையிலான குழுவினரும் எம்.பி.,க்களின் சம்பளத்தை 80 ஆயிரத்து ஒன்றாக நிர்ணயிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தனர். இந்த குழுவில் சரண்தாஸ் தவிர, பா.ஜ.,வைச்சேர்ந்த அலுவாலியா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மைத்ரேயன், காங்கிரசை சேர்ந்த ராஜிவ் சுக்லா, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இருந்தாலும், எம்.பி.,க்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, பார்லிமென்ட் விவகார அமைச்சகம் யோசனை தெரிவித்தது. இந்த யோசனையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பான மசோதா பார்லிமென்டின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு: இந்நிலையில், எம்.பி.,க் களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை நேற்று பரிசீலித்தது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "பணவீக்கம் அதிக அளவில் உள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலையும் ஆங்காங்கே நடக்கிறது. காமன் வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த மோசமான சூழ்நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது தேவையா?' என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்தும் விவகாரத்தில், முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை தள்ளி வைத்தது. அதேநேரத்தில், "எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது அவசியம்' என, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.

பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் காங்கிரஸ் எம்.பி., ராஜிவ்சுக்லா கூறியதாவது: உலகிலேயே இந்தியாவின் தான் எம்.பி.,க்களின் சம்பளம் குறைவாக உள்ளது. அரசில் எழுத்தர் பணியில் உள்ளவர் பெறுவதை விட குறைவான சம்பளம் பெறுகின்றனர். செயலர்களுக்கு மேம்பட்டவர்கள் எம்.பி.,க்கள். அவர்களின் சம்பளத்திற்கும், எம்.பி.,க்களின் சம்பளத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்க வேண்டும். எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். முன்னர் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெற்ற அரசு செயலர் தற்போது 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால், எம்.பி.,க்கள் சம்பளம் நான்காயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாகத்தான் உயர்த்தப்பட்டது. கவுரவமான சம்பளத்தை எம்.பி.,க்கள் எதிர்பார்க்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன். எம்.பி.,க்களின் பணி ஒன்றும் நிரந்தரமானதல்ல. இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார். இதேபோல், பா.ஜ., எம்.பி.,க்கள் சிலரும் எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த வேண் டியது அவசியம் என, கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு கட்சி எம்.பி.,க்களும் ஒன்றாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் உலகை அச்சுறுத்தும் 5 பயங்கரவாத குழுக்கள்

உலகை அச்சுறுத்தும் ஐந்து பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் செயல்படுவதாக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ரிச்சட் ஹால்புரூக் கூறினார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சார்லி ரோஸ் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானின் சட்டம், ஒழுங்கு செயல்படாத பழங்குடியினப் பகுதிகளில் இவர்கள் பதுங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது:

சர்வதேச அளவில் அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடிய அல்-காய்தா, தலிபான் ஹக்கானி, லஷ்கர் இ தொய்பா, ஆப்கன் தலிபான், பாகிஸ்தான் தலிபான் ஆகியன மிக முக்கியமான குழுக்களாகும். இவை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மீது தாக்குதல் தொடுப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டவை.

அமெரிக்காவின் பிரதான எதிரி அல்-காய்தா. இந்த பயங்கரவாத குழு பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதிகளிலிருந்து செயல்படுகிறது. இப்போது இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மிகவும் ஆபத்து நிறைந்த இக்குழுவினர் செயல்படும் பகுதி முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அல்-காய்தா அமைப்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறது. இவை தவிர, ஆப்கனிலிருந்து செயல்படும் ஆப்கன்-தலிபான் குழுவும் பிரதான குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இப்போது பாகிஸ்தான்-தலிபான் அமைப்பினர் பாகிஸ்தானில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூயார்க் நகரில் கடந்த மே 1-ம் தேதி டைம்ஸ் சதுக்கத்தில் கார் வெடி குண்டு மூலம் தகர்க்க முயன்ற பைசல் ஷாஜத்து, பாகிஸ்தானில் உள்ள தலிபான் குழுவிடம் பயிற்சி பெற்றவர். நல்லவேளையாக இவருக்கு சரிவர பயிற்சி அளிக்கப்படவில்லை. இல்லையெனில் டைம்ஸ் சதுக்க தகர்ப்பு சம்பவம் நிறைவேறியிருக்கும்.

ஹக்கானி குழுவினர் தனி குழுவாக வடக்கு வஜிரிஸ்தானில் செயல்படுகின்றனர். இங்கிருந்து காபூலில் சதித் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

அமெரிக்கர்கள் அதிகம் கவலைப்படாத ஒரு குழு உள்ளதென்றால் அது லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான். இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களை செயல்படுத்துகிறது. 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதும் இக்குழுவினர்தான்.

இந்த ஐந்து குழுக்களும் கலிபோர்னியா பரப்பளவு கொண்ட பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் செயல்படுகின்றனர். ஆப்கனிலிருந்து அமெரிக்க படையை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் எஞ்சிய படையைக் கொண்டு இத்தகைய பயங்கரவாத குழுக்களை அழித்துவிட முடியும். அந்த அளவுக்கு ஆப்கன் படையை கூட்டுப் படை தயார்ப்படுத்திவிடும்.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இது குறித்து பரிசீலித்து முடிவு செய்வார் என்றார் ஹால்புரூக்.

கிராம பி.பீ.ஓ.க்களுக்கு தமிழக அரசு மானியம்

கிராமப்புறங்களில் பி.பீ.ஓ., (வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனம்) தொடங்க ஒரு தனியார் நிறுவனத்துக்கு | 7.5 லட்சம் வரை மானியம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம், நகரங்களில் மட்டுமே இயங்கி வரும் பி.பீ.ஓ. நிறுவனங்கள் கிராமப்புறங்களை நோக்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கிராமப்புறங்களிலும் பி.பீ.ஓ.க்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, கிராமப்புற பி.பீ.ஓ.க்களுக்கான கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், மதுரை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமல்லாது, மாநிலங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் பி.பீ.ஓ. நிறுவனங்களைக் கொண்டு செல்ல வகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு: கிராமப்புற பி.பி.ஓ.க்களை அமைக்கும் பணியில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்காற்றும். அதாவது, பி.பீ.ஓ. நிறுவனங்களைத் தொடங்க யாரெல்லாம் ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.

பி.பீ.ஓ. நிறுவனங்களை உருவாக்க காரணமாக அமையும் தொழில் நிறுவனங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அமைப்புகளுக்கும் இடையே பாலமாக இருந்து ஆலோசனைகளையும், போதிய உதவிகளையும் தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும்.

நிதி உதவி: கிராமப்புற பி.பீ.ஓ.க்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு இரண்டு

வகைகளில் நிதி உதவி அளிக்கப்படும். ஒன்று மூலதன நிதியுதவி, மற்றொன்று பயிற்சிக்கான நிதியுதவி.

குறைந்தது 100 பேருடன் மூன்று ஆண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய

பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கு 15 சதவீதம் அதாவது | 3 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். பி.பீ.ஓ. அமைப்பதற்கான வன்பொருள்கள் உள்ளிட்ட கருவிகளைப் பெற இந்த மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றொன்று, பயிற்சிக்கான மானியமாக அரசு அளிக்கிறது. 100 பேருக்கு 3 மாதங்கள் பயிற்சியும், அதன்பின் 9 மாதங்கள் பணியும் வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும்.

நபர் ஒருவருக்கு மாதத்துக்கு | 1,500 வீதம் 3 மாத பயிற்சி காலத்துக்கான உதவித் தொகை மொத்தம் | 4.5 லட்சம் வழங்கப்படும். பயிற்சியையும், பணியையும் வழங்கிய ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தொகை அளிக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் வெளியிட்ட அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பணிகள்? கிராமப்புற பி.பீ.ஓ.க்கள் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விவரங்களைத் திரட்டுதல், அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல், தகவல்கள் மேலாண்மை, தகவல்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

குரல் வழியிலான பி.பீ.ஓ.க்கள், அதாவது ஒரு நிறுவனத்தின் சேவைகளை தொலைபேசி வழியாக தெரிவிக்கும் பணியும், வர்த்தக ஆய்வு, சர்வே, விற்பனை போன்ற பணிகளும் கிராமப்புற பி.பீ.ஓ.க்கள் வழியாக செய்யப்படும்.

Friday, August 13, 2010

பெரியகோயில் 1000-வது ஆண்டுவிழா: தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் சிறப்பு நிகழ்ச்சிகள்- துணைவேந்தர் ம.ராசேந்திரன் அறிவிப்பு

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா தொடர்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

÷பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு செப்டம்பர் 25, 26-ம் தேதிகளில் 1,000-வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது.

÷முதல் நாள் விழாவில் பெரிய கோயிலில் 1,000 நடனக் கலைஞர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், நகரில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளும், 2-ம் நாளில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், பெரிய கோயிலில் பொது அரங்கமும், திலகர் திடலில் ராஜராஜ சோழன் உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா மற்றும் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் பெரிய கோயிலின் 1,000-வது ஆண்டு விழாவின் போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பங்கு பற்றி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன் விளக்கினார்.

""தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஓதுவார்களை நியமித்து, திருமுறை பாடவைத்து தமிழ் மொழியை ஆலயத்துக்குள் கொண்டு சென்றவர் மாமன்னர் ராஜராஜ சோழன்.

÷தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூருக்கோ, தனிப்பட்ட பக்தி நெறிக்கோ மட்டும் பெருமை சேர்ப்பதாக இல்லை. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைப்படத்தக்கதாக, ஏன் இந்தியா முழுவதும் பெருமைப்படத்தக்கதாக விண்ணுயர நிற்கிறது.

÷சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த விஜயாலயச் சோழ அரச பரம்பரையில் திலகமாக விளங்கிய முதலாம் ராஜராஜ சோழனால் தஞ்சைப் பெரிய கோயில் எழுப்பப்பட்டது.

÷தென்கிழக்கு ஆசிய நாடுகளை வென்று சோழர் ஆட்சியை சிறப்புறச் செய்தவர் ராஜராஜ சோழன். ராஜராஜ சோழன் தமிழகத்தின், ஏன் இந்திய மன்னர்களில் சிறந்தவர். தஞ்சையைச் சுற்றி எந்த மலைக்குன்றும் இல்லை. அப்படியிருக்க கல்களால் எழுப்பப்பட்ட பெரிய கோயிலுக்கு எங்கிருந்து கல் கொண்டு வரப்பட்டது, எப்படி கொண்டு வரப்பட்டது, எப்படி கட்டடப்பட்டது என்பது இப்போதுள்ள அறிவியல் யுகத்தில் புரியாத புதிராக, புதிர்களின் கொள்கலனாக உள்ளது.

ராஜராஜனின் ஆட்சி முறை இன்றைக்கும் பயன்படக்கூடிய நிர்வாக முறையாக இருக்கிறது. ஆவணப்படுத்துவதில் ராஜராஜ சோழனைப் போல வேறு யாரும் செய்திருக்க முடியாது. மக்களாட்சியை விரும்பிய மன்னன் தன்னுடைய பணியையும், தன்னுடன் பணியாற்றியவர்களின் பணியையும் ஆவணமாகப் பதிவு செய்துள்ளான்.

தஞ்சை பெரிய கோயில் 1,000-வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு நாள் ஆய்வரங்கம், இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு என்ற பொருண்மையில் நான்கு அமர்வுகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அமர்விலும் இரு அறிஞர்கள் கட்டுரை அளிப்பர். ஓர் அறிஞர் தலைமை வகிப்பார்.

இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வரங்கம் செப்டம்பர் 24-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முற்பகல் 11.30 முதல் பகல் 12.30 மணி வரை முதல் அமர்வில் வரலாறு மற்றும் ஆவணப்படுத்துதல் தலைப்பிலும், பகல் 12.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை 2-வது அமர்வில் ஆட்சி முறை மற்றும் வேளாண் தொழில்நுட்பம் தலைப்பிலும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை 3-வது அமர்வில் கட்டடக் கலை மற்றும் தொழில்நுட்பம் தலைப்பிலும், பிற்பகல் 3.30 முதல் 4.30 மணி வரை 4-வது அமர்வில் ஆடல் கலை, இசைக் கலை, ஓவியக் கலை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும்.

கருத்தரங்குக்கு பேராசிரியர்கள் ஜார்ஜ் மிச்சல் (லண்டன்), கபிலா வாத்சாயனா (தில்லி), ரொமிலா தாப்பர் (தில்லி), கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜன் குருக்கள், பேராசிரியர்கள் கேசவன் வெளுத்தாட் (தில்லி), செம்பகலட்சுமி (சென்னை), சுப்பராயலு (புதுச்சேரி), பேராசிரியர் ஓவியர் சந்துரு (சென்னை), முனைவர் இரா. நாகசாமி, முனைவர் பத்மா சுப்பிரமணியம் (சென்னை), முனைவர் கணபதி ஸ்தபதி (சென்னை), முனைவர் சத்தியமூர்த்தி (சென்னை), ஸ்ரீராமன் (சென்னை) ஆகியோரை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலைத் தொழில்நுட்பங்கள், ஓவியக் கலை வரலாற்றில் பெரிய கோயில், சிற்பக் கலை வரலாற்றில் பெரிய கோயில் ஆகிய நூல்களும், இலக்கியங்களில் பெரிய கோயில் என்ற நோக்கில் பெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர், திருவிசைப்பா - கருவூர்த்தேவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர் திருப்புகழ், சோழர் காலச் செப்பேடுகள், பத்துப்பாட்டு இந்தி மொழி பெயர்ப்பு, பிற நாட்டவர் பார்வையில் தஞ்சை பெரிய கோயில், தமிழர்களின் வணிக வரலாறு, தமிழர்களின் கடல்கள் பயண வரலாறு ஆகிய நூல்களை செப்டம்பர் 25-ம் தேதிக்கு முன்பு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தவிர, தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், பண்டைத் தமிழரின் ஓவியங்கள் ஆகிய நூல்கள் மறு வெளியீடு செய்யப்படும்.

பாரதியாரின் படைப்புகளில் பெரிய கோயில் பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. அப்படி ஏதேனும் குறிப்புகள் கிடைத்தால், அவற்றையும் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார் துணைவேந்தர் ராசேந்திரன்.

ஓமந்தூரார் வளாகத்தில் மேல்சபை உறுப்பினர்களுக்கு 10 மாடி குடியிருப்பு

தமிழ்நாட்டில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேல்சபை உருவாக்கப்படு கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 78 பேர் மேல்சபை உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இதில், 26 பேர் சட்டசபை உறுப்பினர்கள் மூலமும், 26 பேர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலமும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கான இடத்தில் 7 பேரும், பட்டதாரிகள் சார்பில் 7 பேரும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். 12 பேர் நியமன உறுப்பினர்கள்.

இவர்களை கவர்னர் நியமனம் செய்வார். மேல்சபை உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்களுக்கான குடியிருப்பு சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ளது. இது போல், மேல்சபை உறுப்பினர் களுக்கும் ஓமந்தூரார் தோட்ட வளாகத்திலேயே குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

10 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 100 வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீடும் 985 சதுர அடி பரப்பளவு கொண்டதாக அமையும். சுமார் 1.4 ஏக்கரில் கட் டப்படும் இந்த குடியிருப்பை ரூ.34.4 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இதற்கான திட் டத்தை தயாரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக கட்டிடவியல் நிபுணர்கள் 10 மாடி குடியிருப்புக்கான கட்டிடத்தை உருவாக்குவது மற்றும் அதன் வடிவமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபடு கிறார்கள்.

மேல்சபை உறுப்பினர்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்கான ஆவணங்களை, சில தினங் களில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்ப டைக்கிறது. அனுமதி கிடைத்த வுடன் 18 மாதங்களில் கட்டி டத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

"பிளாக்பெர்ரி' மீது தடை வருமா? மத்திய அரசு விதித்தது நிபந்தனை

பிளாக்பெர்ரி மொபைல் போன் தகவல்களை இடைமறிக்கும் வசதி தர மறுப்பு தெரிவித்த "ரிம்' நிறுவனத்திற்கு, இந்தியா மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்கு ஒரு முடிவு காணப்படாவிட்டால், தடை விதிக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறது.

பிளாக்பெர்ரி மொபைல் போனை தயாரிக்கும் நிறுவனமான "ரிம்'மின் நடவடிக்கை குறித்து, உள்துறை செயலர் பாதுகாப்பு நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் அதிகாரிகள் நேற்று கூடி விவாதித்தனர். கூட்டம் முடிந்த பின், உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தொலைத்தொடர்புத் துறை செயலர் தாமசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "ரிம்' நிறுவன தயாரிப்புகளின் மூலம் பரிமாறப்படும் பேச்சுக்களையும், குறுந்தகவல்களையும் இடைமறிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் கேட்டறியும் வகையில், வரும் 31ம் தேதிக்குள் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்குங்கள்' என, கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழில்நுட்பத் தீர்வை, வரும் 31ம் தேதிக்குள் உருவாக்கவில்லை எனில், அதன் மேல் அரசின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து, இந்த இரு சேவைகளை தடை செய்ய ஆவன செய்வோம். தற்போதைய நிலையில், பிளாக்பெர்ரி மூலமான வாய்ஸ் மெய்ல், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் சேவை ஆகியவை, சட்ட அமலாக்க நிறுவனங்களால் பார்க்க மட்டுமே முடியும். அவற்றை இடைமறித்துக் கேட்க முடியாது. எனவே, "ரிம்' நிறுவனம் குறித்த அரசின் நிலைப்பாடு எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்தே இன்றைய கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கூட்டம் முடிந்த பிறகு, "ரிம்' நிறுவன உயர் அதிகாரி ஒருவர், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசினார். பிளாக்பெர்ரி தகவல்கள் அனைத்தும் "பிளாக்பெர்ரி என்டர்பிரைஸ் சர்வர்' மூலம் பரிமாறப்படுகின்றன. இந்தத் தகவல்கள் விசேஷக் குறியீடுகள் மூலமே பரிமாறப்படுவதால், சாதா எழுத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட குறியீட்டிலேயே சர்வரில் பதியப்படுகிறது. மீண்டும் இன்னொரு போனுக்கு தகவல் செல்லும்போது மட்டுமே, சாதா எழுத்தில் அனுப்பப்படுகிறது. இந்த விசேஷக் குறியீட்டைப் படிக்கும் உரிமை வேண்டும் என்பது தான், இந்தியாவின் கோரிக்கை.

ஐக்கிய அரபு மற்றும் சவுதி அரசுகள் ஆகியவையும் "ரிம்' கூறுவதை ஏற்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயத்தில் இந்த மொபைல் போனில் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கண்டறிய முடியாது என்பதே இப்போது பேசப்படும் பெரிய விஷயம். ஆனால், இதே "ரிம்' நிறுவனம் இந்த வசதியை அமெரிக்காவுக்கு தந்திருக்கிறது. அது எப்படி என்று கேட்டால், "கோர்ட் உத்தரவு மூலம் பிளாக்பெர்ரி தகவல்களை இடைமறித்து பெறமுடியும். அம்மாதிரி அனுமதி தர மறுக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் நிபந்தனைகளுக்கு உட்பட வில்லை என்றால், பிளாக்பெர்ரி சர்வீஸ் முடக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இரும்புத்தாது சுரங்கங்கள் மூடலால் கோடிக்கணக்கான வருவாய் இழப்பு

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் மூடப்பட்டுள்ளதால், சென்னை துறைமுகத்தில் அவற்றின் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை துறைமுகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், இரும்பாக மாற்றப்பட்டு, 'ஸ்டீல்' பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், கட்டிகள் மற்றும், துகள்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன.இதில், கட்டியான கற்கள் போன்ற தோற்றம் கொண்ட இரும்புத் தாது. நம் நாட்டில், ஒரிசா மாநிலம், கியாஞ்சோர் மாவட்டத்தில் உள்ள, பர்ப்பில் சுரங்கத்தில், முதல் தர இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன.தென் மாநிலங்களில், கர்நாடக மாநிலம் பெல்லாரி, ஹாஸ்பெட், ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபலாபுரம் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இரும்புத் தாதுக்கள் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டு, ஜப்பான், கொரியா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மத்திய அரசு சார்பு நிறுவனமாக செயல்பட்ட, 'மினரல் மெட்டல் டிரேடிங் கார்பரேஷன்' (எம்.எம்.டி.சி.,) மூலம் மட்டுமே இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கும் பணி முன்பு நடந்தது. அப்போது, துகள்களாக உள்ள தாதின் பயன்பாட்டை உணராமல், உள் நாட்டிலும் அது பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய கொள்கை மூலம், 2003ம் ஆண்டுக்கு பின், தனியாரும் சுரங்கத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, இங்கிருந்து சீன நாட்டிற்கு, கட்டிகள் போன்ற இரும்புத் தாது ஏற்றுமதி துவங்கியது. சீன நாட்டின் இறக்குமதியாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, துகள் தாதுகளும் ஏற்றுமதியாகத் துவங்கியது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ஆந்திர மாநிலம் ஓபலாபுரம் சுரங்கங்களில், கடந்த ஆண்டு ஜூலை முதல் அரசியல் காரணங்களுக்காக இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வந்த இரும்புத் தாதுக்கள், சென்னை துறைமுகம் வழியாகவே, அதிகளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்காக நாள்தோறும் அங்கிருந்து தலா 50 வேகன் கொண்ட ஐந்து சரக்கு ரயில்கள் மூலம் 11 ஆயிரத்து 200 டன் அளவிற்கு இரும்புத் தாதுக்கள் இங்கு எடுத்து வரப்பட்டன.இதுபோல் ஆண்டிற்கு சராசரியாக சென்னை துறைமுகத்தில் இருந்து 80 லட்சம் டன் வரை, சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்றுமதி தொழிலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், சென்னை துறைமுகத்தில், 'பிளாட்' எனப்படும் யார்டுகளை டெண்டர் மற்றும் வாடகைக்கு எடுத்து அங்கு ரயில் மூலம் எடுத்து வரப்படும் இரும்புத் தாதுக்களை தேக்கி வைத்து ஏற்றுமதி செய்து வந்தனர். இவர்களின் வசதிக்காக சென்னை துறைமுகத்தில் 24 யார்டுகள் உள்ளன. ஒவ்வொரு யார்டு மூலமும் மாதத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு வருமானமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்ததால், யார்டுகளை ஏற்றுமதியாளர்கள் துறைமுக பொறுப்பு கழகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் துறைமுக பொறுப்பு கழகத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி இரும்புத் தாது சரக்குகளை கையாள்வதன் மூலம் ஆண்டிற்கு 83 கோடியே 20 லட்சம் ரூபாய், சென்னை துறைமுகத்திற்கு வருமானமாக கிடைத்தது. ஓர் ஆண்டாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருமானமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஏற்றுமதி மூலம் துறைமுகத்திற்கு மட்டுமின்றி, இரும்புத் தாதுக்களை ஏற்றி வந்ததன் மூலம் ரயில்வே துறைக்கு மாதம்தோறும் கிடைத்து வந்த மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, மத்திய வருவாய்த் துறைக்கு ஒரு டன் இரும்புத் தாது ஏற்றுமதி மூலம் கஸ்டம்ஸ் வரியாக 650 ரூபாயும், 'செஸ்' வரி மூலம் ஒரு ரூபாயும் கிடைத்து வந்தது. இவ்வாறு, மாதம் பல கோடி ரூபாய் அளவிற்கு கிடைத்த இந்த வருமானமும் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும், இரும்பு தாது ஏற்றுமதியாளர்களுக்கும் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.