Monday, February 28, 2011

மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்

2011-12 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் இதன் விபரம் வருமாறு : நாட்டின் உணவு பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது; வேளாண்மை துறை தேவைகளை அதிகரிக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது; நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 % ஆக உள்ளது; பொருளாதார நெருக்கடியும் சரி செய்யப்படும்; விவசாய துறையும் 5.4% வளர்ச்சி பெற்றுள்ளது; தொழில்துறை 8.1%, சேவை துறை 9.6 % வளர்ச்சி பெற்றுள்ளது; அரசு துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.6000 கோடி நிதி வழங்க அனுமதி வழங்கப்படும்; மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; வேளாண் துறையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்; கைத்தறி நெசவாளர்களுக்கு நபார்டு வங்கிளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; புதிய திட்டங்களின் மூலம் 3 லட்சம் ‌நெசவாளர்கள் பயன் பெறுவர்; விவசாயத்தை மேம்படுத்த கூடுதலாக ரூ.7860 கோடி ஒதுக்கீடு; வேளாண்துறையில் தனியார் முதலீடுகளை அதிகப்படுத்த புதிய திட்டங்கள்; உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த உணவு பதப்படும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்; நாட்டின் மேற்கு பகுதியில் பசுமை புரட்சியை அதிகரிக்க கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கீடு; குறிப்பிட்ட தேதிக்குள் கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கடனில் 3 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்; எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு; வீட்டு கடன் தொலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்; விவசாயிகளுக்கு கூடுதல் கடன் திட்டங்கள்; உணவு பாதுகாப்பு மசோதா இவ்வாண்டு முதல் அமல்படுத்தப்படும்; பாரத் நிர்மாண் திட்டங்களுக்கு ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கல்வி திட்டங்கள் 24 % அதிகரிக்கப்படும்; பொதுத்துறை திட்டங்களும் அதிகரிக்கப்படும்; 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பு தொகை அதிகப்படுத்தப்படும்; கல்வித்துறைக்கு ரூ.52 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்க 5 அம்ச திட்டம் அறிமுகம்; சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கிராமப்புற தொலைத்தொடர்பு திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு; பிபிஎல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வயது வரம்பு தளர்த்தப்படும்; நதிகளை சுத்தம் செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.1500 லிருந்து ரூ.3000 ஆக உயர்வு; முதியோர் ஓய்வூதிய வயது வரம்பு 65 லிருந்து 60 ஆக குறைப்பு; பழங்குடி மக்களுக்கான நிதி ரூ.244 கோடியாக அதிகரிப்பு; புதிய நீதிமன்ற கட்டிடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்கப்படும்; இலக்கிய துறைகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; 80 வயதிற்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ஓய்வூதிய தொகை ரூ.500 உயர்வு; நக்சலைட்டு பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளின் மேம்பாட்டிற்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு; புதிய உர கொள்ளை திட்டங்கள் அறிமுகம்; தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.1.8 லட்சமாக உயர்வு; மூத்த குடிமக்கள் தகுதி பெறுவதற்கான வயது வரம்பு ரூ.60 ஆக குறைப்பு; சேவை வரி மற்றும் சுங்க வரியில் மாற்றம் இல்லை; உள்ளூர் மற்றும் வெளியூர் பயணத்திற்கான சேவை வரி 10% அதிகரிப்பு; உணவு மற்றும் எரிபொருட்களுக்கான சுங்க வரி நீடிக்கும்; அடிப்படை சுங்க வரி 5% உயர்வு; பெண்களுக்கான புதிய வரிவிலக்கு ஏதும் இல்லை; விமான பயணத்திற்கான சேவை வரி உயர்வு;

Thursday, February 3, 2011

இந்திய - அமெரிக்க உறவில் அடுத்த வளர்ச்சிக்கு ஏற்பாடு

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார்.

அதேபோல், இந்திய உயர் அதிகாரிகள் பலரும், வரும் நாட்களில், அடுத்தடுத்து, அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளனர்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடந்த நவம்பரில் இந்தியா வந்தார். அப்போது, இந்திய - அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், கடந்த வாரம் வாஷிங்டன் சென்றார். கடந்த 27ம் தேதி துவங்கிய மூன்று நாள் பயணத்தின் போது, அதிபர் ஒபாமா, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலான் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து அவர்களுடன் ஆலோசித்தார்.

மேனனின் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, வரும் 13, 14ம் தேதிகளில் வெளியுறவு செயலர் நிருபமா ராவ், அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அமெரிக்க வெளியுறவு செயலர் வில்லியம் பர்ன்ஸ் உட்பட, அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலரைச் சந்திக்கிறார்.இதன்பின், மார்ச் 2 முதல், 6 வரை, இந்திய ராணுவச் செயலர், வாஷிங்டன் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, ராணுவ கொள்கை தொடர்பான கூட்டம் உட்பட, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவரைத் தொடர்ந்து இந்திய ராணுவத் தளபதி, மார்ச் 7 முதல், 13 வரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்

.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார். அப்போது, இரு நாடுகள் இடையேயான உறவுகளை ஆக்கப்பூர்வமான வகையில் மேம்படுத்துவது உட்பட, பல விஷயங்கள் குறித்து, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா உட்பட, இந்திய தலைவர்களுடன் விவாதிக்கிறார்.அதே நேரத்தில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கிக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஏப்ரலில் வாஷிங்டன் செல்கிறார். இருநாட்டுத் தலைவர்களின் இந்தப் பயணத்தால், பயங்கரவாத ஒழிப்பு உட்பட, பல விஷயங்களில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எகிப்து எழுப்பும் எச்சரிக்கை!

நான்கு நாள்களாக எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.

ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தெருவில் இறங்கி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் மட்டுமல்லாமல் அலெக்சாண்டீரியா உள்ளிட்ட எல்லா நகரங்களின் மையப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி நிலையங்கள், ஏன், அரசுக்கு ஆதரவான பத்திரிகை அலுவலகங்கள் அனைத்துமே தாக்கப்படுகின்றன.

ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர்ப்புகை வீச்சிலும், தடியடிப் பிரயோகங்களிலும் காயமடைந்திருக்கிறார்கள். இணையதளம், செல்பேசி போன்றவை அரசால் முடக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுத்து வருகிறதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.

இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் போராட்டம் ஒன்று 1977-ல் எகிப்தை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்கு "ரொட்டிக் கலவரம்' என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுப் பஞ்சம்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணம். அன்றைய அதிபர் அன்வர் சதத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய அந்தக் கலவரத்தைப் போலவே, இந்த மக்கள் புரட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக்கூடும்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவல்களும், அல் ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் முனைப்புடன் கூடிய மக்கள் புரட்சிக்கு ஆதரவான செய்திகளும், எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கின்றன என்பது தெளிவு.

மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் லஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத் திண்டாட்டம் என்று உலகின் வேறு பல நாடுகளிலும் காணப்படும் அதே நிலைமைதான் எகிப்திலும்!

எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்தபிறகு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.

இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மெளனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.

இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக "அல்லாஹ் அக்பர்' கோஷம் எழுப்பப்படவில்லை. "ஆட்சி மாற்றம் தேவை' என்கிற கோரிக்கைதான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை.

எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம்கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், ஜனநாயகமும் கேட்டுப் போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.

அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை - ""உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து!''.

இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம்!

சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா? உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்!

Sunday, January 16, 2011

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்!

சமுதாயத்தில் எல்லா தரப்பினர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும் நிலைமை. சத்தியம், நேர்மை, தர்மம் என்பதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, வெற்றிக்கு ஒரே அளவுகோல் பணம் மட்டுமே என்கிற மேல்நாட்டுச் சிந்தனை நம்மை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலைமையில் சற்று ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாக இருப்பது நீதித்துறையின் நல்ல சில தீர்ப்புகளும், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடும்தான். இப்போது அதையும் கேள்விக்குறியாக்கி, நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கையையும் சிதைக்கும் விதத்திலான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

"கடந்த 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் லஞ்சப் பேர்வழிகள்' என்கிற குற்றச்சாட்டைமுன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பாகாதா என்று சாதாரணப் பொதுஜனம்கூட வியந்தனர். வேறு யாராவது இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருந்தால், நீதிபதிகள் கொதித்தெழுந்திருப்பார்கள். நீதிமன்ற அவமதிப்புக்காக அவர் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும்.

குற்றம் சுமத்தியவர் விவரமில்லாதவர் அல்ல. அவரைக் கூண்டில் ஏற்றினால், என்னென்ன பூதங்கள் கிளம்புமோ? உச்ச நீதிமன்றம் மௌனம் சாதித்தது. உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார். சாந்திபூஷணை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்லுங்களேன் என்று நீதிபதியே வேண்டுகோள் விடுக்கிறார். மொத்தத்தில், குற்றச்சாட்டில் ஏதோ உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பது தெரிகிறது. இன்னும் பிரச்னை நீறுபூத்த நெருப்பாய் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

இப்போது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் இன்னொரு விஷயம் வெளிவந்திருக்கிறது. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இப்போது தேசிய மனித உரிமைக் கமிஷனின் தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்கள் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள்தான் இதற்கெல்லாம் காரணம்.

நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ஜி. பாஸ்கரன், கேரள அரசின் சிறப்பு அரசு வழக்குரைஞராகக் கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்தவர். இவர், கே.ஜி. பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும் வாங்கிக்குவித்த அசையாச் சொத்துகள் பற்றிய விவரம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. வேறு வழியில்லாமல், தனது வருமானத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்த பிரச்னையால் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் சகோதரர்.

பிரச்னை இதோடு முடிந்துவிடவில்லை. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மூத்த மருமகன் பி.வி.ஸ்ரீநிஜன். இவர் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞரும்கூட. இவர் மீதும் கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்க்குப் பொருத்தமின்றி சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பத்திரிகைகளில் வெளியாகியது. திடீர் கோடீஸ்வரரானது இவர் மட்டுமல்ல, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் இளைய மகளின் கணவரான பின்னியும்தான்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மனித உரிமைக் கமிஷனின் இப்போதைய தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணனின் மூத்த மருமகன் ஸ்ரீநிஜன் போட்டியிடும்போது, அவரது மொத்த சொத்து மதிப்பு வெறும் ரூ. 25,000 மட்டுமே. இது அவரே கொடுத்திருக்கும் வாக்குமூலம். இப்போது கோடிகளில் அவர் சொத்து சேர்த்தது எப்படி என்கிற நியாயமான கேள்வி எழுகிறது.

பிரச்னை பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்த நிலையில், புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன். இவர்கள் தங்களது மாமனார் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் பெயரையும், உதவியையும் பயன்படுத்தித்தான் சொத்து சேர்த்தார்களா என்பதை விசாரிக்க வேண்டும் என்று ஒருவரும், தனது மருமகன்கள் தனது பெயரைப் பயன்படுத்திச் சொத்து சேர்க்க முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுமதித்தாரா என்பதை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை தேசிய மனித உரிமைக் கமிஷனின் தலைவர் பதவியிலிருந்து விலக்கக்கோரி பல பார் அசோசியேஷன்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.

எனது மருமகன்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்றும், தனக்கு அதில் தொடர்பே இல்லை என்பது போலவும் அறிக்கை வெளியிட்டுத் தப்பித்துக் கொள்ள முயல்கிறார் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். சட்டப்படி, அவரது கூற்றில் நியாயமிருக்கலாம். ஆனால், மனசாட்சிப்படி அவர் தனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று கூறுவாரேயானால், உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நாம் ஒரு பொய்யரை அமர்த்தி அழகு பார்த்திருக்கிறோம் என்று தலைகுனிந்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் நீதிபதிகளைப் பற்றிய, குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றிய விவரங்களைத் தரவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டவர் அன்றைய தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன். நீதிபதிகள் தங்கள் சொத்துக் கணக்கை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுகூறி நிராகரித்தவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போதல்லவா தெரிகிறது, அதன் பின்னணியும் காரணமும்!

சாந்திபூஷண் குறிப்பிட்ட 8 ஊழல் தலைமை நீதிபதிகளில் ஒருவர் யார் என்பது தெரிந்துவிட்டது. மீதி 7 பேர் யார்யார் என்பதும் வெளியாகக்கூடும். அதுவல்ல முக்கியம். நீதித்துறை களங்கப்படுகிறது. அதன் மீதான நம்பிக்கை தகர்கிறது. இது தேசத்துக்கு நல்லதல்ல.

நீதிபதிகள் நியமனத்தில் தொடங்கி, தவறிழைக்கும் நீதிபதிகளை விசாரிப்பது, பதவி நீக்கம் செய்வது வரை பல மாற்றங்கள் உடனடியாகச் செய்யப்பட்டால் மட்டுமே, நீதித்துறையில் நேர்மையையும், நீதித்துறையின் நன்மதிப்பையும் நிலைநிறுத்த முடியும். உடனடியாக, நீதித்துறைச் சீர்திருத்தத்துக்கு வழிகோலுவதற்கு நீதித்துறை சீர்திருத்தக் கமிஷன் அமைக்கப்படுவதுதான் ஒரே தீர்வு. அப்படி அமைக்கப்படும் கமிஷனுக்கு, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றவர்களைத் தலைவராக நியமித்துவிடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் நமது அடுத்த கவலை!

Monday, January 3, 2011

சில்லறை வணிகம் - மாறுபட்ட கோணத்தில்!

உலகில் சந்தை வியாபார அமைப்பை உருவாக்கிய முன்னோடி சமூகங்களில் ஒன்று இந்திய சமூகம். நம்முடைய வர்த்தக அமைப்பு எல்லா காலகட்டங்களிலும் அமைப்புசாரா சில்லறை வியாபாரக் கட்டமைப்பாகவே இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி வரலாற்றின் எந்தப் பகுதியிலும் இதற்கான சான்றுகளை நம்மால் பார்க்க முடியும். சங்க காலத் தமிழ் இலக்கியமான "மதுரைக்காஞ்சி'யில் வரும் ஒரு பாடல் வீதிகளில் பலவகைப் பொருள்கள் விற்போரும், ஒருவர் காலோடு ஒருவர் கால் பொருந்துமாறு நெருக்கமாக நின்று விற்பனையில் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிடுகிறது. இன்றளவும் அந்த மரபு நீடிக்கிறது.

விவசாயத்துக்கு அடுத்த நிலையில் } ஏறத்தாழ 5 கோடிப் பேருக்கு } வேலை அளிக்கும் களமாக அமைப்புசாரா சில்லறை வியாபாரத் துறையே இருக்கிறது. சுமார் | 1.5 லட்சம் கோடி புரளும் இத்துறை, இந்திய வர்த்தகத்தில் 95 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதில் முறைசார் வியாபாரத்தின் பங்கு வெறும் 3 சதவீதம்தான். ஆனால், இந்த வரலாறு எல்லாம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்?

நாம் இப்போது சில்லறை வியாபாரத்தில் வேர்விடும் பெருநிறுவனங்களை விமர்சிக்கிறோம். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்று புதிய பொருளாதாரக் கொள்கையின் கேடுகளைத் திரும்பத்திரும்பப் பேசுகிறோம். ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டதற்குப் பின் பிறந்த ஒரு தலைமுறை இப்போது வளர்ந்துவிட்டது. அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் அடுத்தகட்டத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு அது தயாராகிக் கொண்டிருக்கிறது. நாம் ஏன் இதைக் கவனிக்கவில்லை?

ஆமாம், நம்முடைய புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வயதாகிவிட்டது. இப்போது அது வெறும் கொள்கை அல்ல; அது ஒரு சமூக அறிவியலாக வளர்ந்து நிற்கிறது. இனியும் நாம் அதைப் "புதிய' என்று குறிப்பிடுவதும் "கொள்கை' என்ற அளவிலுமே பார்ப்பது அபத்தமானது. நாம் பின்தங்கிக் கொண்டிருக்கிறோம் அல்லது அது நம்மைக் கடந்து கொண்டிருக்கிறது. இனியும், நாம் நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் நம்மைத் தயாராக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

சுதேசி உணர்வுடைய நம்மில் பலர் பெருநிறுவனக் கடைகளை வெறும் கடைகளாகப் பார்ப்பதில்லை. நமக்குப் பிடிக்காத பொருளாதாரக் கொள்கையின் நேரடிச் சின்னங்களில் ஒன்றாகவே பார்க்கிறோம். அதனாலேயே அவற்றைப் புறக்கணிக்கிறோம். பொருள்களின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், சற்றுக் கூடுதல் தொலைவாக இருந்தாலும், பொருள்களின் தரம் முன்பின் இருந்தாலும் சிறு வியாபாரிகளைத் தேடுவதை நம்மில் பலர் ஓர் ஒழுக்கமாகவும் கடைப்பிடிக்கிறோம். சரி, நாம் இப்படி இருக்கிறோம்; நாளை நம் பிள்ளைகள்?

நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசுவோர் யாவரும் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம்; நம்முடைய பழைய அமைப்பில் உள்ள பலகீனங்களைப் பேச மறுக்கிறோம். மறைமுகமாக தரத்தில் சமரசம் பேசும் உத்தி இது. நுகர்வோரின் தரப்பிலிருந்து பார்க்கும்போது இது அநீதியும்கூட.

யோசித்துப் பாருங்கள். சந்தையில் நிற்கும் சில்லறை வியாபாரிகள் எவரிடமாவது நம்மால் கால் கிலோவுக்குக் குறைந்து காய், கனிகளை வாங்க முடிகிறதா? அப்படிக் கேட்போருக்கு சில்லறை வியாபாரிகள் கொடுக்கும் மரியாதை எப்படி இருக்கிறது? சுத்தம், சுகாதாரத்தில் நம்முடைய சிறு வியாபாரிகளின் அக்கறை என்ன? தெருவோர உணவகங்களில் குடிக்கக் கொடுக்கப்படும் தண்ணீரின் தரம் எப்படி இருக்கிறது?

யோசித்துப் பாருங்கள், நீண்டகாலம் பால் வியாபாரம் சில்லறை வியாபாரிகளான பால்காரர்கள் கைகளில்தான் இருந்தது. இப்போதோ கிராமங்களில்கூட கறவைப் பால் அரிது. காரணம் என்ன? மக்கள் எல்லோரும் ஏன் "பாக்கெட்' பாலுக்கு மாறினார்கள்? காரணம் பொருளாதாரக் கொள்கையும் பெருநிறுவனங்களும் மட்டும்தானா? பால்காரர்களின் தண்ணீர் கலப்படமும் அதற்கு ஒரு காரணம் இல்லையா?

யோசித்துப் பாருங்கள். இன்றைக்கு மீன் வியாபாரம் முழுமையாக சில்லறை வியாபாரிகளிடமே இருக்கிறது. மீன் வாங்கத் தெரியாத ஒரு நுகர்வோர் நல்ல மீன்களை சந்தையில் வாங்கி வருவது சாத்தியமானதாகத்தான் இருக்கிறதா? முதல் நாள் பிடிக்கப்பட்டு மறுநாள் காலையில் கெட்டுவிடும் மீன்கள், திறந்த நிலையிலேயே சந்தையில் மாலை வரை விற்கப்படுகின்றனவே இது சரிதானா? நாளை மீன் வியாபாரத்தையும் பெருநிறுவனங்கள் சுருட்டினால் அதற்குப் பொருளாதாரக் கொள்கையும் பெருநிறுவனங்களும் மட்டுமே காரணமாக இருக்குமா?

இந்த நாட்டில் எந்தத் துறையினரிடமும் இன்றைக்கு அறவுணர்வு கிடையாது. விளிம்பு நிலையிலிருக்கும் சில்லறை வியாபாரிகளிடம் மட்டும் அதை எதிர்பார்ப்பது அநீதியாக இருக்கலாம். ஆனால், தரமும் வாடிக்கையாளர் அணுகுமுறையும் அப்படி அல்ல. அவை வியாபாரத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

சில்லறை வியாபாரத்தில் பெருநிறுவனங்கள் வளர்ந்தால், நாளை நாட்டின் வேளாண்மையையும் விலைவாசியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அந்நிறுவனங்கள் உருவெடுக்கும். சரிதான். ஆனால், மளிகைச் சாமான்கள் வாங்கச் செல்லும் ஒரு சாதாரண நுகர்வோர் இதையெல்லாம் யோசித்துப் பெருநிறுவனங்களைப் புறக்கணிப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். போட்டிக்கு நாமும் தயாராக வேண்டும்.

சரியாகச் சொல்வதானால், நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை நாம் நுகர்வோரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இனி, வியாபாரிகளிடமும் பேசுவதே பொருத்தமானதாக இருக்கும்!