Thursday, December 20, 2012

கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்

இந்தியாவில் பொது சுகாதாரம் தேய்ந்துகொண்டே வருவது அதிர்ச்சி அளிக்கிறது என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம் பேணாத காரணத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.

பொது சுகாதாரத்தில் பிரதான பங்கு வகிப்பது பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், குப்பை அள்ளுதல், கழிவுநீர் செல்ல வாய்க்கால்கள் அமைப்பது போன்றவை, கழிப்பறை வசதிகளைச்செய்து தரவது. இதனை உள்ளாட்சி அமைப்புகள் சரியாகச் செய்தால்தான் மக்கள் நலமுடன் வாழலாம். மக்களுக்கான குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் ஏதேனும் ஒன்று கிடைக்காத நிலை உருவானாலும் அது மக்களை வெகுவாகப் பாதிக்கிறது. நீராதாரம் உள்ள பகுதியில் குடிநீர்த் திட்டங்களை உருவாக்கி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் முறையாக குடிநீர்த் திட்டங்களைப் பராமரிக்காத

காரணத்தால்தான் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கிருமிகள் கலந்து நோய்கள் பரவக் காரணமாகிறது என சுகாதாரத் துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் போன்றவற்றுக்கு மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கண்காணித்து வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளன. சமீபகாலமாக குப்பைகளை அள்ளுவது, கழிவுநீர்ப் பாதைகளைப் பராமரிப்பது, பொதுக் கழிப்பிடங்களில் போதிய தண்ணீர் வசதியை ஏற்படுத்தி சுத்தமாகப் பராமரிப்பது ஆகியவற்றில் பரவலாக அக்கறை அற்ற போக்கே காணப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப துப்புரவுப் பணிக்கு, பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் ஒப்பிட்டால், கிராம ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பணி செய்கின்றனர். உதாரணமாக 7,000 பேர் வசிக்கும் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 3 பேர்தான் உள்ளனர்.

கிராமப்புறங்களில் சாலையோரங்களில் குப்பைகள், கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. மக்களுக்கு வழங்கும் குடிநீரும் நிறம் மாறி விநியோகிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

மக்களிடையே மாறிவரும் வாழ்க்கை முறையால் சுகாதாரச் சீர்கேடுகளும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கப்பட்டு நோய்கள் பரவுகின்றன.

கிராம ஊராட்சிகளில் பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 1,500 சம்பளம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என்பதால் அவர்கள் பணியில் ஆர்வத்துடன் கவனம் செலுத்துவதில்லை.

இதுவே சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. ஊராட்சிகளில் புதிதாக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன.

மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலான துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டுதான் கிராமங்களில் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது.

இப்போது மக்களை டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை அச்சுறுத்தி வருகின்றன. இக் காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்திப் பலனில்லை. இதுபோன்ற கூட்டங்களில் குறைந்த நபர்களே பங்கேற்பதால் அவை பலன் தருவதில்லை.

பொது சுகாதாரத்தைப் பேணுவதில் மக்களின் பங்களிப்பும் அவசியமாகிறது. நம்மைச் சுற்றி உருவாகும் சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகளும் மக்களுக்கான சுகாதாரத்தைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Source:Dinamani

Wednesday, November 28, 2012

மலைக்க வைக்கும் "மலாலா


"பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மாமியார் மருமகள் சச்சரவு பற்றி அங்கலாய்ப்பார்கள். பெண்ணுக்குப் பல முனைகளிலிருந்து பிரச்னைகள் வருகின்றன. பெண் சிசுவதை, பாலியல் கொடுமை, கல்வி மறுப்பு, வரதட்சணைத் தொல்லை, புகுந்த வீட்டில் பிரச்னை, அலுவலகங்களில் உரிமை பறிப்பு என்று திணற அடிக்கும் பிரச்னைகள் நமது நாட்டில். மேலை நாடுகளிலும் வேறுவிதமான எதிர்ப்புகள்.

ஆனால் பின்தங்கிய நாடுகள், மூடப்பழக்கங்களில் உழலும் சமுதாயங்கள், தீவிரவாதம் அன்றாட நிகழ்வாக இருக்கும் இடங்களில், பெண்கள் அதுவும் குழந்தைகள் பல கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.

தீவிரவாதம் மிகுந்த இடங்களில் பள்ளிகள் முறையாக நடப்பதே அபூர்வம். நாட்கணக்காக மூடியிருக்கும். நடத்தப்படும் சில நாள்களிலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம்; இந்தச் சூழலில் எவ்வாறு படிக்க முடியும்? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு "கற்றலில் இனிமை' என்று அந்தப் பிஞ்சு உள்ளங்கள் கல்வியில் ஈடுபட முடியுமா?

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ளது கைபர் பக்துன்க்வா. அதில் ஸ்வாட் மாவட்டத்தில் மிங்கோரா என்ற சிறு நகரத்தில் வசிப்பவள் மலாலா யூசஃப்சாய். தந்தை யூசஃப்சாய் சமூக ஆர்வலர். எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துபவர். பஸ்தூன் வம்சாவளியில் வந்த முஸ்லிம் குடும்பம். பேசுவதோடு மட்டுமில்லாது ஒரு பள்ளியும் நடத்துகிறார். சிறுமி மலாலா, தந்தையின் கல்விச் சிந்தனைகளால் கவரப்பட்டு அதிக ஈடுபாடோடு சிறு வயதிலிருந்தே படிப்பில் கவனம் செலுத்தினாள்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்த ஸ்வாட் மாவட்டம் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதலும் எதிர்தாக்குதலும், இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும். கல்விக்கூடங்கள் மூடிக் கிடக்கும்.

கல்வி அடிப்படை உரிமை - எவ்வாறு தீவிரவாதிகள் அந்த உரிமையைப் பறிக்க முடியும் என்று சிறுமி மலாலாவின் உள்ளம் கொந்தளித்தது. தனது ஆதங்கத்தை இணையதளத்தில் இணைய வலைமூலம் உருது மொழியில் அவ்வப்போது வெளியிட்டாள். தந்தையும் ஊடகங்கள் மூலமாக தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மலாலாவும் இந்தக் கூட்டங்களுக்குச் சென்று பேசுவாள். சிறுமியின் பேச்சும் நியாயத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் தைரியமும் எல்லோரையும் கவர்ந்தது.

பி.பி.சி. ஊடகம் அவளது இணைய வலையை வைத்து நிகழ்ச்சி நடத்தியது. அவளது பாதுகாப்பு கருதி புனைபெயரில் அவளது கருத்துகள், மிங்கோரா நகரத்தில் தீவிரவாத நிகழ்வுகள், எவ்வாறு பெண்கள் தலிபான்களால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தது. அந்த நிகழ்ச்சி அமைதிக்காகப் போராடுபவர்களின் ஆதரவைப் பெற்றது.

பயமின்றி கருத்துப் பரிமாற்றம் - அதுவும் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய இடத்தில்; விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி சிறுமி மலாலா கவலைப்படவில்லை, ஆனால் சிந்தித்தாள்.

"என்னைத் தீவிரவாதிகள் தாக்கினால் அவர்களிடம் நிச்சயமாகக் கேட்பேன், ""உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, எங்களது கல்வி உரிமையைப் பறிக்க?'' என்று கேட்பேன்' என்று இணைய வலையில் பதிவுசெய்தாள்.

தீவிரவாதிகள் தாக்குதலில் பொது இடங்களும் பள்ளிக்கூடங்களும் சேதமடைகின்றன. பள்ளிக்கூடங்களோ செயல்படவில்லை. இயங்காத பள்ளிக்கூடங்களை ஏன் தகர்க்க வேண்டும்? அதில் தீவிரவாதிகளுக்கு என்ன பயன் என்று விரக்தியாக மலாலா தனது இணைய வலையில் குறிப்பிடுகிறாள்.

பதினான்கு வயது மலாலாவின் துணிச்சலும் அவளுக்குப் பெருகிவரும் ஆதரவும் தீவிரவாதிகளின் வெறுப்பைத் தூண்டியது.

கடந்த அக்டோபர் 10-ஆம் நாள் மலாலா பள்ளியிலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பும்போது அந்த வாகனம் தீவிரவாதிகளால் மடக்கப்பட்டது. பஸ்ஸில் ஏறிய தீவிரவாதிகள் மலாலாவை அடையாளம் கண்டு சுட்டனர். பாவிகளின் குண்டு அவளது தலையைத் துளைத்து கழுத்தில் சிக்கியது. மேலும் இரண்டு மாணவிகள் காயமுற்றனர்.

உடனடியாக மலாலா பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குண்டு எடுக்கப்பட்டது. பின்பு இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகர எலிசபத் மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மலாலா தாக்கப்பட்ட சம்பவம் மதம், நாடுகள் என்ற எல்லையைக் கடந்து எல்லோராலும் கண்டனம் செய்யப்பட்டது.

பிரபல மேற்கத்திய இசைப்பாடகி மோடன்னா, "மனித சுபாவம்' என்ற தனது பாடலை மலாலாவிற்கு அர்ப்பணித்தார். ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.

பொதுச் செயலர் பான் கீ மூன், மலாலாவின் வீரச்செயல்களைப் பாராட்டி எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் கல்வி கொடுப்பதற்கு சர்வதேச அமைப்புகள் துரித முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

""நான் மலாலா'' என்ற முழக்கம் பெண் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முக்கியமாகத் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய இடங்களில் மாற்றுப்பாதை வகுக்கவும் வரையப்பட்டது.

பெண் கல்வி திட்டத்தில் முக்கிய மூன்று அம்சங்கள் உள்ளன. 1. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க திட்டம் வகுக்க வேண்டும். 2. எல்லா நாடுகளும் பெண் கல்விக்கு எதிரான பழக்கங்கள், நடவடிக்கைகளை சட்ட விரோதச் செயல் என்று பிரகடனப்படுத்த வேண்டும். 3. பள்ளிக்குச் செல்ல முடியாத 70 லட்சம் குழந்தைகளை 2015-க்குள் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைய சர்வதேச அமைப்புகள் பாடுபட வேண்டும் என்பதாகும்.

மலாலா தாக்கப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியான தினம் "நவம்பர் 10', பெண் கல்வியை வலியுறுத்தும் தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பான் கீ மூன் தனது அறிக்கையில், ""சிறுமி மலாலா பெண் கல்விக்கு உலகின் முத்திரைச் சின்னம்'' என்று புகழ்ந்துள்ளார். ""நவம்பர் 10 - மலாலா நாள்'' உலகெங்கிலும் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டது. சிறுமி மலாலா விரைவில் குணமடைய கூட்டுப் பிராத்தனை தொடர்ந்து நடைபெறுகிறது.

சிறுமி மலாலாவிற்கு உள்ள பொறுப்பும் துணிச்சலும் சிறிதளவும் மற்றவர்களிடம் இருந்தால் தீவிரவாதம் தலைதூக்க முடியாது. முறையற்ற தாக்குதல் என்ற பயத்தைப் பரவச்செய்து தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். நமக்கேன் வம்பு என்று சாதாரண மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதைக் குறை கூற முடியாது. தீவிரவாதிகள் கை ஓங்கினால் மக்கள் முடங்குவது இயல்பு. மலாலாபோல் துணிச்சலாகக் குரல் எழுப்புபவர்கள் வெகு சிலரே. ஆனால், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை எற்படும். பயம் தெளியும். தீவிரவாதத்தை ஒழிக்க அவர்களது ஒத்துழைப்பும் பெருகும்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் போராளிகள் இல்லையேல் தீவிரவாதிகள் என்று கணக்குப் போடுவதால்தான் தீவிரவாதத்தை அறவே ஒழிக்க முடிவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படுகிறது.

நாம் தீவிரவாத ஒழிப்பு நாள், சத்பாவனா திவஸ், தேசிய ஒருமைப்பாடு தினம் என்று அந்தந்த நாள்களில் உறுதி மொழி எடுக்கிறோம் ஆனால் நடைமுறைகள் கேள்விக்குறியாக இருக்கின்றன.

""ஆயிரம் மலர்கள் பூக்கட்டும்'' என்பது போல ஆயிரமாயிரம் மலாலாக்கள் உலகில் உதயமாக வேண்டும். மலாலாவிற்கு வந்த உணர்வு நம்மிடமும் உள்ளது. ""நானும் மலாலா'' என்று வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம். அப்போதுதான் சாந்தி நிலவவேண்டும் என்பது மெய்ப்படும்.


Source: Dinamani

Monday, October 29, 2012

நீர்-இனி போர்: எதிரியாக மாறுமா எதிர்காலம்

பணத்தை தண்ணியா செலவழிக்கிறான்' என பழமொழி சொல்லப்போய், "தண்ணியை பணத்தைப் போல செலவழிக்கிறான்' என சொல்லும் காலம் நெருங்கி வருகிறது.

மண்ணுக்காக நாடுகள் முட்டிக்கொண்டதால் தான் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. எதிர்காலத்தில் இன்னொரு உலகப் போர் நடந்தால், அது நீருக்காக மட்டுமே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.இதற்கு காரணம், மாறி வரும் சுற்றுச்சூழ்நிலைகளால், நீர் என்பதே அரிதாகி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. செயற்கையாக நீரை தயாரிக்கலாம் என்றால், அது எளிதில் சாத்தியமாகாது. எனவே, இயற்கையாக கிடைக்கும் நீரை கைப்பற்ற, உலக நாடுகள் போட்டி போடும். தண்ணீர் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்பதால், உலக நாடுகள், உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.

பருவநிலை மாற்றம்:

பருவநிலை மாற்றத்தால், அதிக மழை அல்லது அதிக வெப்பம் என்ற நிலைமை ஏற்படுகிறது. சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் மக்கள் தொகை பெருக்கம், காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம் ஆகியவை. தேவையை உணர்ந்து செயல்படாவிட்டால், 2015லேயே தண்ணீர் தேவை அதிகரித்து, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை உயரும்.
பூமி, 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29 சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த தண்ணீரில் உப்பு நீரே அதிகம். 2.5 சதவீதம் நீர் மட்டுமே நல்லநீர். உலகில், 0.08 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50 நாடுகளை 1999ல் ஐ.நா., அறிவித்தது. தற்போது விவசாயத்திற்காக 70 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது. இது 2020ல் 87 சதவீதம் ஆகும் என, உலக தண்ணீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஐந்து வயது பூர்த்தியடையாத, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி, தொற்று நோய்களால் இறக்கின்றனர். சுத்தமான குடிநீர், நல்ல சுகாதாரம், சரிவிகித உணவு போன்றவற்றின் மூலமே இதை சரி செய்ய முடியும்.

என்ன தீர்வு:

அனைத்து ஆதாரங்களுக்கும், அடிப்படையான தண்ணீரை பாதுகாப்பது நமது கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு போன்ற வற்றை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம்.

"மடி'யில் கை வைத்த கதை:

பற்றாகுறை ஏற்பட்டதும், "மடி'யில் கை வைத்த கதையாக, நிலத்தடியில் கை வைத்தோம். அந்த நீரையும் எக்கச்சக்கமாக உறிஞ்சிகிறோம். இது இன்னொரு ஆபத்து. இதனால், அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிணறுகள் வற்றி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது.

நீரின் தேவை:

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத் தான் மற்ற உபயோகங்களுக்கு தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல், 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை, மொத்த நீரில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால், நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில், உலகம் அழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.
மாசுபடுத்தும் காரணங்கள்:நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள் தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள், ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கை தன்மையே மாறுகிறது. வீட்டு கழிப்பறை, சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் நிலத்தடி நீர் குடிநீராகவும்,60 சதவீத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.

செயற்கை நீர் சாத்தியமா:

செயற்கையாக நீரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்களை கேட்டால், முடியாது என்றே பதில் அளிக்கின்றனர். இருப்பினும், ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக்கூடியவை தான். ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடிவதில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்ஸிஜன், இரட்டை அணுவாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித்தெடுத்தால், இரண்டும் நிலையான எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். ஒரே அளவு எலக்ட்ரான்கள் கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்).செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குகிறோம்.

Source: DINAMALAR

நியூட்ரினோ ஆய்வகம்:


"நியூட்ரினோ' துகள் குறித்த ஆராய்ச்சி, இந்திய இயற்பியல் துறையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 1,320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் நிதி உதவியுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 2027 மீ., ஆழத்தில் பாதாள சுரங்கம் அமைத்து, உலகின் மிகப்பெரிய மின்காந்தம் (50 டன்) அமைக்கப்படவுள்ளது. நியூட்ரினோ "டிடக்டராக' இந்த மின்காந்தம் செயல்படும்.உலகின் பல பகுதிகளில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. சூரியனின் உள் வட்டம் குறித்த விபரங்கள் அறிய நியூட்ரினோ ஆராய்ச்சி முடிவுகள் அவசியம். இதற்காக அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வத்தில் நூற்றுக்கணக்கான இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நியூட்ரினோ என்றால் என்ன?:

"நியூட்ரினோ' எளிதில் அடையாளம் காண முடியாத, அணுவை விட சிறிய துகள். பெருவெடிப்பு ஏற்பட்டு, பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உற்பத்தி துவங்கியது. பால்வெளியில் நட்சத்திர கூட்டங்கள் மோதும் போதும், நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் போதும், நியூட்ரினோ உருவாகிறது. சூரியனில் எரிசக்தி உருவாக்கத்தின் போதும், நியூட்ரினோ வெளிப்படுகிறது (சோலார் நியூட்ரினோ). ஒளியை விட கூடுதல் வேகத்தில் பயணிக்கும், நியூட்ரினோ துகள்கள் பால்வெளியிலிருந்து பூமி பரப்பை எட்டும் வரை, எந்த சிதைவும் இல்லாமல் வந்தடைகிறது. உதாரணமாக சனி கிரகத்தில், எப்போதும் ஏற்பட்டு கொண்டிருக் கும் மின்காந்த புயலில் கூட, நியூட்ரினோ துகள் பாதிப்படைவதில்லை. நியூட்ரினோக்கள் எலக்ட்ரானை போன்ற பண்புடை யது. எடையற்ற, மின் அதிர்வை ஏற்படுத்தாத நியூட்ரினோ துகள்கள், மனிதனின் உடலில், ஒரு நொடிக்கு 50டிரில்லியன் என்ற எண்ணிக்கையில் ஊடுருவுகின்றன. பூமி உருவான அடிப்படை மூலக்கூறுகளில் நியூட்ரினோவும் அடங்கியுள்ளது.

ஆராய்ச்சி எதற்காக:

நியூட்ரினோ ஆய்வு என்பது அணு துகள்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிவதற்கான அடிப்படை ஆராய்ச்சி. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும், என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே, உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பங்கேற்பவர்கள்:

ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., கவுகாத்தி, அலிகார் யுனிவர்சிட்டி, தி இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெடிக்கல் சயின்ஸ், சென்னை, இந்திராகாந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச், கல்பாக்கம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், டெல்லி யுனிவர்சிட்டி, ஜம்மு, காஷ்மீர் யுனிவர்சிட்டி உட்பட 24 நிறுவனங்கள், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க உள்ளன. 100 இந்திய இயற்பியல் வல்லுநர்கள், மற்றும் ஹவாய் யுனிவர்சிட்டி ஆகியோர் இணைந்து ஆராய்ச்சியில் ஈடு பட உள்ளனர். செலவு முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

அம்பரப்பர் மலை தேர்வு ஏன்:

தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையை குடைந்து, பாதாள அறையில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ துகள்களுடன் இணைந்து பயணிக்கும் "காஸ்மிக்' கதிர்களை வடிகட்ட, கடினமான ஒற்றை கல்லால் ஆன பாறை தேவை. 2027மீ., கடினமான, அடுக்குகளற்ற, ஒற்றை பாறையாக அம்பரப்பர் மலை உள்ளது.
மலையின் அடியில் ஆய்வகம் அமையும் போது, இடையூறு இல்லாமல் நியூட்ரினோ துகள்கள் "டிடக்டரை' வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த மலையை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலா?:

பாதாள சுரங்கத்தில், 50 டன் எடையுள்ள மின்காந்தம் பொருத்தப்படவுள்ளது. சுரங்கம் தோண்ட, பாறையை வெடி வைத்து உடைக்கும் போதோ, வேறு தொழில் நுட்பத்தில் பாறையை உடைக்கும் போதோ ஏற்படும் அதிர்வாலும், பாறை தூசிகளாலும் அருகிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சுற்றுப்புற கிராம மக்களிடம் உள்ளது. இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உண்டு. நவீன தொழில்நுட்பத்தில் பாறையை குடைந்து பாதாள சுரங்கம் அமைக்கப்படும் என்று, டாடா கன்சல்டன்சி ஆப் பண்டமென்டல் ரிசர்ச் விஞ்ஞானி கே.மண்டல், பொட்டிபுரம் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முறையில் தூசி வெளியில் பறக்காத வண்ணம் வலைகள் சுற்றி கட்டப்படும். வெட்டி எடுக்கப்படும் பாறைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் என்றார்.

மக்களின் தேவை என்ன?:

ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரம் ஊராட்சி முழுவதும், விவசாயம் சார்ந்த பகுதி. இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்டது. ஆய்வக கட்டுமானப்பணிகளுக்கு, நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தப்படும் போது, இங்குள்ள இறவை பாசன கிணறுகளில் நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, இங்குள்ள வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பல்லிளிச்சான்பாறை கீழ் பகுதியில், சிறு அணை கட்டி மழை நீரை தேக்க வேண்டும். பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை, புதூர், பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பனாசாரிப்பட்டி கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிதியை பயன்படுத்தி, தடையில்லா கூட்டு குடிநீர் திட்டம், கழிவு நீரோடை வசதிகளை செய்ய வேண்டும். அவசர சிகிச்சைக்கு உத்திரவாதம் அளிக்க குப்பனாசாரிபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறு தொழில், கால்நடை வளர்ப்பு,விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆய்வகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு,தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ஆய்வகம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:ஆராய்ச்சி நோக்கத்திற்காக நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர், இப்போதே, ஆய்வக கட்டுமானம் துவங்கும் முன்பே வந்து பார்த்து செல்கின்றனர். கல்வி, சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர்கள் வருகையால், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும்.

கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது. தென்மாவட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். போக்குவரத்து வசதிகள் மேம்படும். உதாரணமாக மதுரை-எர்ணாகுளம் ரயில் பாதை நியூட்ரினோ ஆய்வகம் வழியாக செல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை, தென்னக ரயில்வே கட்டுமான துறையினர் மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில், இதற்கான ஆதரவு தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.

Source: DINAMALAR

Wednesday, October 3, 2012

இணையதளத்தின் இன்னொரு தளம்

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிப்பதைப் போலவே, இணையதள மோசடிகள் (சைபர் கிரைம்) எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்கின்றன. விதவிதமான அறிவுநுட்பத்துடன் இந்தக் குற்றங்கள் நடைபெறுகின்றன.

கடந்த 12 மாதங்களில் இணையதளம் பயன்படுத்தும் இளைஞர்களில் 56% பேர் ஏதோ ஒருவகையில் இணையதள மோசடிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது நார்டன் சைபர்கிரைம் அறிக்கை. சுமார் ரூ.800 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை. உலக அளவில் 11,000 கோடி ரூபாய் ஏமாற்றுவேலை நடந்திருக்கிறது என்கிறார்கள்.

உலக அளவில் இணையதளத்தைப் பயன்படுத்தும் முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவில் 51.3 கோடி பேர் இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அடுத்து அமெரிக்காவில் 24.5 கோடி பேர். மூன்றாவதாக, இந்தியாவில் 12.1 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். எண்ணிக்கையில் அதிகரித்தாலும், பயன்படுத்துவோரின் எச்சரிக்கை உணர்வு அதிகரித்துள்ளதா என்றால், இல்லை என்றே சொல்லிவிடலாம்.

தேவையில்லாத மின்னஞ்சலுக்குப் பதில் அளிப்பதன் மூலம் அல்லது இணைய தளத்தின் வழியாக, அறிமுகம் இல்லாத நிறுவனங்களில் பொருள்கள் வாங்கும்போது தேவையில்லாத தகவல்களை, விவரங்களைத் தாராளமாகத் தெரிவிப்பதன் மூலமும் தங்கள் ரகசியக் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொள்வதாலும் பல இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் எதைப் பகிர்ந்துகொள்வது என்ற கட்டுப்பாடே இல்லாத நிலை உள்ளது.

தற்போது ஆன்ட்ராய்டு செல்போன் மிகக் குறைவான விலையில் கிடைக்கத் தொடங்கிவிட்டதால், இணையதளத்தில் பெறக்கூடிய அனைத்துச் சேவைகளையும் செல்போனிலேயே செய்துவிட முடியும். அதிக அளவில் திருடுபோகும் பொருள் செல்போன் என்பதாலும், இணையவழி மோசடியில் ஈடுபடுவோர் இத்தகைய செல்போன் பயன்பாட்டைக் குறிவைத்து தங்கள் மோசடி வலைகளை விரிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 13.12 கோடி பேர் "இணையதள செல்போன்' பயன்படுத்துகின்றனர்.

ரூ.4,000 முதல் ரூ.40,000 வரை ஆன்ட்ராய்டு செல்போன்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. ஆகவே, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செல்போன் மூலம் இணையதள சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை இருக்கிறது.

அனைத்து வங்கிகளுமே செல்போன்மூலம் பணப் பரிமாற்றுப் பணிகளை நிகழ்த்திட ஊக்கப்படுத்துகின்றன. இதற்காக தனிக்கட்டணம் இல்லை. வெறும் குறுந்தகவல் அனுப்பும் அதே செலவுதான். ஆகவே ரூ.50,000 வரை பணப் பரிமாற்றத்தை செல்போன் மூலம் (மொபைல் பேங்கிங்) நிகழ்த்தலாம் என்று அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால், பயன்பாடு அதிகரித்த அளவுக்கு, அதன் மூலம் வரக்கூடிய ஆபத்து குறித்த எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கவில்லை. குறிப்பாக இளைஞர்கள் இதை விளையாட்டுப் பொருள்போலவே பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்ல, உடல்பாதிப்பு குறித்தும் இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. செப்டம்பர் மாதம் முதலாக, செல்போனில் ஏற்படும் கதிர்வீச்சு அளவு எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. உடலில் ஒரு கிலோ தசையின் திசுக்களில் அதிகபட்சம் 1.6 வாட் அளவுக்குத்தான் கதிர்வீச்சு இருக்க வேண்டும் என்று நிபந்தனையை விதித்துள்ளது. செப்டம்பருக்கு முன்பு வரை வாங்கப்பட்ட செல்போன்களில் கதிர்வீச்சு அளவு என்ன என்பதும், இப்போது உள்ள அளவு குறித்தும்கூட இளைஞர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.

இணையதள மோசடிகள் ஒருபுறம் இருக்க, சாதாரண ஏடிஎம் இழப்புகள் இன்னொரு பக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஏடிஎம் மையங்கள் மூலம் பணஇழப்பு நேரிட்டதாக வரும் புகார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது. 2008-ம் ஆண்டு 153 பேர் புகார் தந்தார்கள். இவர்கள் இழந்த தொகை ரூ.246 லட்சம். 2011-ம் ஆண்டில் 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இழந்த தொகை ரூ. 706 கோடி!

இதற்குக் காரணம் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தும் முறைகளில் உள்ள கவனக்குறைவுதான் என்கின்றன ஆய்வுகள். அட்டை காணாமல் போனால் உடனடியாக அதை முடக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அல்லது அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதது, மோசடி செய்வோருக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

பணம் எடுப்பதற்கான "கடவு எண்' தனக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதைக் கண்டுபிடிக்க மோசடி செய்வோருக்கு சில நிமிடங்களே போதுமானது. பணஇயந்திரத்தில் ஏடிஎம் அட்டையின் கடவு எண்களை எந்தத் தொழில்நுட்பம் உணர்ந்து கட்டளையை ஏற்கிறதோ அதே தொழில்நுட்பத்தை மோசடிக்காரர்கள் கையாளுகிறார்கள். ஏடிஎம் அட்டைகள் கைக்குக் கிடைத்தவுடன், இதற்கான பிரத்யேக கருவியில் அட்டையைப் பொருத்தி கடவு எண்களைக் கண்டுபிடித்து, உடனடியாகப் பணத்தை அட்டையால் உறிஞ்சிவிடுவார்கள். அவ்வளவு வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இணையதளத்தின் மூலம் மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்கும் படலங்களும், அதன் மூலம் நடைபெற்ற திருமணங்களும், அதன் பிறகான ஏமாற்றங்களும் மோசடிகளும்... சொல்லி மாளாத கதைகள் தொடருகின்றன.

ஒரு இணையதளம், ஆனால் பல தளங்களில் பிரச்னைகள்!

Source: Dinamani

திட்டமும் கமிஷனும்!

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சனிக்கிழமை தில்லியில் கூடிய முழு திட்டக் கமிஷன் பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.2 சதவீதம் என்ற அளவை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இனி மத்திய அமைச்சரவை கூடி, திட்ட அறிக்கை, இலக்கு, வழிமுறை ஆகியவற்றைப் பரிசீலித்து தேவைப்பட்டால் சில மாற்றங்களைச் செய்து தன்னுடைய ஒப்புதலைத் தெரிவிக்கும். அதன் பிறகு அனைத்து மாநில முதலமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட "தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டம்' (என்.டி.சி.) கூடி இந்த ஐந்தாண்டு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தர வேண்டும்.

ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஜவாஹர்லால் நேரு காலத்தில் இருந்த முக்கியத்துவம் இப்போது இல்லை. முதல் காரணம் போடப்படும் திட்டங்கள் எதுவும் உரிய காலத்தில் உரிய வகையில் நிறைவேற்றப்படுவதில்லை. அதுமட்டுமல்ல. நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான திட்டங்களையும், நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுத்து நிபந்தனைகளையும் விதிப்பதால் பல திட்டங்கள் அமலாகாமல் நீடிக்கின்றன.

உதாரணமாக, தமிழ்நாட்டில் "கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 3,000 கோடி ரூபாய் நிதியைத் தமிழக அரசு பயன்படுத்தவே இல்லை'. அதற்கு காரணம், "இதுவரை போக்குவரத்து வசதியையே பார்த்திராத கிராமமாக இருக்க வேண்டும், அந்த கிராமம் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவான மக்கள் தொகையையே கொண்டிருக்க வேண்டும்' போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததுதான்.

÷வடகிழக்கு மாநிலங்களையும் ராஜஸ்தான், உத்தரகண்ட் மாநிலங்களின் நிலையையும் மனதில் கொண்டு திட்டமிடுவது என்பது தமிழ்நாட்டிற்கு எப்படிப் பொருந்தும்? சாலை இல்லாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டிருக்கிறதே!

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பிறகும்கூட மாநிலங்களுக்காக மத்திய அரசின் திட்டமிடல் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

தென் மாநிலங்களுக்கான ரயில்பாதைகளை இரட்டிப்பாக்குவது, மேலும் பல நகரங்களுக்கு நீட்டிப்பது போன்ற சாதாரண பணிகள் கூட உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதில்லை. அவ்வளவு ஏன், ரயில் பாதைகளின் கீழே கட்டப்படும் சுரங்கப் பாதைகளை முடிக்கக்கூட பல மாமாங்கங்கள் பிடிக்கின்றன.

11 ஐந்தாண்டு திட்டங்கள் முடிந்த பிறகும்கூட மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் மாநிலத்துக்கு ஒரு ஐ.ஐ.டி.யும் ஏற்படுத்தப்படவில்லை. கல்வி, சுகாதாரத்துறையில் நம்முடைய திட்டமிடலும் செயலாற்றலும் எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

மத்திய திட்டக்குழு ஒப்புதல் வழங்கிய பல திட்டங்கள் முழுமை பெறாமல் இருப்பதற்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதும், அனுமதி தரப்படுவதில் உள்ள காலதாமதமும் முக்கிய காரணங்கள்.

இதற்கு நிதியமைச்சர் புதிய யோசனையைத் தெரிவித்திருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு அதிகமான திட்டங்களைப் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க பிரதமர் தலைமையில் தேசிய முதலீட்டு வாரியம் (என்.ஐ.பி.) அமைக்க வேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சரவை, மத்திய திட்டக்குழு இரண்டுமே பிரதமர் தலைமையில்தான் இயங்குகின்றன. இந்த இரண்டிலும் பேசி முடிவு செய்தவற்றுக்கு செயல்வேகம் கூட்ட இன்னொரு அமைப்புக்கு என்ன தேவை.

திட்டக்குழு தொடங்கிய இடத்துக்கே செல்லவேண்டும் என்பதுதான் நம்முடைய கருத்து. அதாவது இரண்டாவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் விவசாயத்துக்கும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும், மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் அளித்த அதே முக்கியத்துவத்தை நாம் மீண்டும் அளித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள் வேலைவாய்ப்பு திட்டமாக்கி, விவசாய நிலங்களை தரிசு பூமியாக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே, பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்

மத்திய திட்டக்குழு என்பது மாநில திட்டக்குழுக்களின் பிரதிநிதிகளும் அடங்கிய அமைப்பாக இருந்தால் மட்டுமே, அல்லது, மத்திய திட்டக்குழுவுக்கு ஆலோசனைகள் வழங்கவும், திட்டமிடுவதை நெறிப்படுத்தவும், மாநிலத்தின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு இருந்தால் மட்டுமே, முறையாக திட்டமிடவும், திட்டமிட்ட இலக்கை எட்டவும் முடியும்.

புள்ளிவிவரங்களால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை. அன்னிய முதலீட்டாளர்களையும், சர்வதேச நிதி நிறுவனங்களையும் திருப்திப்படுத்த வேண்டுமானால் இந்த புள்ளிவிவரங்கள் பயன்படுமே தவிர சராசரி இந்தியனின் அடிப்படை எதிர்பார்ப்புகளை இந்தப் புள்ளி விவரங்கள் எந்தவிதத்திலும் நிறைவேற்றப் போவதில்லை.

Source: Dinamani

இனியும் வேண்டாம் தாமதம்!


கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அண்மையில் அடிக்கல் நாட்டிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், 20 லட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி என்பது 31 சதவீதம் என்றாலும், பெருவாரியான நகரங்களில் மக்கள் நெரிசல் கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது. புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், நகரின் மத்திய பகுதிகளில் வேலை பார்ப்பதற்கு வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததும்தான் இதற்குக் காரணம். எல்லோரும் நகரத்துக்குள்ளேயே வாழ விரும்புவதால் நகர்ப்புறங்களில் மக்கள் நெரிசல் அதிகரித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 20 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்கள் சென்னை, கோவை மட்டுமே. இதற்கு அடுத்த நிலையில் மதுரையில் 14 லட்சம் மக்களும், திருச்சியில் 10 லட்சம் பேரும் வாழ்கிறார்கள். நகர வளர்ச்சியைக் காணும்போது, மதுரை, திருச்சி இரு நகரங்களும் விரைவில் 20 லட்சம் மக்களைக் கொண்ட நகரங்களாக மாறிவிடும்.

தமிழ்நாட்டில் தற்போது சென்னை நகரத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் நிபந்தனைப்படி இத்தகைய மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட வேண்டுமானால், இப்போதைக்கு அது கோவையில் மட்டுமே சாத்தியம்.

இத்தகைய திட்டங்களுக்கு மிகப்பெரும் மூலதனம் தேவை என்பதாலும், உலக வங்கி போன்ற நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பதாலும் மத்திய அரசின் அனுமதி அவசியமாகிறது. இந்நிலையில், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் என்பது, அந்த வசதியுள்ள நகரங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுமே தவிர, மக்கள் நெரிசல் பிரச்னையையோ போக்குவரத்து வசதி பிரச்னையையோ தீர்க்க உதவாது.

பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 24 ஆக உள்ளன. திருப்பூர், ஒசூர், வேலூர் ஆகிய நகரங்கள் இதில் குறிப்பிடத் தக்கவை. இந்நகரங்களில் இப்போதே ஏன் மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும்? அதற்குத் தேவை என்ன என்று கேட்கலாம். இந்த நகரங்கள் முறையே கோவை, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களுடன் தொடர்புடையவை. கோவை-திருப்பூர், பெங்களூர்-ஒசூர், சென்னை-வேலூர் இடையே அன்றாடம் பல லட்சம் பேர் பணியின் நிமித்தமாகப் பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரயில் திட்டத்தை இந்த நகரங்களில் அமல்படுத்தி புறநகர் பகுதிகளை விரிவுபடுத்தினால், கோவை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் மக்கள் நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பெருக்கம்தான். ஆண்டுதோறும் கார்களின் விலை கூடினாலும், இரு சக்கர வாகனங்களின் விலை ஒரு பழைய காரின் விலை அளவுக்கு இருந்தாலும்கூட, அவற்றின் விற்பனையில் சரிவுகள் இல்லை.

எந்த அளவுக்கு கார்களும் இரு சக்கர வாகனங்களும் விரைந்து செல்லப் பயன்படுகிறது என்பது விவாதப் பொருள். அதிகரித்த வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்த்துவிடுகிறது என்பதை அனைவரும் உணர்ந்தாலும் சொந்த வாகன மாயையில் கட்டுப்பட்டு பொது போக்குவரத்தைத் தவிர்க்கிறார்கள். பொது போக்குவரத்தும் சரி, தேவைக்கு ஏற்றபடியும், வசதியுடனும் இல்லாமல் இருப்பதும் இன்னொரு காரணம்.

பொதுமக்கள் விரைவாகத் தங்கள் இடத்துக்குப் போக முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பொது வாகனங்களைப் பயன்படுத்தும் கலாசாரத்துக்கு மாறுவார்கள். இத்தகைய மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு மெட்ரோ ரயில் பேருதவியாக இருக்கிறது. இதைத்தான் தில்லி மெட்ரோ ரயில் திட்டம் உறுதிப்படுத்தி இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 20 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இவர்களில் பாதிப்பேர் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தியவர்கள். தற்போது மெட்ரோ ரயிலுக்கு மாறியுள்ளனர்.

ஆகவே, 10 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தினால், பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தவும், நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையவும் உதவும். பெரு நகரங்களிலும் சரி, சிறு நகரங்களிலும் சரி, புறநகர் பகுதிகளில் மக்கள் அதிகமாகக் குடியேறி நகரின் மத்திய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைய மெட்ரோ ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதைத்தான் லண்டன், பாரீஸ், நியூயார்க், டோக்கியோ, சிங்கப்பூர், நமது இந்தியத் தலைநகர் தில்லி போன்றவை உணர்த்துகின்றன.

ஒரு திட்டத்தைத் தொடங்கி, அதற்குத் தேவைப்படும் இடங்களைக் கையகப்படுத்தி, கட்டுமான வேலைகளைத் தொடங்க, 20 லட்சம் மக்கள் தொகை பெருக்கத்துக்காக காத்திருந்தால், புதிய கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிடும். இந்த இடங்களை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடியவும் நாளாகும். ஆகவே, இப்போதே அதற்கான பணிகளைத் தொடங்கி விடுவதுதான் அறிவுடைமை.

Source: Dinamani

Friday, August 17, 2012

கிரீடமா, முள் கிரீடமா?

இந்தியப் பொருளாதாரம் ஓர் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து கீழ்நோக்கிப் பயணிக்கும் காலம் இது. 1991-ம் ஆண்டு முதல் நமது பொருளாதாரம் சீர்திருத்தப் பாதையில் பயணித்து அதனால் எல்லோரும் பாராட்டும் வகையில் வளர்ந்து வந்தது; படிப்படியாகத் தொய்வு ஏற்பட்டு 2010-11-ம் ஆண்டுகளுக்கான கணக்கீட்டின்படி முந்தைய ஆண்டில் 8.4% ஆக இருந்த ஜி.டி.பி. எனப்படும் மொத்த உற்பத்தி மதிப்பு 6.5% ஆகக் குறைந்துள்ளது.
உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால்தான் இந்த வீழ்ச்சி எனவும் இந்த நிலைமையிலும்கூட 6.5% ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி என்பது தலைசிறந்த வளர்ச்சி எனவும் தற்போது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "முந்தைய நிதி அமைச்சர்' பிரணாப் முகர்ஜி கூறினார்.
ஆனால் முகர்ஜி கவனிக்க மறந்த ஒரு விஷயம் 2010-11-ம் ஆண்டில் 8.2 சதவிகிதமாக இருந்த தொழில்களின் வளர்ச்சி 2011--12-ம் ஆண்டில் 2.8 சதவிகிதமாகக் குறைந்ததையும், தொழிற்சாலைகளின் உற்பத்தியளவு 3.2 சதவிகிதம் இதே சமயத்தில் குறைந்ததையும்தான்.
இந்தியப் பொருளாதாரத்தின் மற்ற பல அம்சங்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. நமது ஏற்றுமதி சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 10 சதவிகிதம் குறைந்தது. இதே காலகட்டத்தில் நமது இறக்குமதி அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகமானால் வெளிவர்த்தகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்று பொருள். தற்சமயம் இந்தப் பற்றாக்குறை நமது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4 சதவிகிதம் என்பது, நமது பொருளாதாரம் 1989-92-ம் ஆண்டுகளில் இருந்த மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
சென்ற ஆண்டில் நமது ரூபாயின் மதிப்பு 27 சதவிகிதம் குறைந்துள்ளது. ஒரு நாட்டில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கும்போது அந்த நாடே முன்வந்து தனது நாணயத்தின் மதிப்பைக் குறைப்பது வழக்கம். காரணம், இதுபோல் குறைக்கப்பட்ட நாணய மதிப்பினால் வெளிநாட்டவர் அவர்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டுப் பொருள்களுக்குக் குறைந்தவிலை என்பதால் நிறைய இறக்குமதிப் பொருள்களை வாங்குவார்கள். இதனால் நாணய மதிப்பைக் குறைத்த நாட்டின் ஏற்றுமதி அதிகமாகும்.
உதாரணமாக, இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைய ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு துணி 100 டாலர்கள் என இருந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் அதேபோன்ற துணி 90 டாலர்கள் என இருந்தால் சீனாவின் துணியைத்தான் அதிகம் வாங்குவார்கள். இந்த நிலைமையில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 45 ரூபாய் என்று இருந்தது வீழ்ச்சியடைந்து 55 ரூபாய் என ஆகிவிட்டால் அதே இந்திய துணியின் விலை 81 டாலர்கள் ஆகிவிடும். 90 டாலர் சீனாவின் துணியைவிட 81 டாலர் இந்தியத் துணி குறைந்த விலை என்பதால் அதை அதிகம் விரும்பி வாங்கி அதனால் நமது ஜவுளி ஏற்றுமதி அதிகமாகும். இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும்.
மத்திய ரிசர்வ் வங்கியே முன்வந்து நமது ரூபாயின் மதிப்பைக் குறைக்காமல், வேறு பல காரணங்களுக்காக ரூபாயின் விலை அதுவாகவே குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனாக நமது ஏற்றுமதி அதிகரிக்காமல் போனது அடிப்படை பொருளாதார விதிமுறைகளில் எங்கேயோ இடிக்கிறது. இதை நுணுக்கமாக ஆராய்ந்தால் நமது நாட்டில் ஏற்றுமதியாகும் பொருள்களின் உற்பத்தி குறைந்ததுதான் காரணம் என்பது விளங்கும்.
இதுபோன்ற பொருளாதாரப் பிரச்னைகளைச் சரிசெய்யும் திறமை நமது புதிய நிதியமைச்சருக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம் மூலப்பொருள்களின் உற்பத்தி குறைந்து, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்கிறார் நமது பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன். இவற்றைச் சரிசெய்ய தொழில்துறையில் புதிய முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
புதிய முதலீடுகள் ஏற்பட நமது வங்கிகள் மூலதனத்திற்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். ஆனால் ரங்கராஜன் அக்கருத்தை ஏற்கவில்லை. ""ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் பணவீக்கம் குறைந்ததாகவே இருந்தது. ஆனால், இந்தியாவில் வளர்ச்சி குறைந்து பணவீக்கம் அதிகமாயிருக்கும் காரணத்தால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது. ஏனென்றால், வட்டி விகிதம் குறைந்தால் பணவீக்கம் மேலும் அதிகமாகும்'' என பதிலளித்துள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் இவ்வாறு கூறும்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னரும் இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார். ""நமது நாட்டில் 9 சதவிகிதம் பணவீக்கம் உருவாகியிருப்பதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என்பது அவரது வாதம்.
ஆனால், இந்த இரண்டு பொருளாதார மேதைகளும் மறந்த விஷயம் பணவீக்கம் இரண்டு வகைப்படும் எனும் அடிப்படைப் பொருளாதாரத் தத்துவத்தைத்தான். அதாவது பொருள்களின் தேவை அதிகரித்தாலும், பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்தாலும் பணவீக்கம் உருவாகும்.
முதல் வகையான பணவீக்கத்தின்படி தேவை அதிகரித்து பொருள்களின் விலை அதிகமானால், உற்பத்தி பெருகி பொருளாதாரம் முன்னேறும். எனவேதான் வளர்ந்துவரும் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்குப் பணவீக்கம் நல்லது எனக் கூறப்படும். இரண்டாவது வகையான பணவீக்கம் உற்பத்தியாகும் பொருள்களின் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பதால் ஏற்படுவது. இது ஏற்பட்டால் பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டு தொழில்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படும்.
ரூபாய் மதிப்பு குறைந்ததால் நாம் இறக்குமதி செய்யும் பல இடுபொருள்களின் விலை ஏறி உற்பத்தி பாதித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்றம் இதற்கு அடிப்படையான காரணம் எனலாம். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாத ரிசர்வ் வங்கி தொழிற் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காதது ஒரு பெரிய குறை.
இந்தியப் பொருளாதாரத்தை 1947-லிருந்து கூர்ந்து கவனிக்கும் பலருக்கும் ஆரம்ப காலங்களில் நமது நாட்டில் பண்டித ஜவாஹர்லால் நேருவால் பின்பற்றப்பட்ட சோஷலிசம் சார்ந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பணவீக்கம் நினைவுக்கு வரலாம். அது பொருள்களுக்கான தேவை, மக்களுக்குக் கிடைப்பதைவிட அதிகமாக இருந்தது என்பதால் ஏற்பட்டது. அதாவது ஒரு பொருளுக்கு மக்களிடையே தேவை இருந்தது, ஆனால் சந்தை வரவு (சப்ளை) குறைவாக இருந்தது.
ஆனால், 1991-ல் நாம் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் சீர்திருத்தத்தைப் பின்பற்ற ஆரம்பித்த பின் ஏற்பட்ட பணவீக்கம் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால் உருவானது.
உதாரணமாக, 2006-ல் ஏற்பட்ட வறட்சியால் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி பாதித்ததனால் பணவீக்கம் உருவானது. இப்பொழுது நாடெங்கிலும் பல மாநிலங்களில் போதிய அளவு மழை இல்லாததால் வறட்சி நிச்சயம் என்பது தெரிய வருகிறது. இதனால் பணவீக்கம் உயரலாம். விலைவாசி ஏறலாம்.
2008-09-ம் ஆண்டு வங்கிகளின் வட்டிவிகிதம் குறைக்கப்பட்டதால் அன்று பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் சீராகி வளர்ச்சிப் பாதையில் சென்றது. அன்று இதைச் செய்த ரிசர்வ் வங்கி, இன்று அதை மறந்தது ஏன் எனத் தெரியவில்லை.
அடுத்து, அரசு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் நிதிநிலையில் வரவைவிட அதிகமாக இருக்கும் செலவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. இதில் மத்திய அரசு மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.
மாநில அரசுகள் தெரிந்தே ஓட்டு வங்கி அரசியலுக்காக அதிக செலவுகளை இலவசங்களுக்குச் செலவிடுவது பழைய காலங்களில் நடந்தது. ஆனால் இப்போது மத்திய அரசும் ஓட்டு வங்கி அரசியலைக் கருத்தில்கொண்டு இலவசங்களை அள்ளித் தெளிக்கிறது.
இதனால் இந்த ஆண்டு பற்றாக்குறை நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 8 சதவிகிதமாகியுள்ளது. இது 4 சதவிகிதத்திற்கு மேல் செல்லக்கூடாது என்பதற்காக ""நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்பான வரவு - செலவு கட்டுப்பாடு சட்டம்'' என்ற ஒரு சட்டத்தை இயற்றியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

மேலே கூறிய எல்லா பிரச்னைகளையும் நன்கு உணர்ந்தவர்தான் நமது பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன் சிங். நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ப. சிதம்பரமும் இத்துறையில் அனுபவப்பட்டவர்தான்; அவர்கள் இப்பிரச்னைகளை எதிர்கொண்டு பொருளாதாரத்தை எப்படிச் சீரமைக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருப்பதில் வியப்பில்லை.
இன்றைய பொருளாதாரப் பிரச்னைகளுக்கு விலைவாசி உயர்வு, நாணய மதிப்புக் குறைவு, குறைந்து வரும் ஏற்றுமதி, பாதிக்கப்பட்டிருக்கும் உற்பத்தி போன்ற பிரச்னைகளுக்கு நிதியமைச்சர் தீர்வுகாணும் விதத்தில்தான் அரசின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படும். ப.சிதம்பரத்திற்குச் சூட்டப்பட்டிருப்பது கிரீடமா இல்லை முள் கிரீடமா என்பது அவர் நிலைமையை எதிர்கொள்வதன் மூலம்தான் முடிவு செய்யப்படும்.

சீனக் கடலில் தீவுச் சண்டை


கிழக்கு, தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்குப் பல்வேறு நாடுகள் உரிமை கொண்டாடி வருவதால் சமீபகாலமாக அக்கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது.
கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பானுடன் சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் ஏற்பட்டுள்ள தீவுச் சண்டைதான் பதற்றத்துக்குக் காரணம். தூதர்களைத் திரும்ப அழைப்பது, அதிபர்களின் வார்த்தைப் போர், போர்க் கப்பல்களை முன்னெடுத்துச் செல்வது, ராணுவத்தைத் தயார்படுத்துவது என்று கிழக்கு சீனக் கடல் பகுதியில் நாளுக்குநாள் பிரச்னை பெரிதாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
கிழக்கு சீனக் கடல்பகுதி, சிறு சிறு தீவுகள் நிறைந்த இடம். அங்குள்ள தீவுகளுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் தங்களுக்கென்று உரிமை கொண்டாடி வருவது பல ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து வருகிறது.
இத்தீவுகளில் உள்ள தாது வளம், கடல் பகுதியில் காணப்படும் அபரிமிதமான மீன் வளம் உள்ளிட்டவையும், கிழக்கு சீனக் கடல்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமுமே இந்தப் போட்டிகளுக்குக் காரணம்.
அதே நேரத்தில் தென் சீனக் கடல்பகுதியிலும் இதேபோன்ற பிரச்னைகள் உள்ளன. சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதி இக்கடல் பகுதி வழியாகத்தான் நடைபெற்று வருகிறது என்பதும், இக்கடல் பகுதியில் புதைத்து கிடக்கும் அபரிமிதமான எண்ணெய் வளமுமே இப்பகுதியில் ஆதிக்கப் போட்டிக்கு முக்கியக் காரணம்.
சீனா, தைவான், பிலிப்பின்ஸ், வியத்நாம் போன்ற நாடுகளும் இப்பகுதியில் தீவுச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
கிழக்கு சீனக் கடல் பகுதியில் தியாவு தீவுக் கூட்டம் யாருக்குச் சொந்தம் என்ற போட்டியால் சமீபகாலமாக ஜப்பான் - சீனா இடையிலான உறவு சீர்குலைந்து மோதல்போக்கு அதிகரித்துள்ளது. சீனாவுக்கான ஜப்பான் தூதர் யுச்சிரோ, தீவுகள் பிரச்னையில் தங்கள் நாட்டு அரசின் கொள்கைக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனாவுக்கான தனது தூதரை ஜப்பான் திரும்ப அழைத்துக் கொண்டது.
தீவுக் கூட்டத்தின் மீதான தங்கள் உரிமையை நிலைநாட்ட அப்பகுதியில் உள்ள 3 முக்கியத் தீவுகளை விலை கொடுத்து வாங்கி, ராணுவத்தை நிறுத்த முடிவு செய்தது ஜப்பான். இதையடுத்து உடனடியாக தனது சண்டித்தனத்தைக் காட்டியது சீனா. தனது இரு போர்க்கப்பலை பிரச்னைக்குரிய பகுதியில் நிறுத்தி வைத்து பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இதற்கு பதிலடியாக, "அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று ஜப்பான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
தென் சீனக் கடலில் சீனாவுக்குப் போட்டியாக இருக்கும் நாடுகளான பிலிப்பின்ஸ், வியத்நாம், தைவான் போன்றவை சற்று பலவீனமானவை என்பதால் அங்கு தங்கள் ஆதிக்கத்தை எளிதில் நிலைநாட்டி விடலாம் என்ற நோக்கில் சீனா செயலில் இறங்கியுள்ளது. தென் சீனக் கடல் பகுதியின் பெரும்பகுதி தங்களுக்கே உரியவை என்று வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் இந்தியாவுக்கு இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, வியத்நாம் அருகே தென் சீனக் கடல் பகுதியில் அந்நாட்டு ஒத்துழைப்புடன் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென இந்தியாவுக்கு சீனா நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், சீனாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் மேலும் பல துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வியத்நாமுடன் இந்தியா ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது.
தொடக்கத்தில் இருந்தே இந்தியாவை வேண்டாத நாடாகக் கருதும் சீனாவால், தாங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்பும் தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா நிலைகொண்டுள்ளதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரச்னை உச்சத்தை எட்டி சர்வதேச தலையீடுகள் ஏற்படும்போது வியத்நாமுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்தியா எடுக்கும் என்பதுவே இதற்குக் காரணம்.
அதே நேரத்தில் கிழக்கு சீனக் கடல் பகுதியில் நிலைமை முற்றிலும் வேறு. விடாக்கொண்டனாக ஜப்பானும், கொடாக்கண்டனாக சீனாவும் மோதலில் இறங்கியுள்ளன. இதனால் கிழக்கு சீனக் கடல் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தென் கொரியாவும் சில தீவுகளுக்கு உரிமை கொண்டாடி போட்டியில் இறங்கியுள்ளது.
ஜப்பானால் தகிஷிமா என்றும், தென் கொரியாவால் டோக்டோ என்றும் உரிமை கொண்டாடப்படும் பிரச்னைக்குரிய தீவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டார் தென் கொரிய அதிபர் லீ மயூங்-பாக். இதனால் கடும் அதிருப்தியடைந்த ஜப்பான், தென்கொரியாவுக்கான தனது தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துக் கொண்டது.
ஒலிம்பிக் போட்டியிலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜப்பானை தென் கொரியா வீழ்த்தியது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, இத்தீவு பிரச்னையில் ஜப்பானைக் கண்டிக்கும் வாசக அட்டையுடன் மைதானத்துக்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் தென்கொரிய வீரர் பார்க் ஜோங்வூ.
அடுத்த சில நாள்களிலேயே தென்கொரியாவைச் சேர்ந்த 40 பேர் அடங்கிய குழு பிரச்னைக்குரிய தீவுக்கு தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் நீந்திச் சென்று தீவு தங்களுக்குத்தான் என்று உரிமை கொண்டாடியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது ஜப்பான்.
இந்தப் பிரச்னை குறித்து பேசித் தீர்வுகாண வாய்ப்பே இல்லை என்று ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகியவை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டன. எனவே நிலைமை மேலும் மோசமானால் சீனக் கடல் பகுதியில் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

Wednesday, August 8, 2012

கயிற்றின் மேல் நடக்கும் ரிசர்வ் வங்கி!

            பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் ஜூலை 31-ம் தேதி வெளியிட்ட நிதி, கடன் கொள்கை பரபரப்பானதாக இல்லாவிட்டாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
ரிசர்வ் வங்கி கவர்னர் "ரெப்போ ரேட்'டையோ (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகாலக் கடனுக்கான வட்டி விகிதம்) அல்லது சி.ஆர்.ஆர். (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு) விகிதத்தையோ மாற்றவில்லை.
ஆனால், எவரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்திருக்கிறார் கவர்னர். எஸ்.எல்.ஆர். (வங்கிகள் திரட்டுகிற டெபாசிட் தொகையில் கட்டாயமாக அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டிய தொகை) ஒரு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர். ஆகியவற்றை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றுவதுண்டு. ஆனால் எஸ்.எல்.ஆரை, அத்திப்பூ பூத்தாற்போல், எப்போதாவது ஒருமுறைதான் மாற்றும்.
ஆக, "ரெப்போ ரேட்' 8 சதவிகிதமாகத் தொடரும். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு தொகை 4.75 சதவிகிதம் என்கிற அளவிலேயே நீடிக்கும். டெபாசிட் தொகையில் ஒரு பகுதியை வங்கிகள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டிய அளவு, 24 சதவிகிதத்திலிருந்து 23 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நடவடிக்கைகளின் விளைவு: வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையாது. இதனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கடன்களுக்கான வட்டியும் குறையாது.
அதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய கையிருப்புத் தொகை (சி.ஆர்.ஆர்) 4.75 சதவிகிதமாகவே தொடருவதால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதற்காக உள்ள நிதி ஆதாரத்தில் மாற்றம் இருக்காது.
இந்த நடவடிக்கைக்கான பின்னணி என்னவெனில், இப்போதுள்ள பணவீக்கச் சூழலில் வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம், குறிப்பிடும்படியான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
அதேநேரம், வட்டி குறைந்தால், மேலும் பணவீக்கம் அதிகரிக்கவே செய்யும். எனவே, நீண்டகால அளவில், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மேற்கூறிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், அரசுப் பத்திரங்களில் வங்கிகள் முதலீடு செய்ய வேண்டிய அளவு ஓசைப்படாமல் 24 சதவிகிதத்திலிருந்து 23 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சதவிகித குறைப்பின் பயனாக, வங்கிகளின் ஒட்டுமொத்த நிதி ஆதாரம், அதாவது கையிருப்பு, ரூ. 60,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும்.
இதன் பயனாக, பொதுமக்களுக்கு இரண்டு நன்மைகள் ஏற்படும். ஒன்று, வங்கிகளின் கையிருப்பு அதிகரிப்பதால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன், சிறுதொழில் கடன், விவசாயக் கடன் ஆகிய அனைத்து வகை கடன்களையும் தங்கு தடையில்லாமல் கொடுப்பதற்கு வங்கிகள் முன்வரும்.
இரண்டாவதாக, வங்கிகள் அரசுப் பத்திரங்களில் ரூ. 60,000 கோடியை முதலீடு செய்திருந்தால் அவர்களுக்கு சராசரியாக 7.5 சதவிகித வட்டிதான் கிடைத்திருக்கும். அந்தப் பணத்தை இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கடனாகக் கொடுப்பதால், வழக்கத்தைவிட சற்று குறைவான வட்டி வசூலிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இதை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஏற்கெனவே கோடிட்டுக் காட்டியுள்ளார். இதே கருத்தை இந்திய வங்கிகள் சங்கத் தலைவரும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை, வங்கிக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மறைமுகமாக உதவியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உண்டு. ஒன்று பணவீக்கத்தையும் விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருப்பது. இரண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன்கள் கிடைப்பதற்கு வழி வகுப்பது.
ஆக, இந்த இரண்டு நோக்கங்களும் ஓரளவேனும் நிறைவேறும் வகையில் புதிய கடன் கொள்கை அமைந்துள்ளது. எனினும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சற்று கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.
ரெப்போ ரேட்டைக் குறைத்திருந்தால், வட்டி விகிதம் மேலும் குறைந்து, வளர்ச்சிக்கு உத்வேகம் கிடைத்திருக்குமே என்று பலர் கருதுகிறார்கள். அப்படி நிகழாமல் போனதற்குக் காரணம் இதுதான். எதிர்பார்த்த அளவு பணவீக்கம் குறையவில்லை. இந்நிலையில் வட்டி விகிதம் குறைந்தால், பணப்புழக்கம் அதிகரித்துவிடும். அதன் விளைவாக, பணவீக்கமும் அதிகரித்துவிடும். விலைவாசி மேலும் அதிகரிக்கும். அப்படி நிகழாமல் தடுப்பதற்காகவே, வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.
இதில், ஒரு நல்ல செய்தி என்னவெனில், வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறையாமல், இப்போதுள்ள நிலையிலேயே நீடிக்கும். பணியிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கும், சேமிப்பாளர்களுக்கும், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கும் இது ஆறுதல் அளிக்கும். நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்கையில் ரிசர்வ் வங்கி நான்கு முக்கிய விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. ஒன்று, ஏற்கெனவே குறிப்பிட்டபடி பணவீக்கம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. மாறாக, அது வளர்முகத்தில் இருக்கிறது.
இரண்டாவது, நடப்பாண்டில் பருவமழை சாதகமாக இல்லை. சராசரி அளவுக்குக் குறைவாகவே மழை பொழிந்துள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக மழை பொழியவில்லை.
மூன்றாவது, நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு இடைவெளி அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.
நான்காவதாக, சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து, அந்நாடுகள் இன்னமும் மீட்சி அடையவில்லை. அதன் விளைவாக, அந்த நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி சரிந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையையும் இது பாதித்துள்ளது.
இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய கணிப்பில் இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
தற்போதுள்ள பணவீக்க நிலையில் ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அதை எடுத்துள்ளது. அண்மைக்காலமாக, காலாண்டுக்கு ஒருமுறை கடன் மற்றும் நிதிக் கொள்கையை அறிவிப்பதோடு நின்றுவிடாமல், 6 வாரங்களுக்கு ஒருமுறை தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து உரிய முடிவுகளை மேற்கொள்கிறது.
அடுத்து வரும் வாரங்களில் பணவீக்க விகிதம் குறையுமானால், வட்டி விகிதத்தைக் குறைப்பது பற்றி நிச்சயமாக மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இத்தருணத்தில் பணவீக்கம் குறிப்பாக உணவுப் பொருள்கள் சார்ந்த பணவீக்கம் குறைவதும், அதிகரிப்பதும் பருவமழையைப் பொருத்தே அமையும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. போதாக்குறைக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னமும் மீட்சி அடையவில்லை.
இதுவும் பணவீக்கத்துக்கு வழிவகுக்கக்கூடியதாகும். எனவேதான், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 2013 மார்ச் மாதம் 7 சதவிகிதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கில் விழுந்துள்ள துண்டு ஆகியவை உள்நாட்டு சேமிப்பிலிருந்து ஈடுகட்டக் கூடியதல்ல. அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகளின் வரத்தைப் பொறுத்தே நடப்புக் கணக்கில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சரிசெய்திட முடியும்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரச் சரிவு, உலக அளவில் முதலீட்டாளர்களிடையே உற்சாகமின்மையை அதிகரித்துள்ளது. இதனாலும், இந்தியாவுக்குள் வரவேண்டிய அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகளின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக் கொள்கையின் மூலம் தீர்வு காண்பது இயலாது. எந்த ஒரு நாட்டிலும் இது சாத்தியமல்ல என்பதை நாம் பார்க்கிறோம்.
எனவே, மத்திய அரசு தனது பங்கைச் செய்திட முன்வர வேண்டிய தருணம் வந்துவிட்டது. உதாரணமாக, கொள்கை முடிவுகள் மேற்கொள்வதில் விரைந்து செயல்படுதல், முட்டுக்கட்டைகளை அகற்றுதல், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல், முதலீடு மற்றும் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் போக்கி, உத்வேகம் அளிக்கும் வகையில் புத்துயிர் திட்டங்களை அறிவித்தல் ஆகியவற்றில் மத்திய அரசு, முன்னெப்போதும் இல்லாத அளவில், முனைப்பு காட்ட வேண்டும்.