Monday, October 29, 2012

நீர்-இனி போர்: எதிரியாக மாறுமா எதிர்காலம்

பணத்தை தண்ணியா செலவழிக்கிறான்' என பழமொழி சொல்லப்போய், "தண்ணியை பணத்தைப் போல செலவழிக்கிறான்' என சொல்லும் காலம் நெருங்கி வருகிறது.

மண்ணுக்காக நாடுகள் முட்டிக்கொண்டதால் தான் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. எதிர்காலத்தில் இன்னொரு உலகப் போர் நடந்தால், அது நீருக்காக மட்டுமே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.இதற்கு காரணம், மாறி வரும் சுற்றுச்சூழ்நிலைகளால், நீர் என்பதே அரிதாகி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. செயற்கையாக நீரை தயாரிக்கலாம் என்றால், அது எளிதில் சாத்தியமாகாது. எனவே, இயற்கையாக கிடைக்கும் நீரை கைப்பற்ற, உலக நாடுகள் போட்டி போடும். தண்ணீர் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்பதால், உலக நாடுகள், உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.

பருவநிலை மாற்றம்:

பருவநிலை மாற்றத்தால், அதிக மழை அல்லது அதிக வெப்பம் என்ற நிலைமை ஏற்படுகிறது. சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் மக்கள் தொகை பெருக்கம், காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம் ஆகியவை. தேவையை உணர்ந்து செயல்படாவிட்டால், 2015லேயே தண்ணீர் தேவை அதிகரித்து, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை உயரும்.
பூமி, 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29 சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த தண்ணீரில் உப்பு நீரே அதிகம். 2.5 சதவீதம் நீர் மட்டுமே நல்லநீர். உலகில், 0.08 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50 நாடுகளை 1999ல் ஐ.நா., அறிவித்தது. தற்போது விவசாயத்திற்காக 70 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது. இது 2020ல் 87 சதவீதம் ஆகும் என, உலக தண்ணீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஐந்து வயது பூர்த்தியடையாத, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி, தொற்று நோய்களால் இறக்கின்றனர். சுத்தமான குடிநீர், நல்ல சுகாதாரம், சரிவிகித உணவு போன்றவற்றின் மூலமே இதை சரி செய்ய முடியும்.

என்ன தீர்வு:

அனைத்து ஆதாரங்களுக்கும், அடிப்படையான தண்ணீரை பாதுகாப்பது நமது கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு போன்ற வற்றை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம்.

"மடி'யில் கை வைத்த கதை:

பற்றாகுறை ஏற்பட்டதும், "மடி'யில் கை வைத்த கதையாக, நிலத்தடியில் கை வைத்தோம். அந்த நீரையும் எக்கச்சக்கமாக உறிஞ்சிகிறோம். இது இன்னொரு ஆபத்து. இதனால், அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிணறுகள் வற்றி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது.

நீரின் தேவை:

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத் தான் மற்ற உபயோகங்களுக்கு தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல், 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை, மொத்த நீரில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால், நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில், உலகம் அழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.
மாசுபடுத்தும் காரணங்கள்:நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள் தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள், ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கை தன்மையே மாறுகிறது. வீட்டு கழிப்பறை, சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் நிலத்தடி நீர் குடிநீராகவும்,60 சதவீத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.

செயற்கை நீர் சாத்தியமா:

செயற்கையாக நீரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்களை கேட்டால், முடியாது என்றே பதில் அளிக்கின்றனர். இருப்பினும், ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக்கூடியவை தான். ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடிவதில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்ஸிஜன், இரட்டை அணுவாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித்தெடுத்தால், இரண்டும் நிலையான எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். ஒரே அளவு எலக்ட்ரான்கள் கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்).செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குகிறோம்.

Source: DINAMALAR

நியூட்ரினோ ஆய்வகம்:


"நியூட்ரினோ' துகள் குறித்த ஆராய்ச்சி, இந்திய இயற்பியல் துறையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 1,320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் நிதி உதவியுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 2027 மீ., ஆழத்தில் பாதாள சுரங்கம் அமைத்து, உலகின் மிகப்பெரிய மின்காந்தம் (50 டன்) அமைக்கப்படவுள்ளது. நியூட்ரினோ "டிடக்டராக' இந்த மின்காந்தம் செயல்படும்.உலகின் பல பகுதிகளில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. சூரியனின் உள் வட்டம் குறித்த விபரங்கள் அறிய நியூட்ரினோ ஆராய்ச்சி முடிவுகள் அவசியம். இதற்காக அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வத்தில் நூற்றுக்கணக்கான இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நியூட்ரினோ என்றால் என்ன?:

"நியூட்ரினோ' எளிதில் அடையாளம் காண முடியாத, அணுவை விட சிறிய துகள். பெருவெடிப்பு ஏற்பட்டு, பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உற்பத்தி துவங்கியது. பால்வெளியில் நட்சத்திர கூட்டங்கள் மோதும் போதும், நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் போதும், நியூட்ரினோ உருவாகிறது. சூரியனில் எரிசக்தி உருவாக்கத்தின் போதும், நியூட்ரினோ வெளிப்படுகிறது (சோலார் நியூட்ரினோ). ஒளியை விட கூடுதல் வேகத்தில் பயணிக்கும், நியூட்ரினோ துகள்கள் பால்வெளியிலிருந்து பூமி பரப்பை எட்டும் வரை, எந்த சிதைவும் இல்லாமல் வந்தடைகிறது. உதாரணமாக சனி கிரகத்தில், எப்போதும் ஏற்பட்டு கொண்டிருக் கும் மின்காந்த புயலில் கூட, நியூட்ரினோ துகள் பாதிப்படைவதில்லை. நியூட்ரினோக்கள் எலக்ட்ரானை போன்ற பண்புடை யது. எடையற்ற, மின் அதிர்வை ஏற்படுத்தாத நியூட்ரினோ துகள்கள், மனிதனின் உடலில், ஒரு நொடிக்கு 50டிரில்லியன் என்ற எண்ணிக்கையில் ஊடுருவுகின்றன. பூமி உருவான அடிப்படை மூலக்கூறுகளில் நியூட்ரினோவும் அடங்கியுள்ளது.

ஆராய்ச்சி எதற்காக:

நியூட்ரினோ ஆய்வு என்பது அணு துகள்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிவதற்கான அடிப்படை ஆராய்ச்சி. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும், என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே, உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பங்கேற்பவர்கள்:

ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., கவுகாத்தி, அலிகார் யுனிவர்சிட்டி, தி இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெடிக்கல் சயின்ஸ், சென்னை, இந்திராகாந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச், கல்பாக்கம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், டெல்லி யுனிவர்சிட்டி, ஜம்மு, காஷ்மீர் யுனிவர்சிட்டி உட்பட 24 நிறுவனங்கள், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க உள்ளன. 100 இந்திய இயற்பியல் வல்லுநர்கள், மற்றும் ஹவாய் யுனிவர்சிட்டி ஆகியோர் இணைந்து ஆராய்ச்சியில் ஈடு பட உள்ளனர். செலவு முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

அம்பரப்பர் மலை தேர்வு ஏன்:

தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையை குடைந்து, பாதாள அறையில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ துகள்களுடன் இணைந்து பயணிக்கும் "காஸ்மிக்' கதிர்களை வடிகட்ட, கடினமான ஒற்றை கல்லால் ஆன பாறை தேவை. 2027மீ., கடினமான, அடுக்குகளற்ற, ஒற்றை பாறையாக அம்பரப்பர் மலை உள்ளது.
மலையின் அடியில் ஆய்வகம் அமையும் போது, இடையூறு இல்லாமல் நியூட்ரினோ துகள்கள் "டிடக்டரை' வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த மலையை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலா?:

பாதாள சுரங்கத்தில், 50 டன் எடையுள்ள மின்காந்தம் பொருத்தப்படவுள்ளது. சுரங்கம் தோண்ட, பாறையை வெடி வைத்து உடைக்கும் போதோ, வேறு தொழில் நுட்பத்தில் பாறையை உடைக்கும் போதோ ஏற்படும் அதிர்வாலும், பாறை தூசிகளாலும் அருகிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சுற்றுப்புற கிராம மக்களிடம் உள்ளது. இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உண்டு. நவீன தொழில்நுட்பத்தில் பாறையை குடைந்து பாதாள சுரங்கம் அமைக்கப்படும் என்று, டாடா கன்சல்டன்சி ஆப் பண்டமென்டல் ரிசர்ச் விஞ்ஞானி கே.மண்டல், பொட்டிபுரம் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முறையில் தூசி வெளியில் பறக்காத வண்ணம் வலைகள் சுற்றி கட்டப்படும். வெட்டி எடுக்கப்படும் பாறைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் என்றார்.

மக்களின் தேவை என்ன?:

ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரம் ஊராட்சி முழுவதும், விவசாயம் சார்ந்த பகுதி. இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்டது. ஆய்வக கட்டுமானப்பணிகளுக்கு, நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தப்படும் போது, இங்குள்ள இறவை பாசன கிணறுகளில் நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, இங்குள்ள வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பல்லிளிச்சான்பாறை கீழ் பகுதியில், சிறு அணை கட்டி மழை நீரை தேக்க வேண்டும். பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை, புதூர், பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பனாசாரிப்பட்டி கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிதியை பயன்படுத்தி, தடையில்லா கூட்டு குடிநீர் திட்டம், கழிவு நீரோடை வசதிகளை செய்ய வேண்டும். அவசர சிகிச்சைக்கு உத்திரவாதம் அளிக்க குப்பனாசாரிபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறு தொழில், கால்நடை வளர்ப்பு,விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆய்வகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு,தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ஆய்வகம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:ஆராய்ச்சி நோக்கத்திற்காக நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர், இப்போதே, ஆய்வக கட்டுமானம் துவங்கும் முன்பே வந்து பார்த்து செல்கின்றனர். கல்வி, சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர்கள் வருகையால், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும்.

கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது. தென்மாவட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். போக்குவரத்து வசதிகள் மேம்படும். உதாரணமாக மதுரை-எர்ணாகுளம் ரயில் பாதை நியூட்ரினோ ஆய்வகம் வழியாக செல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை, தென்னக ரயில்வே கட்டுமான துறையினர் மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில், இதற்கான ஆதரவு தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.

Source: DINAMALAR

Wednesday, October 3, 2012

இணையதளத்தின் இன்னொரு தளம்

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிப்பதைப் போலவே, இணையதள மோசடிகள் (சைபர் கிரைம்) எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்கின்றன. விதவிதமான அறிவுநுட்பத்துடன் இந்தக் குற்றங்கள் நடைபெறுகின்றன.

கடந்த 12 மாதங்களில் இணையதளம் பயன்படுத்தும் இளைஞர்களில் 56% பேர் ஏதோ ஒருவகையில் இணையதள மோசடிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது நார்டன் சைபர்கிரைம் அறிக்கை. சுமார் ரூ.800 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை. உலக அளவில் 11,000 கோடி ரூபாய் ஏமாற்றுவேலை நடந்திருக்கிறது என்கிறார்கள்.

உலக அளவில் இணையதளத்தைப் பயன்படுத்தும் முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவில் 51.3 கோடி பேர் இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அடுத்து அமெரிக்காவில் 24.5 கோடி பேர். மூன்றாவதாக, இந்தியாவில் 12.1 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். எண்ணிக்கையில் அதிகரித்தாலும், பயன்படுத்துவோரின் எச்சரிக்கை உணர்வு அதிகரித்துள்ளதா என்றால், இல்லை என்றே சொல்லிவிடலாம்.

தேவையில்லாத மின்னஞ்சலுக்குப் பதில் அளிப்பதன் மூலம் அல்லது இணைய தளத்தின் வழியாக, அறிமுகம் இல்லாத நிறுவனங்களில் பொருள்கள் வாங்கும்போது தேவையில்லாத தகவல்களை, விவரங்களைத் தாராளமாகத் தெரிவிப்பதன் மூலமும் தங்கள் ரகசியக் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொள்வதாலும் பல இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் எதைப் பகிர்ந்துகொள்வது என்ற கட்டுப்பாடே இல்லாத நிலை உள்ளது.

தற்போது ஆன்ட்ராய்டு செல்போன் மிகக் குறைவான விலையில் கிடைக்கத் தொடங்கிவிட்டதால், இணையதளத்தில் பெறக்கூடிய அனைத்துச் சேவைகளையும் செல்போனிலேயே செய்துவிட முடியும். அதிக அளவில் திருடுபோகும் பொருள் செல்போன் என்பதாலும், இணையவழி மோசடியில் ஈடுபடுவோர் இத்தகைய செல்போன் பயன்பாட்டைக் குறிவைத்து தங்கள் மோசடி வலைகளை விரிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 13.12 கோடி பேர் "இணையதள செல்போன்' பயன்படுத்துகின்றனர்.

ரூ.4,000 முதல் ரூ.40,000 வரை ஆன்ட்ராய்டு செல்போன்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. ஆகவே, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செல்போன் மூலம் இணையதள சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை இருக்கிறது.

அனைத்து வங்கிகளுமே செல்போன்மூலம் பணப் பரிமாற்றுப் பணிகளை நிகழ்த்திட ஊக்கப்படுத்துகின்றன. இதற்காக தனிக்கட்டணம் இல்லை. வெறும் குறுந்தகவல் அனுப்பும் அதே செலவுதான். ஆகவே ரூ.50,000 வரை பணப் பரிமாற்றத்தை செல்போன் மூலம் (மொபைல் பேங்கிங்) நிகழ்த்தலாம் என்று அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால், பயன்பாடு அதிகரித்த அளவுக்கு, அதன் மூலம் வரக்கூடிய ஆபத்து குறித்த எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கவில்லை. குறிப்பாக இளைஞர்கள் இதை விளையாட்டுப் பொருள்போலவே பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்ல, உடல்பாதிப்பு குறித்தும் இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. செப்டம்பர் மாதம் முதலாக, செல்போனில் ஏற்படும் கதிர்வீச்சு அளவு எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. உடலில் ஒரு கிலோ தசையின் திசுக்களில் அதிகபட்சம் 1.6 வாட் அளவுக்குத்தான் கதிர்வீச்சு இருக்க வேண்டும் என்று நிபந்தனையை விதித்துள்ளது. செப்டம்பருக்கு முன்பு வரை வாங்கப்பட்ட செல்போன்களில் கதிர்வீச்சு அளவு என்ன என்பதும், இப்போது உள்ள அளவு குறித்தும்கூட இளைஞர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.

இணையதள மோசடிகள் ஒருபுறம் இருக்க, சாதாரண ஏடிஎம் இழப்புகள் இன்னொரு பக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஏடிஎம் மையங்கள் மூலம் பணஇழப்பு நேரிட்டதாக வரும் புகார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது. 2008-ம் ஆண்டு 153 பேர் புகார் தந்தார்கள். இவர்கள் இழந்த தொகை ரூ.246 லட்சம். 2011-ம் ஆண்டில் 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இழந்த தொகை ரூ. 706 கோடி!

இதற்குக் காரணம் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தும் முறைகளில் உள்ள கவனக்குறைவுதான் என்கின்றன ஆய்வுகள். அட்டை காணாமல் போனால் உடனடியாக அதை முடக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அல்லது அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதது, மோசடி செய்வோருக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

பணம் எடுப்பதற்கான "கடவு எண்' தனக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதைக் கண்டுபிடிக்க மோசடி செய்வோருக்கு சில நிமிடங்களே போதுமானது. பணஇயந்திரத்தில் ஏடிஎம் அட்டையின் கடவு எண்களை எந்தத் தொழில்நுட்பம் உணர்ந்து கட்டளையை ஏற்கிறதோ அதே தொழில்நுட்பத்தை மோசடிக்காரர்கள் கையாளுகிறார்கள். ஏடிஎம் அட்டைகள் கைக்குக் கிடைத்தவுடன், இதற்கான பிரத்யேக கருவியில் அட்டையைப் பொருத்தி கடவு எண்களைக் கண்டுபிடித்து, உடனடியாகப் பணத்தை அட்டையால் உறிஞ்சிவிடுவார்கள். அவ்வளவு வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இணையதளத்தின் மூலம் மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்கும் படலங்களும், அதன் மூலம் நடைபெற்ற திருமணங்களும், அதன் பிறகான ஏமாற்றங்களும் மோசடிகளும்... சொல்லி மாளாத கதைகள் தொடருகின்றன.

ஒரு இணையதளம், ஆனால் பல தளங்களில் பிரச்னைகள்!

Source: Dinamani

திட்டமும் கமிஷனும்!

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சனிக்கிழமை தில்லியில் கூடிய முழு திட்டக் கமிஷன் பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.2 சதவீதம் என்ற அளவை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இனி மத்திய அமைச்சரவை கூடி, திட்ட அறிக்கை, இலக்கு, வழிமுறை ஆகியவற்றைப் பரிசீலித்து தேவைப்பட்டால் சில மாற்றங்களைச் செய்து தன்னுடைய ஒப்புதலைத் தெரிவிக்கும். அதன் பிறகு அனைத்து மாநில முதலமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட "தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டம்' (என்.டி.சி.) கூடி இந்த ஐந்தாண்டு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தர வேண்டும்.

ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஜவாஹர்லால் நேரு காலத்தில் இருந்த முக்கியத்துவம் இப்போது இல்லை. முதல் காரணம் போடப்படும் திட்டங்கள் எதுவும் உரிய காலத்தில் உரிய வகையில் நிறைவேற்றப்படுவதில்லை. அதுமட்டுமல்ல. நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான திட்டங்களையும், நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுத்து நிபந்தனைகளையும் விதிப்பதால் பல திட்டங்கள் அமலாகாமல் நீடிக்கின்றன.

உதாரணமாக, தமிழ்நாட்டில் "கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 3,000 கோடி ரூபாய் நிதியைத் தமிழக அரசு பயன்படுத்தவே இல்லை'. அதற்கு காரணம், "இதுவரை போக்குவரத்து வசதியையே பார்த்திராத கிராமமாக இருக்க வேண்டும், அந்த கிராமம் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவான மக்கள் தொகையையே கொண்டிருக்க வேண்டும்' போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததுதான்.

÷வடகிழக்கு மாநிலங்களையும் ராஜஸ்தான், உத்தரகண்ட் மாநிலங்களின் நிலையையும் மனதில் கொண்டு திட்டமிடுவது என்பது தமிழ்நாட்டிற்கு எப்படிப் பொருந்தும்? சாலை இல்லாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டிருக்கிறதே!

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பிறகும்கூட மாநிலங்களுக்காக மத்திய அரசின் திட்டமிடல் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

தென் மாநிலங்களுக்கான ரயில்பாதைகளை இரட்டிப்பாக்குவது, மேலும் பல நகரங்களுக்கு நீட்டிப்பது போன்ற சாதாரண பணிகள் கூட உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதில்லை. அவ்வளவு ஏன், ரயில் பாதைகளின் கீழே கட்டப்படும் சுரங்கப் பாதைகளை முடிக்கக்கூட பல மாமாங்கங்கள் பிடிக்கின்றன.

11 ஐந்தாண்டு திட்டங்கள் முடிந்த பிறகும்கூட மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் மாநிலத்துக்கு ஒரு ஐ.ஐ.டி.யும் ஏற்படுத்தப்படவில்லை. கல்வி, சுகாதாரத்துறையில் நம்முடைய திட்டமிடலும் செயலாற்றலும் எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

மத்திய திட்டக்குழு ஒப்புதல் வழங்கிய பல திட்டங்கள் முழுமை பெறாமல் இருப்பதற்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதும், அனுமதி தரப்படுவதில் உள்ள காலதாமதமும் முக்கிய காரணங்கள்.

இதற்கு நிதியமைச்சர் புதிய யோசனையைத் தெரிவித்திருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு அதிகமான திட்டங்களைப் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க பிரதமர் தலைமையில் தேசிய முதலீட்டு வாரியம் (என்.ஐ.பி.) அமைக்க வேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சரவை, மத்திய திட்டக்குழு இரண்டுமே பிரதமர் தலைமையில்தான் இயங்குகின்றன. இந்த இரண்டிலும் பேசி முடிவு செய்தவற்றுக்கு செயல்வேகம் கூட்ட இன்னொரு அமைப்புக்கு என்ன தேவை.

திட்டக்குழு தொடங்கிய இடத்துக்கே செல்லவேண்டும் என்பதுதான் நம்முடைய கருத்து. அதாவது இரண்டாவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் விவசாயத்துக்கும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும், மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் அளித்த அதே முக்கியத்துவத்தை நாம் மீண்டும் அளித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள் வேலைவாய்ப்பு திட்டமாக்கி, விவசாய நிலங்களை தரிசு பூமியாக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே, பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்

மத்திய திட்டக்குழு என்பது மாநில திட்டக்குழுக்களின் பிரதிநிதிகளும் அடங்கிய அமைப்பாக இருந்தால் மட்டுமே, அல்லது, மத்திய திட்டக்குழுவுக்கு ஆலோசனைகள் வழங்கவும், திட்டமிடுவதை நெறிப்படுத்தவும், மாநிலத்தின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு இருந்தால் மட்டுமே, முறையாக திட்டமிடவும், திட்டமிட்ட இலக்கை எட்டவும் முடியும்.

புள்ளிவிவரங்களால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை. அன்னிய முதலீட்டாளர்களையும், சர்வதேச நிதி நிறுவனங்களையும் திருப்திப்படுத்த வேண்டுமானால் இந்த புள்ளிவிவரங்கள் பயன்படுமே தவிர சராசரி இந்தியனின் அடிப்படை எதிர்பார்ப்புகளை இந்தப் புள்ளி விவரங்கள் எந்தவிதத்திலும் நிறைவேற்றப் போவதில்லை.

Source: Dinamani

இனியும் வேண்டாம் தாமதம்!


கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அண்மையில் அடிக்கல் நாட்டிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், 20 லட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி என்பது 31 சதவீதம் என்றாலும், பெருவாரியான நகரங்களில் மக்கள் நெரிசல் கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது. புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், நகரின் மத்திய பகுதிகளில் வேலை பார்ப்பதற்கு வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததும்தான் இதற்குக் காரணம். எல்லோரும் நகரத்துக்குள்ளேயே வாழ விரும்புவதால் நகர்ப்புறங்களில் மக்கள் நெரிசல் அதிகரித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 20 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்கள் சென்னை, கோவை மட்டுமே. இதற்கு அடுத்த நிலையில் மதுரையில் 14 லட்சம் மக்களும், திருச்சியில் 10 லட்சம் பேரும் வாழ்கிறார்கள். நகர வளர்ச்சியைக் காணும்போது, மதுரை, திருச்சி இரு நகரங்களும் விரைவில் 20 லட்சம் மக்களைக் கொண்ட நகரங்களாக மாறிவிடும்.

தமிழ்நாட்டில் தற்போது சென்னை நகரத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் நிபந்தனைப்படி இத்தகைய மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட வேண்டுமானால், இப்போதைக்கு அது கோவையில் மட்டுமே சாத்தியம்.

இத்தகைய திட்டங்களுக்கு மிகப்பெரும் மூலதனம் தேவை என்பதாலும், உலக வங்கி போன்ற நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பதாலும் மத்திய அரசின் அனுமதி அவசியமாகிறது. இந்நிலையில், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் என்பது, அந்த வசதியுள்ள நகரங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுமே தவிர, மக்கள் நெரிசல் பிரச்னையையோ போக்குவரத்து வசதி பிரச்னையையோ தீர்க்க உதவாது.

பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 24 ஆக உள்ளன. திருப்பூர், ஒசூர், வேலூர் ஆகிய நகரங்கள் இதில் குறிப்பிடத் தக்கவை. இந்நகரங்களில் இப்போதே ஏன் மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும்? அதற்குத் தேவை என்ன என்று கேட்கலாம். இந்த நகரங்கள் முறையே கோவை, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களுடன் தொடர்புடையவை. கோவை-திருப்பூர், பெங்களூர்-ஒசூர், சென்னை-வேலூர் இடையே அன்றாடம் பல லட்சம் பேர் பணியின் நிமித்தமாகப் பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரயில் திட்டத்தை இந்த நகரங்களில் அமல்படுத்தி புறநகர் பகுதிகளை விரிவுபடுத்தினால், கோவை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் மக்கள் நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பெருக்கம்தான். ஆண்டுதோறும் கார்களின் விலை கூடினாலும், இரு சக்கர வாகனங்களின் விலை ஒரு பழைய காரின் விலை அளவுக்கு இருந்தாலும்கூட, அவற்றின் விற்பனையில் சரிவுகள் இல்லை.

எந்த அளவுக்கு கார்களும் இரு சக்கர வாகனங்களும் விரைந்து செல்லப் பயன்படுகிறது என்பது விவாதப் பொருள். அதிகரித்த வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்த்துவிடுகிறது என்பதை அனைவரும் உணர்ந்தாலும் சொந்த வாகன மாயையில் கட்டுப்பட்டு பொது போக்குவரத்தைத் தவிர்க்கிறார்கள். பொது போக்குவரத்தும் சரி, தேவைக்கு ஏற்றபடியும், வசதியுடனும் இல்லாமல் இருப்பதும் இன்னொரு காரணம்.

பொதுமக்கள் விரைவாகத் தங்கள் இடத்துக்குப் போக முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பொது வாகனங்களைப் பயன்படுத்தும் கலாசாரத்துக்கு மாறுவார்கள். இத்தகைய மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு மெட்ரோ ரயில் பேருதவியாக இருக்கிறது. இதைத்தான் தில்லி மெட்ரோ ரயில் திட்டம் உறுதிப்படுத்தி இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 20 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இவர்களில் பாதிப்பேர் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தியவர்கள். தற்போது மெட்ரோ ரயிலுக்கு மாறியுள்ளனர்.

ஆகவே, 10 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தினால், பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தவும், நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையவும் உதவும். பெரு நகரங்களிலும் சரி, சிறு நகரங்களிலும் சரி, புறநகர் பகுதிகளில் மக்கள் அதிகமாகக் குடியேறி நகரின் மத்திய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைய மெட்ரோ ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதைத்தான் லண்டன், பாரீஸ், நியூயார்க், டோக்கியோ, சிங்கப்பூர், நமது இந்தியத் தலைநகர் தில்லி போன்றவை உணர்த்துகின்றன.

ஒரு திட்டத்தைத் தொடங்கி, அதற்குத் தேவைப்படும் இடங்களைக் கையகப்படுத்தி, கட்டுமான வேலைகளைத் தொடங்க, 20 லட்சம் மக்கள் தொகை பெருக்கத்துக்காக காத்திருந்தால், புதிய கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிடும். இந்த இடங்களை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடியவும் நாளாகும். ஆகவே, இப்போதே அதற்கான பணிகளைத் தொடங்கி விடுவதுதான் அறிவுடைமை.

Source: Dinamani