Friday, August 17, 2012

கிரீடமா, முள் கிரீடமா?

இந்தியப் பொருளாதாரம் ஓர் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து கீழ்நோக்கிப் பயணிக்கும் காலம் இது. 1991-ம் ஆண்டு முதல் நமது பொருளாதாரம் சீர்திருத்தப் பாதையில் பயணித்து அதனால் எல்லோரும் பாராட்டும் வகையில் வளர்ந்து வந்தது; படிப்படியாகத் தொய்வு ஏற்பட்டு 2010-11-ம் ஆண்டுகளுக்கான கணக்கீட்டின்படி முந்தைய ஆண்டில் 8.4% ஆக இருந்த ஜி.டி.பி. எனப்படும் மொத்த உற்பத்தி மதிப்பு 6.5% ஆகக் குறைந்துள்ளது.
உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால்தான் இந்த வீழ்ச்சி எனவும் இந்த நிலைமையிலும்கூட 6.5% ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி என்பது தலைசிறந்த வளர்ச்சி எனவும் தற்போது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "முந்தைய நிதி அமைச்சர்' பிரணாப் முகர்ஜி கூறினார்.
ஆனால் முகர்ஜி கவனிக்க மறந்த ஒரு விஷயம் 2010-11-ம் ஆண்டில் 8.2 சதவிகிதமாக இருந்த தொழில்களின் வளர்ச்சி 2011--12-ம் ஆண்டில் 2.8 சதவிகிதமாகக் குறைந்ததையும், தொழிற்சாலைகளின் உற்பத்தியளவு 3.2 சதவிகிதம் இதே சமயத்தில் குறைந்ததையும்தான்.
இந்தியப் பொருளாதாரத்தின் மற்ற பல அம்சங்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. நமது ஏற்றுமதி சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 10 சதவிகிதம் குறைந்தது. இதே காலகட்டத்தில் நமது இறக்குமதி அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகமானால் வெளிவர்த்தகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்று பொருள். தற்சமயம் இந்தப் பற்றாக்குறை நமது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4 சதவிகிதம் என்பது, நமது பொருளாதாரம் 1989-92-ம் ஆண்டுகளில் இருந்த மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
சென்ற ஆண்டில் நமது ரூபாயின் மதிப்பு 27 சதவிகிதம் குறைந்துள்ளது. ஒரு நாட்டில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கும்போது அந்த நாடே முன்வந்து தனது நாணயத்தின் மதிப்பைக் குறைப்பது வழக்கம். காரணம், இதுபோல் குறைக்கப்பட்ட நாணய மதிப்பினால் வெளிநாட்டவர் அவர்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டுப் பொருள்களுக்குக் குறைந்தவிலை என்பதால் நிறைய இறக்குமதிப் பொருள்களை வாங்குவார்கள். இதனால் நாணய மதிப்பைக் குறைத்த நாட்டின் ஏற்றுமதி அதிகமாகும்.
உதாரணமாக, இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைய ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு துணி 100 டாலர்கள் என இருந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் அதேபோன்ற துணி 90 டாலர்கள் என இருந்தால் சீனாவின் துணியைத்தான் அதிகம் வாங்குவார்கள். இந்த நிலைமையில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 45 ரூபாய் என்று இருந்தது வீழ்ச்சியடைந்து 55 ரூபாய் என ஆகிவிட்டால் அதே இந்திய துணியின் விலை 81 டாலர்கள் ஆகிவிடும். 90 டாலர் சீனாவின் துணியைவிட 81 டாலர் இந்தியத் துணி குறைந்த விலை என்பதால் அதை அதிகம் விரும்பி வாங்கி அதனால் நமது ஜவுளி ஏற்றுமதி அதிகமாகும். இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும்.
மத்திய ரிசர்வ் வங்கியே முன்வந்து நமது ரூபாயின் மதிப்பைக் குறைக்காமல், வேறு பல காரணங்களுக்காக ரூபாயின் விலை அதுவாகவே குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனாக நமது ஏற்றுமதி அதிகரிக்காமல் போனது அடிப்படை பொருளாதார விதிமுறைகளில் எங்கேயோ இடிக்கிறது. இதை நுணுக்கமாக ஆராய்ந்தால் நமது நாட்டில் ஏற்றுமதியாகும் பொருள்களின் உற்பத்தி குறைந்ததுதான் காரணம் என்பது விளங்கும்.
இதுபோன்ற பொருளாதாரப் பிரச்னைகளைச் சரிசெய்யும் திறமை நமது புதிய நிதியமைச்சருக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம் மூலப்பொருள்களின் உற்பத்தி குறைந்து, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்கிறார் நமது பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன். இவற்றைச் சரிசெய்ய தொழில்துறையில் புதிய முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
புதிய முதலீடுகள் ஏற்பட நமது வங்கிகள் மூலதனத்திற்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். ஆனால் ரங்கராஜன் அக்கருத்தை ஏற்கவில்லை. ""ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் பணவீக்கம் குறைந்ததாகவே இருந்தது. ஆனால், இந்தியாவில் வளர்ச்சி குறைந்து பணவீக்கம் அதிகமாயிருக்கும் காரணத்தால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது. ஏனென்றால், வட்டி விகிதம் குறைந்தால் பணவீக்கம் மேலும் அதிகமாகும்'' என பதிலளித்துள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் இவ்வாறு கூறும்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னரும் இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார். ""நமது நாட்டில் 9 சதவிகிதம் பணவீக்கம் உருவாகியிருப்பதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என்பது அவரது வாதம்.
ஆனால், இந்த இரண்டு பொருளாதார மேதைகளும் மறந்த விஷயம் பணவீக்கம் இரண்டு வகைப்படும் எனும் அடிப்படைப் பொருளாதாரத் தத்துவத்தைத்தான். அதாவது பொருள்களின் தேவை அதிகரித்தாலும், பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்தாலும் பணவீக்கம் உருவாகும்.
முதல் வகையான பணவீக்கத்தின்படி தேவை அதிகரித்து பொருள்களின் விலை அதிகமானால், உற்பத்தி பெருகி பொருளாதாரம் முன்னேறும். எனவேதான் வளர்ந்துவரும் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்குப் பணவீக்கம் நல்லது எனக் கூறப்படும். இரண்டாவது வகையான பணவீக்கம் உற்பத்தியாகும் பொருள்களின் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பதால் ஏற்படுவது. இது ஏற்பட்டால் பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டு தொழில்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படும்.
ரூபாய் மதிப்பு குறைந்ததால் நாம் இறக்குமதி செய்யும் பல இடுபொருள்களின் விலை ஏறி உற்பத்தி பாதித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்றம் இதற்கு அடிப்படையான காரணம் எனலாம். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாத ரிசர்வ் வங்கி தொழிற் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காதது ஒரு பெரிய குறை.
இந்தியப் பொருளாதாரத்தை 1947-லிருந்து கூர்ந்து கவனிக்கும் பலருக்கும் ஆரம்ப காலங்களில் நமது நாட்டில் பண்டித ஜவாஹர்லால் நேருவால் பின்பற்றப்பட்ட சோஷலிசம் சார்ந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பணவீக்கம் நினைவுக்கு வரலாம். அது பொருள்களுக்கான தேவை, மக்களுக்குக் கிடைப்பதைவிட அதிகமாக இருந்தது என்பதால் ஏற்பட்டது. அதாவது ஒரு பொருளுக்கு மக்களிடையே தேவை இருந்தது, ஆனால் சந்தை வரவு (சப்ளை) குறைவாக இருந்தது.
ஆனால், 1991-ல் நாம் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் சீர்திருத்தத்தைப் பின்பற்ற ஆரம்பித்த பின் ஏற்பட்ட பணவீக்கம் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால் உருவானது.
உதாரணமாக, 2006-ல் ஏற்பட்ட வறட்சியால் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி பாதித்ததனால் பணவீக்கம் உருவானது. இப்பொழுது நாடெங்கிலும் பல மாநிலங்களில் போதிய அளவு மழை இல்லாததால் வறட்சி நிச்சயம் என்பது தெரிய வருகிறது. இதனால் பணவீக்கம் உயரலாம். விலைவாசி ஏறலாம்.
2008-09-ம் ஆண்டு வங்கிகளின் வட்டிவிகிதம் குறைக்கப்பட்டதால் அன்று பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் சீராகி வளர்ச்சிப் பாதையில் சென்றது. அன்று இதைச் செய்த ரிசர்வ் வங்கி, இன்று அதை மறந்தது ஏன் எனத் தெரியவில்லை.
அடுத்து, அரசு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் நிதிநிலையில் வரவைவிட அதிகமாக இருக்கும் செலவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. இதில் மத்திய அரசு மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.
மாநில அரசுகள் தெரிந்தே ஓட்டு வங்கி அரசியலுக்காக அதிக செலவுகளை இலவசங்களுக்குச் செலவிடுவது பழைய காலங்களில் நடந்தது. ஆனால் இப்போது மத்திய அரசும் ஓட்டு வங்கி அரசியலைக் கருத்தில்கொண்டு இலவசங்களை அள்ளித் தெளிக்கிறது.
இதனால் இந்த ஆண்டு பற்றாக்குறை நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 8 சதவிகிதமாகியுள்ளது. இது 4 சதவிகிதத்திற்கு மேல் செல்லக்கூடாது என்பதற்காக ""நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்பான வரவு - செலவு கட்டுப்பாடு சட்டம்'' என்ற ஒரு சட்டத்தை இயற்றியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

மேலே கூறிய எல்லா பிரச்னைகளையும் நன்கு உணர்ந்தவர்தான் நமது பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன் சிங். நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ப. சிதம்பரமும் இத்துறையில் அனுபவப்பட்டவர்தான்; அவர்கள் இப்பிரச்னைகளை எதிர்கொண்டு பொருளாதாரத்தை எப்படிச் சீரமைக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருப்பதில் வியப்பில்லை.
இன்றைய பொருளாதாரப் பிரச்னைகளுக்கு விலைவாசி உயர்வு, நாணய மதிப்புக் குறைவு, குறைந்து வரும் ஏற்றுமதி, பாதிக்கப்பட்டிருக்கும் உற்பத்தி போன்ற பிரச்னைகளுக்கு நிதியமைச்சர் தீர்வுகாணும் விதத்தில்தான் அரசின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படும். ப.சிதம்பரத்திற்குச் சூட்டப்பட்டிருப்பது கிரீடமா இல்லை முள் கிரீடமா என்பது அவர் நிலைமையை எதிர்கொள்வதன் மூலம்தான் முடிவு செய்யப்படும்.

சீனக் கடலில் தீவுச் சண்டை


கிழக்கு, தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்குப் பல்வேறு நாடுகள் உரிமை கொண்டாடி வருவதால் சமீபகாலமாக அக்கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது.
கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பானுடன் சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் ஏற்பட்டுள்ள தீவுச் சண்டைதான் பதற்றத்துக்குக் காரணம். தூதர்களைத் திரும்ப அழைப்பது, அதிபர்களின் வார்த்தைப் போர், போர்க் கப்பல்களை முன்னெடுத்துச் செல்வது, ராணுவத்தைத் தயார்படுத்துவது என்று கிழக்கு சீனக் கடல் பகுதியில் நாளுக்குநாள் பிரச்னை பெரிதாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
கிழக்கு சீனக் கடல்பகுதி, சிறு சிறு தீவுகள் நிறைந்த இடம். அங்குள்ள தீவுகளுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் தங்களுக்கென்று உரிமை கொண்டாடி வருவது பல ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து வருகிறது.
இத்தீவுகளில் உள்ள தாது வளம், கடல் பகுதியில் காணப்படும் அபரிமிதமான மீன் வளம் உள்ளிட்டவையும், கிழக்கு சீனக் கடல்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமுமே இந்தப் போட்டிகளுக்குக் காரணம்.
அதே நேரத்தில் தென் சீனக் கடல்பகுதியிலும் இதேபோன்ற பிரச்னைகள் உள்ளன. சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதி இக்கடல் பகுதி வழியாகத்தான் நடைபெற்று வருகிறது என்பதும், இக்கடல் பகுதியில் புதைத்து கிடக்கும் அபரிமிதமான எண்ணெய் வளமுமே இப்பகுதியில் ஆதிக்கப் போட்டிக்கு முக்கியக் காரணம்.
சீனா, தைவான், பிலிப்பின்ஸ், வியத்நாம் போன்ற நாடுகளும் இப்பகுதியில் தீவுச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
கிழக்கு சீனக் கடல் பகுதியில் தியாவு தீவுக் கூட்டம் யாருக்குச் சொந்தம் என்ற போட்டியால் சமீபகாலமாக ஜப்பான் - சீனா இடையிலான உறவு சீர்குலைந்து மோதல்போக்கு அதிகரித்துள்ளது. சீனாவுக்கான ஜப்பான் தூதர் யுச்சிரோ, தீவுகள் பிரச்னையில் தங்கள் நாட்டு அரசின் கொள்கைக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனாவுக்கான தனது தூதரை ஜப்பான் திரும்ப அழைத்துக் கொண்டது.
தீவுக் கூட்டத்தின் மீதான தங்கள் உரிமையை நிலைநாட்ட அப்பகுதியில் உள்ள 3 முக்கியத் தீவுகளை விலை கொடுத்து வாங்கி, ராணுவத்தை நிறுத்த முடிவு செய்தது ஜப்பான். இதையடுத்து உடனடியாக தனது சண்டித்தனத்தைக் காட்டியது சீனா. தனது இரு போர்க்கப்பலை பிரச்னைக்குரிய பகுதியில் நிறுத்தி வைத்து பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இதற்கு பதிலடியாக, "அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று ஜப்பான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
தென் சீனக் கடலில் சீனாவுக்குப் போட்டியாக இருக்கும் நாடுகளான பிலிப்பின்ஸ், வியத்நாம், தைவான் போன்றவை சற்று பலவீனமானவை என்பதால் அங்கு தங்கள் ஆதிக்கத்தை எளிதில் நிலைநாட்டி விடலாம் என்ற நோக்கில் சீனா செயலில் இறங்கியுள்ளது. தென் சீனக் கடல் பகுதியின் பெரும்பகுதி தங்களுக்கே உரியவை என்று வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் இந்தியாவுக்கு இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, வியத்நாம் அருகே தென் சீனக் கடல் பகுதியில் அந்நாட்டு ஒத்துழைப்புடன் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென இந்தியாவுக்கு சீனா நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், சீனாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் மேலும் பல துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வியத்நாமுடன் இந்தியா ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது.
தொடக்கத்தில் இருந்தே இந்தியாவை வேண்டாத நாடாகக் கருதும் சீனாவால், தாங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்பும் தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா நிலைகொண்டுள்ளதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரச்னை உச்சத்தை எட்டி சர்வதேச தலையீடுகள் ஏற்படும்போது வியத்நாமுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்தியா எடுக்கும் என்பதுவே இதற்குக் காரணம்.
அதே நேரத்தில் கிழக்கு சீனக் கடல் பகுதியில் நிலைமை முற்றிலும் வேறு. விடாக்கொண்டனாக ஜப்பானும், கொடாக்கண்டனாக சீனாவும் மோதலில் இறங்கியுள்ளன. இதனால் கிழக்கு சீனக் கடல் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தென் கொரியாவும் சில தீவுகளுக்கு உரிமை கொண்டாடி போட்டியில் இறங்கியுள்ளது.
ஜப்பானால் தகிஷிமா என்றும், தென் கொரியாவால் டோக்டோ என்றும் உரிமை கொண்டாடப்படும் பிரச்னைக்குரிய தீவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டார் தென் கொரிய அதிபர் லீ மயூங்-பாக். இதனால் கடும் அதிருப்தியடைந்த ஜப்பான், தென்கொரியாவுக்கான தனது தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துக் கொண்டது.
ஒலிம்பிக் போட்டியிலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜப்பானை தென் கொரியா வீழ்த்தியது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, இத்தீவு பிரச்னையில் ஜப்பானைக் கண்டிக்கும் வாசக அட்டையுடன் மைதானத்துக்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் தென்கொரிய வீரர் பார்க் ஜோங்வூ.
அடுத்த சில நாள்களிலேயே தென்கொரியாவைச் சேர்ந்த 40 பேர் அடங்கிய குழு பிரச்னைக்குரிய தீவுக்கு தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் நீந்திச் சென்று தீவு தங்களுக்குத்தான் என்று உரிமை கொண்டாடியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது ஜப்பான்.
இந்தப் பிரச்னை குறித்து பேசித் தீர்வுகாண வாய்ப்பே இல்லை என்று ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகியவை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டன. எனவே நிலைமை மேலும் மோசமானால் சீனக் கடல் பகுதியில் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

Wednesday, August 8, 2012

கயிற்றின் மேல் நடக்கும் ரிசர்வ் வங்கி!

            பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் ஜூலை 31-ம் தேதி வெளியிட்ட நிதி, கடன் கொள்கை பரபரப்பானதாக இல்லாவிட்டாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
ரிசர்வ் வங்கி கவர்னர் "ரெப்போ ரேட்'டையோ (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகாலக் கடனுக்கான வட்டி விகிதம்) அல்லது சி.ஆர்.ஆர். (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு) விகிதத்தையோ மாற்றவில்லை.
ஆனால், எவரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்திருக்கிறார் கவர்னர். எஸ்.எல்.ஆர். (வங்கிகள் திரட்டுகிற டெபாசிட் தொகையில் கட்டாயமாக அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டிய தொகை) ஒரு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர். ஆகியவற்றை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றுவதுண்டு. ஆனால் எஸ்.எல்.ஆரை, அத்திப்பூ பூத்தாற்போல், எப்போதாவது ஒருமுறைதான் மாற்றும்.
ஆக, "ரெப்போ ரேட்' 8 சதவிகிதமாகத் தொடரும். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு தொகை 4.75 சதவிகிதம் என்கிற அளவிலேயே நீடிக்கும். டெபாசிட் தொகையில் ஒரு பகுதியை வங்கிகள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டிய அளவு, 24 சதவிகிதத்திலிருந்து 23 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நடவடிக்கைகளின் விளைவு: வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையாது. இதனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கடன்களுக்கான வட்டியும் குறையாது.
அதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய கையிருப்புத் தொகை (சி.ஆர்.ஆர்) 4.75 சதவிகிதமாகவே தொடருவதால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதற்காக உள்ள நிதி ஆதாரத்தில் மாற்றம் இருக்காது.
இந்த நடவடிக்கைக்கான பின்னணி என்னவெனில், இப்போதுள்ள பணவீக்கச் சூழலில் வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம், குறிப்பிடும்படியான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
அதேநேரம், வட்டி குறைந்தால், மேலும் பணவீக்கம் அதிகரிக்கவே செய்யும். எனவே, நீண்டகால அளவில், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மேற்கூறிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், அரசுப் பத்திரங்களில் வங்கிகள் முதலீடு செய்ய வேண்டிய அளவு ஓசைப்படாமல் 24 சதவிகிதத்திலிருந்து 23 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சதவிகித குறைப்பின் பயனாக, வங்கிகளின் ஒட்டுமொத்த நிதி ஆதாரம், அதாவது கையிருப்பு, ரூ. 60,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும்.
இதன் பயனாக, பொதுமக்களுக்கு இரண்டு நன்மைகள் ஏற்படும். ஒன்று, வங்கிகளின் கையிருப்பு அதிகரிப்பதால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன், சிறுதொழில் கடன், விவசாயக் கடன் ஆகிய அனைத்து வகை கடன்களையும் தங்கு தடையில்லாமல் கொடுப்பதற்கு வங்கிகள் முன்வரும்.
இரண்டாவதாக, வங்கிகள் அரசுப் பத்திரங்களில் ரூ. 60,000 கோடியை முதலீடு செய்திருந்தால் அவர்களுக்கு சராசரியாக 7.5 சதவிகித வட்டிதான் கிடைத்திருக்கும். அந்தப் பணத்தை இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கடனாகக் கொடுப்பதால், வழக்கத்தைவிட சற்று குறைவான வட்டி வசூலிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இதை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஏற்கெனவே கோடிட்டுக் காட்டியுள்ளார். இதே கருத்தை இந்திய வங்கிகள் சங்கத் தலைவரும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை, வங்கிக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மறைமுகமாக உதவியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உண்டு. ஒன்று பணவீக்கத்தையும் விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருப்பது. இரண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன்கள் கிடைப்பதற்கு வழி வகுப்பது.
ஆக, இந்த இரண்டு நோக்கங்களும் ஓரளவேனும் நிறைவேறும் வகையில் புதிய கடன் கொள்கை அமைந்துள்ளது. எனினும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சற்று கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.
ரெப்போ ரேட்டைக் குறைத்திருந்தால், வட்டி விகிதம் மேலும் குறைந்து, வளர்ச்சிக்கு உத்வேகம் கிடைத்திருக்குமே என்று பலர் கருதுகிறார்கள். அப்படி நிகழாமல் போனதற்குக் காரணம் இதுதான். எதிர்பார்த்த அளவு பணவீக்கம் குறையவில்லை. இந்நிலையில் வட்டி விகிதம் குறைந்தால், பணப்புழக்கம் அதிகரித்துவிடும். அதன் விளைவாக, பணவீக்கமும் அதிகரித்துவிடும். விலைவாசி மேலும் அதிகரிக்கும். அப்படி நிகழாமல் தடுப்பதற்காகவே, வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.
இதில், ஒரு நல்ல செய்தி என்னவெனில், வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறையாமல், இப்போதுள்ள நிலையிலேயே நீடிக்கும். பணியிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கும், சேமிப்பாளர்களுக்கும், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கும் இது ஆறுதல் அளிக்கும். நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்கையில் ரிசர்வ் வங்கி நான்கு முக்கிய விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. ஒன்று, ஏற்கெனவே குறிப்பிட்டபடி பணவீக்கம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. மாறாக, அது வளர்முகத்தில் இருக்கிறது.
இரண்டாவது, நடப்பாண்டில் பருவமழை சாதகமாக இல்லை. சராசரி அளவுக்குக் குறைவாகவே மழை பொழிந்துள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக மழை பொழியவில்லை.
மூன்றாவது, நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு இடைவெளி அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.
நான்காவதாக, சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து, அந்நாடுகள் இன்னமும் மீட்சி அடையவில்லை. அதன் விளைவாக, அந்த நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி சரிந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையையும் இது பாதித்துள்ளது.
இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய கணிப்பில் இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
தற்போதுள்ள பணவீக்க நிலையில் ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அதை எடுத்துள்ளது. அண்மைக்காலமாக, காலாண்டுக்கு ஒருமுறை கடன் மற்றும் நிதிக் கொள்கையை அறிவிப்பதோடு நின்றுவிடாமல், 6 வாரங்களுக்கு ஒருமுறை தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து உரிய முடிவுகளை மேற்கொள்கிறது.
அடுத்து வரும் வாரங்களில் பணவீக்க விகிதம் குறையுமானால், வட்டி விகிதத்தைக் குறைப்பது பற்றி நிச்சயமாக மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இத்தருணத்தில் பணவீக்கம் குறிப்பாக உணவுப் பொருள்கள் சார்ந்த பணவீக்கம் குறைவதும், அதிகரிப்பதும் பருவமழையைப் பொருத்தே அமையும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. போதாக்குறைக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னமும் மீட்சி அடையவில்லை.
இதுவும் பணவீக்கத்துக்கு வழிவகுக்கக்கூடியதாகும். எனவேதான், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 2013 மார்ச் மாதம் 7 சதவிகிதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கில் விழுந்துள்ள துண்டு ஆகியவை உள்நாட்டு சேமிப்பிலிருந்து ஈடுகட்டக் கூடியதல்ல. அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகளின் வரத்தைப் பொறுத்தே நடப்புக் கணக்கில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சரிசெய்திட முடியும்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரச் சரிவு, உலக அளவில் முதலீட்டாளர்களிடையே உற்சாகமின்மையை அதிகரித்துள்ளது. இதனாலும், இந்தியாவுக்குள் வரவேண்டிய அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகளின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக் கொள்கையின் மூலம் தீர்வு காண்பது இயலாது. எந்த ஒரு நாட்டிலும் இது சாத்தியமல்ல என்பதை நாம் பார்க்கிறோம்.
எனவே, மத்திய அரசு தனது பங்கைச் செய்திட முன்வர வேண்டிய தருணம் வந்துவிட்டது. உதாரணமாக, கொள்கை முடிவுகள் மேற்கொள்வதில் விரைந்து செயல்படுதல், முட்டுக்கட்டைகளை அகற்றுதல், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல், முதலீடு மற்றும் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் போக்கி, உத்வேகம் அளிக்கும் வகையில் புத்துயிர் திட்டங்களை அறிவித்தல் ஆகியவற்றில் மத்திய அரசு, முன்னெப்போதும் இல்லாத அளவில், முனைப்பு காட்ட வேண்டும்.