Sunday, August 14, 2016

உயிர் காக்கும் உறுப்பு தானம்!-ORGAN DONATION

உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு ஸ்பெயின்

ஒரு வருடத்தில் நம் நாட்டில் மாற்று உறுப்பு கிடைக் காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வருடத்துக்குச் சுமார் 5 லட்சம் பேர் என்கிறது சமீபத்திய ஆய்வு. வருஷத்துக்குக் கல்லீரல் கிடைக்காமல் இறப்பவர்கள் 2 லட்சம் பேர். இதயம் கிடைக் காமல் இறப்பவர்கள் 50 ஆயிரம் பேர். இது தவிர, உறுப்பு கள் முழுச் செயல்பாட்டில் இல்லாமல் போராடுபவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். கார்னியா கிடைக்காமல் 10 லட்சம் பேர் பார்வை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வருடத்துக்கு 5 லட்சம் பேருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 5,000 ஆயிரம் மட்டுமே. கல்லீரல் 500 பேருக்குக்கூடக் கிடைக்கவில்லை. உறுப்பு தானத்தின் அவசியத்தை உணர்ந்து 1994-ம் ஆண்டிலேயே இதற்கெனத் தனிச் சட்டம் இயற்றி, உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது மத்திய அரசு. என்றாலும், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நம் மக்களுக்கு எட்டவில்லை.

ஒரு தனியார் செய்தி நிறுவனம், உறுப்பு தானம் குறித்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ள மூன்று விஷயங்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. முதலாவது, அநேகம் பேர் உடல் தானத்தையும் உறுப்பு தானத்தையும் குழப்பிக்கொள்கின்றனர். இரண்டாவது, கண் மற்றும் சிறுநீரகத்தைத் தானமாகத் தரலாம் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கிறது. உடலின் பல உறுப்புகளைத் தர முடியும் என்பது தெரியவில்லை. மூன்றாவது, உறுப்பு தானத்தை யார், எங்கு, எப்படிச் செய்வது என்பது முக்கால்வாசிப் பேருக்குத் தெரியவில்லை.

எது உறுப்பு தானம்?

ஒருவர் இயற்கையாக இறந்த பிறகு, அவரது முழு உடலையும் மருத்துவ மாணவர்களின் கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் கொடுப்பது உடல் தானம். இவர்களின் கண்களை மட்டும் 6 மணி நேரத்துக்குள் எடுத்து, மற்றவர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாறாக, மூளைச் சாவு ஏற்பட்டவரின் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து, மற்றவர்களுக்குப் பயன்படுத்துவது உறுப்பு தானம். இதயம், கண், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கணையம், குடல், தோல், எலும்பு, இதய வால்வு, ரத்தக் குழாய் என ஒருவரே பல உறுப்புகளைத் தானமாகத் தரலாம். ஒருவர் செய்யும் உறுப்பு தானத்தால், ஒரே நேரத்தில் 14 பேர் பலன் அடைகின்றனர். உயிரோடு இருக்கும்போது சிறுநீரகம், எலும்பு மற்றும் கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாகத் தரலாம்.

உறுப்பு தானத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் இருக்கவும் தமிழக அரசின் உறுப்பு தானத் திட்டம் 2008-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச் சாவு ஏற்பட்டால், உடனே உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள். இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்று, மூளைச் சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி, அவர்களின் சம்மதம் கிடைத்ததும் அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகள், மருத்துவமனை மூலமாக ஏற்கெனவே, இந்தத் திட்டத்தினரிடம் ரூ.1,000 கட்டணம் செலுத்திப் பதிவு செய்திருப்பார்கள். பதிவுசெய்து காத்திருப் பவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் உடல் உறுப்புகள் வழங்கப்படும். பொதுவாக, இதயத்தை 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள்ளும், கல்லீரலை 8 மணி நேரத்துக்குள்ளும் பொருத்திவிட வேண்டும். சிறுநீரகத்தைச் சரியான முறையில் பதப்படுத்திக்கொண்டால் 12 மணி நேரத்துக்குத் தாங்கும். உறுப்புகளை எடுப்பதைவிட முக்கிய மானது, எடுத்த உறுப்பைச் சரியான நேரத்துக்குள் அடுத்தவருக்குப் பொருத்துவது.

உறுப்பு தான அட்டை

உறுப்பு தானம் செய்ய வயது தடையில்லை. எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி, சி நோயாளிகள் உறுப்பு தானம் செய்ய முடியாது. உறுப்பு தானம் செய்ய விரும்புவோர் ‘டோனர் கார்ட்’ எனும் அடை யாள அட்டையைத் தமிழக அரசு இதற்கென்றே அமைத்துள்ள இணையதளத்திலிருந்து (www.tnos.org) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அட்டையில் பெயர், ரத்த வகை, எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக் கும். இதை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் உறுப்பு தானம் செய்ய விரும்புவதை அவர் வீட்டிலும் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் உறுப்பு கேட்டு வரும்போது உறவினரின் சம்மதம் கிடைப்பதில் சிரமம் இருக்காது. உறுப்பைப் பெறுவதில் ஏற்படும் தாமதத்தையும் தவிர்க்கலாம்.

ஏன் அவசியம்? தடைகள் என்னென்ன?

உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயினில் ஒரு லட்சம் பேரில் 400 பேரும், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 8 பேரும் மட்டுமே உறுப்பு தானம் செய்யத் தயாராக இருக்கின்றனர். தமிழகத்தில் 13 பேர். என்ன காரணம்? ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியல் கலாச்சாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில மூடநம்பிக்கைகள்தான் முக்கியத் தடைகள். உறுப்பு தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டால், மருத்துவமனைகளில் வேண்டும் என்றே சரியான சிகிச்சை கொடுக்காமல் இறப்புக்கு வழி செய்துவிடுவார்களோ என்ற பயமும் பலரைத் தடுக்கிறது. இந்த இரண்டையும் நாம் கடந்து வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

என்ன செய்ய வேண்டும்?

தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பிடும்போது 5% கூட அரசு மருத்துவமனைகளில் நடப்பதில்லை. உறுப்பு தான மாற்றுச் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தச் சிகிச்சைக்குப் பெறப்படும் உறுப்புகளுக்கு இவர்கள் பணம் பெறுவதில்லை. ஆனால், அதற்கான சிகிச்சைக் கட்டணங்கள் சில லட்சங்களுக்குக் குறையாது. இதனால், வசதி படைத்தவர்கள் மட்டுமே பயனடைகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு உறுப்புகள் கிடைப்பதில்லை. இந்தக் குறைகளைச் சரிசெய்யும் விதமாக இந்த மையங்களை அமைப்பதற்கு அரசு ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். இப்போது உறுப்பு தான அறுவை சிகிச்சை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும் மட்டுமே செய்யப்படுகிறது.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் அனைத்திலும் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை. அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் உறுப்புகளைத் தானமாகப் பெற்று, அவற்றை முறைப்படி பாதுகாத்து வைப்பதற்கு உண் டான வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.

உறுப்பு தானம் தொடர்பான கருத்துகளைப் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி சமூகத்தின் எல்லா மூலைகளுக்கும் அரசு எடுத்துச் செல்ல வேண்டும். சமூக வலைதளங்களை இதற்கு முக்கியமான கருவியாகப் பயன்படுத்தலாம். மேலை நாடுகளில் 18 வயது நிரம்பியதும் ஓட்டுநர் உரிமம் தரும்போது, அதில் உறுப்பு தானம் செய்ய விருப்பமா எனக் கேட்டு, குறித்துக் கொடுத்துவிடுகின்றனர். இதை நாமும் பின்பற்றலாம்.

உறுப்பு தானம் செய்பவர்களை உற்சாகப்படுத்த, சமூகத்துக்கு அவர்களுடைய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இஸ்ரேல் நாட்டில் உறுப்பு தானம் செய்பவரின் குடும்பத்தினருக்கு ஊதியத்தில் ஊக்கத்தொகை அளிக்கின்றனர். இன்னும் சில மேலை நாடுகளில் அவரின் குடும்பத்தினருக்கு மருத்துவச் சிகிச்சைகள் இலவசம். இப்படி அவரின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும் சலுகையும் அவர்களைத் தனித்துக் காட்டும். இது மேலும் பலரை ஈர்க்கும். பல உயிர்களைக் காக்கும்!

SOURCE:TAMIL HINDU

சவால்களை எதிர்கொள்ளும் பிரசண்டா!-NEW PRIME MINISTER AND NEW HOPE IN NEPAL

நேபாளத்தில் முன்னணி மாவோயிஸ்ட் தலைவரான "பிரசண்டா' என்று அழைக்கப்படும் புஷ்ப கமல் தாஹால் கடந்த புதன்கிழமையன்று மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிறார். நேபாளப் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஓலி பதவி விலகியதால் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

1996 முதல் 2006 வரையிலான மாவோயிஸ்ட் கலவரங்களின் விளைவாக 240 ஆண்டு பழமையான மன்னராட்சி நேபாளத்தில் முடிவுக்கு வந்தது. அது ஆரோக்கியமான மக்களாட்சி முறைக்கு வழிகோலும் என்கிற எதிர்பார்ப்பு ஏனோ நிறைவேறவில்லை. கடந்த 26 ஆண்டுகளில் 24 பிரதமர்களை நேபாளம் சந்தித்திருக்கிறது. ஆனால், இன்னும்கூட நிலையான ஆட்சியை யாராலும் அமைக்க முடியாத நிலைதான் தொடர்கிறது.

அரசமைப்புச் சட்டம் வடிவமைத்து அறிவிப்பதற்குப் பல தடவை நாள் குறித்தும்கூட அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. பல கெடுக்களுக்குப் பிறகு அரசமைப்புச் சட்டம் உருவானபோது, அது நேபாளத்தின் மதேசிகளின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையவில்லை. அவர்கள் தங்களுக்குப் போதுமான இடங்களை அரசின் எல்லா மட்டங்களிலும் உறுதிப்படுத்தக் கோரி போராட்டத்தில் இறங்கினர். நேபாளத்தில் கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்தக் கோரினர்.

கே.பி. சர்மா ஓலியின் பதவி விலகல் எதிர்பார்த்த ஒன்றுதான். பிரதமராவதற்காக அவர் அளித்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்ட பிறகும் அவரை ஆதரித்த மாவோயிஸ்டுகளும் ஏனைய கூட்டணிக் கட்சிகளும் அவரைத் தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவர் எதிர்பார்க்க முடியாது. மலைவாழ் குடிமக்களுக்கும், இந்திய எல்லையை ஒட்டிய சமவெளிப் பிரதேசங்களில் வாழும் மதேசிகள் என்று அழைக்கப்படும் மக்களுக்கும் இடையே ஓலியின் ஆட்சியில் மிகப்பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டு விட்டது. மதேசிகளின் போராட்டத்தை அவர் கையாண்ட விதம்தான் அவரது வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி, தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பது மதேசிகளின் கோரிக்கை. அதை ஓலி அரசு பொருள்படுத்தவில்லை என்பதால்தான் மதேசிகள் இந்திய - நேபாள எல்லையை முடக்கி, எந்தப் பொருளும் ஏனைய நேபாளப் பகுதிகளுக்குக் கிடைக்காமல் செய்தனர். அவர்களது ஐந்து மாத பொருளாதாரத் தடையை, பேச்சுவார்த்தைக்கு அழைத்து முடிவுக்குக் கொண்டுவராமல், மதேசிகள் இந்திய அரசால் தூண்டிவிடப்படுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முற்பட்டார் முன்னாள் பிரதமர் ஓலி.

அனைவரையும் அரவணைத்துச் செல்ல ஓலி முயலவில்லை என்பது மட்டுமே அவரது வீழ்ச்சிக்குக் காரணமல்ல. நேபாளத்தையே முடக்கிப்போட்ட பூகம்பத்திற்குப் பிறகு நிவாரண வேலைகளை முடுக்கிவிட்டு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் அவரது அரசு மெத்தனமாகச் செயல்பட்டதும் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு வீழ்ச்சியடைய இன்னொரு காரணம்.

இரண்டாவது முறையாக நேபாளத்தில் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் சென்டர் கட்சியின் தலைவர் பிரசண்டா மூன்று முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இந்த மூன்று பிரச்னைகள்தான் ஓலியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன என்பதால், உடனடியாக பிரதமர் பிரசண்டா அவற்றில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

முதலாவதாக, மதேசிகளின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான தீர்வு கண்டாக வேண்டும். அவர்களுக்கு முறையான அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்களும், அங்கீகாரங்களும், ஆட்சி அமைப்பில் எண்ணிக்கைக்கேற்ற பங்களிப்பும் தரப்பட்டாக வேண்டும். இரண்டாவதாக, நிர்வாக இயந்திரத்தை முடுக்கிவிட்டு ஏப்ரல் 2015-இல் நேபாளத்தை சீர்குலைத்த பூகம்பத்தின் பாதிப்புகளை சரிசெய்தாக வேண்டும். மூன்றாவதாக, ஓலியின் ஆட்சியில் ஏறத்தாழ சிதைந்து போயிருக்கும் இந்திய - நேபாள நட்புறவை மீண்டும் வலுப்படுத்திப் பழைய நிலைமை ஏற்படச் செய்ய வேண்டும்.

நேபாள மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கை பலத்தில் இருக்கும் மதேசிகளைப் புறக்கணித்துவிட்டு, நிலையான ஆட்சியை அமைத்துவிட முடியாது. இந்திய எல்லையை ஒட்டிய சமவெளிப் பிரதேசத்தில் வாழ்கிறார்கள் என்பதாலும், அவர்களுக்கும் இந்தியாவில் வாழும் மக்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாலும், அவர்கள் நேபாள தேசத்தவர்கள் அல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. இந்தப் பிரச்னையை புதிய பிரதமர் எந்த அளவு சாமர்த்தியமாகக் கையாள்கிறார் என்பதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.

இந்தியாவையும், சீனாவையும் எப்படி அவர் நட்புறவுடன் வைத்துக்கொள்ளப் போகிறார் என்பது அடுத்த பெரிய சவால். ஓலி செய்ததுபோல, வெளிப்படையாகச் சீனாவைக் காட்டி இந்தியாவை பயமுறுத்தும் அணுகுமுறையை பிரதமர் பிரசண்டா கடைப்பிடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கலாம். கொள்கை ரீதியாக பிரசண்டா சீனாவுடன் நெருக்கமானவராக இருந்தாலும், இந்தியாவில் படித்து, இந்தியக் கலாசாரச் சூழலில் வாழ்ந்த பிரசண்டாவுக்கு பூகோள, சரித்திர ரீதியாக நேபாளத்துக்கும் இந்தியாவுக்குமிடையேயான நட்பும் உறவும் எத்தகையது என்பது நன்றாகவே தெரியும்.

கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகள் அவருக்கு நல்ல பாடமாக அமைந்திருக்கும் என்று நம்பலாம். எந்தவொரு முடிவும் நல்லதொரு தொடக்கத்துக்குக் காரணமாக அமையக்கூடும். பிரசண்டாவின் ஆட்சியில் தவறுகள் திருத்தப்பட்டு, நேபாளத்தில் புதியதொரு சரித்திரம் படைக்கப்படும் என்று எதிர்பார்ப்போமாக!

SOURCE:DINAMANI

தனியார்மயத்தை தவிர்க்க முடியாது!-PRIVATISATION OF PSU'S

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நீதி ஆயோக், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 74 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாகப் பட்டியலிட்டுள்ளது. இதில் எட்டு நிறுவனங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பரிந்துரை செய்துள்ளது.

இது பரிந்துரை மட்டுமே. இதேபோன்ற பரிந்துரைகள் முந்தைய அரசுகளுக்கும் அப்போது அமைக்கப்பட்ட குழுக்களால் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் எவற்றையெல்லாம் மீட்டெடுத்து லாபத்தில் இயக்க முடியும், எவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் சீர் செய்ய முடியும், எவை சரிசெய்ய வாய்ப்பில்லாத நிலையில் மூடப்பட வேண்டும் என்று பட்டியல் அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.

இத்தகைய பரிந்துரைப் பட்டியல் வெளியானவுடன் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக அறிக்கைவிடுவதோடு, ஆலையை மூடக்கூடாது, தனியாருக்குப் பங்குகளை விற்கக்கூடாது என்று அந்த நிறுவன ஊழியர்களின் குடும்பத்தோடு சேர்ந்து அறவழிப் போராட்டங்களையும் நடத்தும். இத்தகைய அழுத்தம் காரணமாக அரசும் தனது முடிவைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வரும்.

தற்போதும் நீதி ஆயோக் பரிந்துரையை மத்திய அமைச்சரவை பரிசீலித்து எடுக்கும் நடவடிக்கைக்குப் பிறகுதான், இந்த பரிந்துரைகளில் எத்தனை ஏற்கப்படும், எத்தனை நிறுவனங்கள் மூடப்படப் போகின்றன என்பதெல்லாம் தெரியும். பட்டியல் வெளியானவுடன் அறிக்கைகளும் வெளிவரத் தொடங்குவது எதிர்பாராதது அல்ல.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க முடியும்; ஆனால், உதகை இந்துஸ்தான் போட்டோ நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை; சேலம் தேனிரும்பு ஆலையைப் பொருத்தவரை தனியாருக்குப் பங்குகளை விற்று, அவர்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு, தேனிரும்பு ஆலையையும்கூட தனியாருக்கு விற்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவும் கடந்த பல ஆண்டுகளாகவே பரிசீலனையில் உள்ள யோசனைதான்.

இப்போது, சேலம் தேனிரும்பு ஆலையை மூடக்கூடாது என்கின்ற அறிக்கைப் போரில் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க. என எல்லா கட்சிகளும் அறிக்கை வெளியிட்டாகிவிட்டது. அனைவருமே சேலம் தேனிரும்பு ஆலையை தனியாருக்குத் தாரை வார்க்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

1970-ஆம் ஆண்டு 2,000 தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட, சேலம் தேனிரும்பு ஆலை கடந்த ஆறு ஆண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 2011-12இல் ரூ.100 கோடியாக இருந்த நஷ்டம், 2015-16இல் ரூ.349 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தனைக்கும் சேலம் தேனிரும்புக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், வரவேற்புக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஊழல், அதிக பணியாளர்கள் என நஷ்டத்துக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனவே தனியாருக்கு 51% பங்குகளை விற்று, ஆலையை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவது என்று சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக அது கைவிடப்பட்டது. "புலி வரு

கிறது புலி' என்பதுபோல் அல்லாமல் இந்த முறை நிஜமாகவே தனியாருக்கு பங்குகள் விற்கப்படக்கூடும் என்று கருத வாய்ப்புள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அரசு ரூ.56,500 கோடியை திரட்டும் என்று நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார். ஆகவே, தொடர்ந்து பெருநஷ்டம் காட்டும் நிறுவனங்களை மூடுவதும், பங்குகளை விற்பதும் தவிர்க்க

வியலாதது என்றுதான் தோன்றுகிறது. இந்த முறை அரசியல் அழுத்தம் பலன் அளிப்பது அரிதினும் அரிது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே இந்த நிலை என்றில்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பலவும்கூட நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி கண்டித்து வருகிறது பொதுக்கணக்குத் தணிக்கைக் குழு (சி.ஏ.ஜி.). இதில் எந்த மாநிலமும் விலக்கல்ல.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சி.ஏ.ஜி. அறிக்கை 2015-இன்படி, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 63 நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.70,673 கோடி; நஷ்டம் ரூ.38,233 கோடி. இதில் மிக அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்துவது மின் உற்பத்தி வாரியம்தான். இலவச மின்சாரம் மற்றும் சலுகை கட்டணம் அனைத்துக்கும் அரசு ஈட்டுத்தொகை செலுத்திய பிறகும் ரூ.13,321 கோடி நஷ்டம். முழுக்க முழுக்க அதிகாரிகள், தொழிலாளர்கள் சார்ந்த நிர்வாக குறைபாடுதான் இதற்குக் காரணம்.

அதேபோன்று, இரண்டாவதாக அதிக நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனம் போக்குவரத்துக் கழகங்கள். ரூ.856 கோடி நஷ்டம். ஒரே வழித்தடத்தில் ஓடும் தனியார் பேருந்துகள் பெருலாபம் சம்பாதிக்கும்போது, அரசுப் பேருந்துகள் மட்டும் நஷ்டத்தில் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான். தவறு எங்கே இருக்கிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை

பொதுத்துறை நிறுவன ஊழியர்களை நிறுவனத்தில் குறிப்பிட்ட விழுக்காடு முதலீட்டுக்கு பங்குதாரர்களாக மாற்றிவிடுவதும், ஊதியத்தை செயல்திறன் சார்ந்ததாக மாற்றுவதும்தான் இதற்குத் தீர்வாக இருக்கும். மக்கள் வரிப்பணத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்தப்படுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது!

SOURCE:DINAMANI

இனியும் தகாது தாமதம்!-Pending cases


உயர் நீதிமன்றங்களில் தற்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், காலியாகவுள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் 43 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு விசாரணையின் போது சுட்டிக் காட்டியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக் குழு (கொலீஜியம்) 75 பேர் கொண்ட பட்டியலை அளித்துப் பல மாதங்களாகியும் மத்திய அரசு அதற்கான உத்தரவை இன்னும் பிறப்பிக்காதது குறித்து இந்த அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2015, மார்ச் நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 61,300 வழக்குகளும், 24 உயர் நீதிமன்றங்களில் சுமார் 44.5 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் ஏறத்தாழ 2.6 கோடி வழக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன. வழக்குகளை விரைவாக விசாரித்து, தீர்ப்புகளை தாமதமின்றி வழங்க "லோக் அதாலத்' உள்ளிட்ட வழிமுறைகளை அவ்வப்போது உச்ச நீதிமன்றம் அறிவித்த போதிலும், வழக்குகளின் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைக்க முடியவில்லை

இந்த நிலையில், எந்த விஷயமானாலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போக்கு வழக்கு நடத்துபவர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், நிலுவையில் உள்ள வழக்கு

களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அரசியல் சட்ட விவகாரங்கள் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்த வேண்டிய உச்ச நீதிமன்றம் அதன் தனித்தன்மையை இழந்து வருவதாக நீதிபதிகள் அனில் தவே, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரைக் கொண்ட அமர்வு அண்மையில் ஒரு வழக்கு விசாரணையின் போது கவலை தெரிவித்தது.

உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து செல்வாக்குமிக்க தனிநபர்களும், பணபலமிக்க நிறுவனங்களும் உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேசிய, பொது முக்கியத்துவம் இல்லாத இதுபோன்ற மேல்முறையீடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதுதொடர்பான அறிக்கையை ஓராண்டுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்ட ஆணையத்துக்கு இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதித் துறை சீரமைப்பு தொடர்பாகச் சட்ட ஆணையம் ஏற்கெனவே தெரிவித்துள்ள பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்த ஆண்டு, நவம்பர் மாதம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தவே, கோயல் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 31-ஆக உயர்ந்துள்ள போதிலும், பொது முக்கியத்துவம் இல்லாத, வழக்கமான மேல் முறையீட்டு மனுக்களை விசாரிப்பதிலேயே அவர்களது நேரம் விரயமாகிறது. இதனால், அரசியல் சட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.

"உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்ற நடைமுறையை வழக்கு நடத்துபவர்கள் கடைபிடிப்பதில்லை. விதி

விலக்காக, ஒரு சில விவகாரங்களில் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கலாம் என்பதுதான் வழக்கம். ஆனால், இந்த விதிவிலக்கே இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இதனால், உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் கடந்த 2014-ஆம் ஆண்டு பேசியதையும் நீதிபதிகள் தவே, கோயல் ஆகியோர் தங்களது உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளனர். இதையும் சட்ட ஆணையமும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு, இதுவிஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு எதற்கெடுத்தாலும் மேல்முறையீடு செய்வது மட்டுமல்லாது, பல்வேறு நடுவர் மன்றங்களின் (டிரிபியூனல்) தீர்ப்புகளுக்கு எதிராக நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்ற சட்டப்பூர்வ அனுமதியும் காரணமாக உள்ளது. உதாரணமாக, மின்சார சட்டம் 2003, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்தச் சட்டம் 2000 ஆகியவை நடுவர் மன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்கின்றன. இதுபோன்ற சட்டங்கள் குறித்தும் சட்ட ஆணையம் முழுமையாக ஆராய்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதைக் குறைக்க வழிவகை காண வேண்டும்.

தில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வையும், சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களின் தலைநகரங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகளையும் அமைக்கலாம் என சட்ட ஆணையம் ஏற்கெனவே தனது 229-ஆவது அறிக்கையில் யோசனை தெரிவித்துள்ளது. இந்த யோசனையையும் கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தனித் தன்மை, முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேல்முறையீட்டுக்காக தில்லி வரை செல்ல வேண்டிய சிரமத்தைப் போக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SOURCE:DINAMANI

Sunday, July 31, 2016

தேவைதான் இந்த அனுமதி!

தாயின் உயிருக்கு ஆபத்து என்கின்ற நிலையில் 24 வாரங்கள் கடந்த நிலையிலும், கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தற்போது அமலில் உள்ள கருக்கலைப்பு சட்டத்தின் உட்பிரிவுகள் அனுமதிக்கும் விதிவிலக்குக்கு உட்பட்டே அமைந்துள்ளது.

நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, 20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சியடைந்த கருவைக் கலைக்க முடியாது. இருப்பினும், இதே சட்ட விதிகளின் உட்பிரிவின்படி, "தாயின் உயிருக்கு வளரும் கருவினால் ஆபத்து' என்றால், தாய் உயிருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அக்கரு 20 வாரங்கள் கடந்திருந்தாலும் கருக்கலைப்பு செய்யலாம் என்று அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதால், உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இப்படித் தீர்ப்பு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஓர் இளம்பெண், குஜராத் நீதிமன்றத்தில் தனக்கு வல்லுறவால் உருவான 25 வாரக் கருவைக் கலைக்க அனுமதி வேண்டும் என்று வழக்கு தொடுத்து, அவருக்கு "சிறப்பு நேர்வாக" அனுமதி அளிக்கப்பட்டது. தற்போதைய வழக்கில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்னொரு வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவும்கூட வல்லுறவினால் உண்டான கருவைக் கலைக்கக் கோரும் மனுதான். தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இதே தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றமும் வழங்கக்கூடும்.

ஒரு தாயின் உயிரைக் காப்பதற்காக 20 வாரங்களைக் கடந்த நிலையிலும், மருத்துவர் அறிக்கையை ஏற்று, கருக்கலைப்பு செய்வதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால், கருக்கலைப்பை சட்டப்படி செய்வதானாலும், அதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில் "இல்லை" என்பதாகவே முடியும்.

12 வாரங்களுக்கு மிகாத கருவை ஒரு தனி மருத்துவர் எடுக்கும் முடிவின்படி, அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் கருக்கலைப்பு செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், 12 வாரங்களுக்கு மேற்பட்ட 20 வாரங்களுக்குட்பட்ட கருவைக் கலைக்க வேண்டுமானால் இரண்டு மருத்துவர்களின் சான்றறிக்கை தேவை.

கரு விபரீதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றோ அல்லது அந்தக் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து என்றோ அல்லது அந்தக் கருவின் வளர்ச்சி முழுமையற்றதாக இருப்பதால் குழந்தை ஊனமாக அல்லது மூளைவளர்ச்சி குன்றியதாக பிறக்கலாம் என்றோ மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் இவ்வாறாக, 12 வாரங்களுக்கு மேற்பட்ட கருக்கலைப்பு தகுந்த சான்றறிக்கையுடன் நடைபெறுவதே இல்லை.

ஊனமாகப் பிறக்க வாய்ப்புள்ள நிலையில், வல்லுறவில் கரு உருவாகியிருந்தால், கருவைச் சுமக்கும் பெண்ணுக்கு அந்தக் கருவினால் உடல், உயிர், மனநிலைக்குப் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்பட்டால், கருவுற்ற பெண் மனநிலை குன்றியவராக இருந்தால், ஏற்கெனவே கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருந்தும்கூட கருவுற்றிருத்தல் உள்ளிட்ட சூழல்களில் கருக்கலைப்பை அனுமதிக்கலாம் என்கிறது சட்டம்.

ஆனால், பல நேர்வுகளில் 12 வாரங்களுக்கு உட்பட்ட கரு என்றே பதிவு செய்து கருக்கலைப்பு செய்துவிடும் போக்கு காணப்படுகிறது. இதற்குக் காரணம், 90 விழுக்காடு சம்பவங்களில், மணமாகாத நிலையில் கருவுறுதல், காதலித்ததால் கருவுறுதல், வல்லுறவினால் கருவுறுதல், சிறுமி கருவுறுதல் ஆகியவைதான் கருக்கலைப்புக்கான காரணங்களாக இருக்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை முறை, தகவல் தொழில்நுட்பம், மாறும் சமூக வழக்கம் அனைத்தும் இத்தகைய கருவுறுதலை அதிகப்படுத்தியுள்ளது.

பல சம்பவங்களில் வல்லுறவுக்குக் காரணமான அல்லது காதலித்து கருவுறச் செய்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பதில் ஏற்படும் காலதாமதத்தில் கரு வளர்ந்துவிடுகிறது. சிறுமிகள் இந்த விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அச்சப்படுவதாலும் காலதாமதம் ஏற்படுகிறது. பெண்ணின் எதிர்கால வாழ்க்கை, குடும்ப கெளரவம் போன்ற காரணங்களால் பெண்ணின் பெற்றோர் இதனை பதிவு செய்யாமலேயே அல்லது 12 வாரங்களுக்கு உட்பட்ட கருவாக பதிவு செய்து கலைத்துவிடுவதையே விரும்புகிறார்கள்.

தற்போது 24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க அனுமதி கோரிய வழக்கில்கூட, அந்தப் பெண் காதலித்தபோது கருவுற்று, காதலன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததால் அவர் மீது வல்லுறவு வழக்கு நடைபெற்று வருகிறது. தில்லியில் நிலுவையில் உள்ள இளம்பெண் விவகாரத்தில், அவர் வல்லுறவினால் கருவுற்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யார் மீதும் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு பொதுவான வழிகாட்டுதலை அறிவித்திருக்கலாம். அதாவது, வல்லுறவுக்கு ஆளான, காதலித்தவரால் ஏமாற்றப்பட்ட பெண், 18 வயது நிரம்பாத ஒரு பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலே போதுமானது, அவர் 20 வாரங்களை கடந்த கருவை, பாதுகாப்பான மருத்துவ முறைப்படி கலைத்துக்கொள்ளலாம் என்று பொதுவான வழிகாட்டுதலை அறிவித்திருக்கலாம். அப்படி ஏன் செய்யாமல் விட்டார்கள் என்று புரியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பாகத்தான் கருக்கலைப்பு நடைபெறுகிறது என்பதை அரசு உறுதிப்படுத்தியாக வேண்டும். சமூக கேலிக்கு ஆளாகி விடுவமோ என்கிற பயத்தில் பலரும் முறையான மருத்துவ முன்னேற்பாடுகளுடன் கருக்கலைப்பை செய்ய முற்படுவதில்லை. இந்த நிலைமையிலும் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்!


Source:Dinamani

Friday, July 29, 2016

விபத்து அல்ல பாடம்!


வான் பரப்பில் காணாமல்போன இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் ஏ.என்.32 இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை கிடைத்த சிறு சிறு துப்புகளும்கூட தவறானதாகவே முடிந்துள்ளன

என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது, இந்த விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும், அதில் பயணம் செய்தோர் உயிருடன்

மீட்கப்படும் வாய்ப்புகளும் மிகமிக அரிதாகிக்கொண்டே வருகின்றன.

தாம்பரம் ராணுவ தளத்திலிருந்து அந்தமான் தீவுக்கு (போர்ட் பிளேர்) புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 விமானம் 270 கி.மீ. தொலைவுவரை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்துள்ளது. அதன் பிறகு

அந்த விமானம் காணாமல் போய்விட்டது. ஆறு விமானப் பணியாளர்கள் உள்பட 29 பேர் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

கடல்நீரில் விமானம் விழுந்தால் உயிர்பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று பொதுவாக கருதப்பட்டாலும், அது உண்மையல்ல. அதற்கு எதிரான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானம் கடலைத் தொடும்போது எந்தக் கோணத்தில் அமைகிறது என்பதும், மிதவை உடைகள் மற்றும் கடலின் அப்போதைய குளிர்ச்சி அளவு, அந்தப் பகுதியில் சுறாமீன்கள் இருக்கின்றவா என்பதையெல்லாம் பொருத்தே உயிர் பிழைக்கும் வாய்ப்பு அமையும்.

சுறா மீன்கள் இல்லாமல் இருந்து மிதவை உடைகள் இருக்குமேயானால் விமானத்தில் பயணித்தவர்கள் குறைந்தது சில நாள்கள் உயிருடன் மிதக்க வாய்ப்பு உண்டு. அந்த சில நாள்களுக்குள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமானால், விபத்துக்குள்ளான இடம் நிர்ணயிக்கப்படுவதும், அவர்களது உடை, உடைமைகளின் வண்ணங்களும் மிக முக்கியமாகின்றன. பல நிகழ்வுகளில் விமான பயணிகள் இதுபோன்ற விபத்தில் காப்பாற்றப்படுவது இவை மூலம்தான்.

நடுவானில் பழுதடைந்திருந்தால் அனைத்துப் பயணிகளும் மிதவை உடை அணிந்திருக்க வேண்டும். தற்போது இரவிலும் ஊடுருவிப் படம்பிடிக்கும் ரேடார் செயற்கைக்கோள் மூலம் இடத்தை தேடும்

பணிகள் நடைபெற்றாலும் விமானத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. மோரீஷஸ் தீவிலிருந்து சாகர்நிதி கப்பல் அழைக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் அலைகளால் நகர்ந்து இடம்மாறாமல் இருக்கும்

தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கப்பல் வந்தால், கடலில் விழுந்துள்ள விமானத்தின் சமிக்ஞைகளை துல்லியமாக கணக்கிட முடியும் என்கிறார்கள்.

ஏ.என்.32 விமானம் விபத்துகளை ஏற்படுத்தியதில்லை என்றும் சிறப்பாகச் செயல்படுவது என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதிலும், விமான விபத்துக்கான காரணங்களில் ஒன்றைக்கூட

இதுவரை ஊகிக்க முடியவில்லை. நமது தொழில்நுட்பங்கள் அனைத்துமே ஒரு எல்லைக்கு உட்பட்டவை என்பதையே மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன.

என்றாலும், இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, இன்னும் நாம் சரியான தொழில்நுட்பங்களைக்கூட கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. விமானம் எந்த இடத்தில் விழுந்திருக்கலாம் என்பதை

ஊகிக்கவும் செயற்கைக் கோள் படங்களைக் கொண்டு அதனைக் கண்டறியவும் நம்மால் முடியவில்லை.

அண்மையில் மலேசிய விமானம் காணாமல் போனபோது, அது கடலில் விழுந்ததற்கான அடையாளங்களை மட்டுமே காண முடிந்தது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நபரின் சடலம்கூட கிடைக்கவில்லை. தற்போது நடந்திருப்பதும் அதேபோன்றதொரு விபத்துதான் என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ராணுவ விமானம் என்பது எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளாகவும், திசை திருப்பிக் கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் பாதுகாப்பு உணர்வுடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக ராணுவ விமானங்கள் அமைக்கப்பட வேண்டும். ராணுவ விமானமும் சாதாரண பயணிகள் விமானம் போலத்தான் இருக்கும்

என்றால், அதனால் என்ன பயன்?

நடுவானில் வெடித்துச் சிதறியிருந்தால், செயற்கைக்கோளில் அது பதிவாகியிருக்கும் வாய்ப்புகள் உண்டு. கடந்த நான்கு நாள்களில் அத்தகைய பதிவுகள் ஏதும் தெரியவரவில்லை.

கடலோரக் காவல்படையின் டோர்னியர் விமானம், மூன்று வீரர்களுடன் காணாமல் போனது. அதனை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில தினங்களுக்குப் பிறகு அந்த வீரர்களின் உடல்பாகங்களும்

பயன்படுத்திய சில பொருள்களும் கரை ஒதுங்கின. அதைக் கொண்டே இதை விபத்தாகக் கருதி, முடித்துவைத்தனர்.

இந்திய விமானப்படையில் இதேபோன்றதொரு சம்பவம் 1968-லும் நேர்ந்தது. சண்டீகரிலிருந்து லே விமான தளத்துக்கு 98 பேருடன் பறந்து சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக மீண்டும்

சண்டீகருக்கே திரும்பிச் செல்ல பணிக்கப்பட்டது. ஆனால் அந்த விமானம் சண்டீகருக்குச் சென்று சேரவில்லை. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வடஇமாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சடலம், அந்த

விமானத்தில் பயணம் செய்த நபருடையது என்பது தெரிந்தது. அங்கே சோதனை நடத்தி மேலும் பல சடலங்களை மீட்டதோடு, அந்த சம்பவம் ஒரு விபத்து என்றும் முடிவு செய்தனர்.

ஒரு விமானம், விபத்து, தாக்குதல், கடத்தலுக்கு இலக்காகும்போது பயணிகள் அல்லது ஒரு பயணியின் எத்தகைய செயல்கள் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டுசேர்க்கும் என்கிற செயலிகளை நாம்

இன்னும் உருவாக்காமல் இருக்கிறோம். ஒரு விமானம் தரையில் அல்லது கடலில் விழுந்தாலும் ஒளிஉமிழ் பாகங்களை சிதறவிடுவதான உத்திகள், அல்லது காந்தஅலைகளை வெளியிட்டு

இருப்பிடம்காட்டும் உத்திகள் இவை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதை இந்த விமான விபத்து உலகுக்கு உணர்த்துகிறது.

Source:Dinamani

Monday, July 25, 2016

துருக்கி ஜனநாயகத்தின் பலவீனம்!

டான் - பாகிஸ்தான் நாளிதழில் வெளியான தலையங்கம்

கடந்த வாரத்தில் துருக்கி நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப் பதற்கு அந்த நாட்டின் ராணு வத்தின் ஒரு பகுதியினர் கலகம் செய்தனர். அது அந்த நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. துருக்கி அரசாங்கம், மக்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினாலோ, இந்தக் கலகத்தைக் காரணமாகக் கொண்டு ஆத்திரத்துடன் செயல்பட்டாலோ இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் விளைவுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கும்.

நாட்டில் இதுவரையிலும் 112 அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தற்காலிகப் பணிநீக்கம் அல்லது கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஆயுதம் தாங்கிய படைகளின்மீது பெருமளவில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஏறத்தாழ 9,000 காவல் துறையினரும் ஏராளமான நீதிபதிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது உண்மையில் பிரம் மாண்டமான எண்ணிக்கை. ஆட்சிக் கவிழ்ப்பு முயற் சிக்குக் காரணமான ‘நச்சுக் கிருமி’யை அழித்தொழிக்க துருக்கி அதிபர் எர்டோகன் உறுதியாக இருக்கிறார்.

தோற்றுப்போன ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னாலிருந்து இயங்கியவர்கள் எர்டோகனை எந்தவகையிலும் ஒழித்துக்கட்டிவிடுவது என்ற குறிக்கோளோடுதான் செயல்பட்டுள்ளனர் என்று தோன்றுகிறது. ஆனால், எர்டோ கன் அதற்குப் பதில் நடவடிக்கைகளில் இறங்கிவிடக் கூடாது.

துருக்கியில் அரசை எதிர்த்து குர்திஷ் இன மக்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்திவருகின்றனர். இதில் 27 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். இந்த அகதிகள் பிரச்சினையால் பக்கத்து நாடான சிரியாவோடும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடும் துருக்கிக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனால், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு, உலக நாடுகளின் கண்கள் துருக்கியை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடைமுறையை மறுபடியும் கொண்டுவர துருக்கி முயல் கிறது. அதைச் சில ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அதனால், நாடு தற் போது இருக்கும் சூழலில் ஜனநாயக உணர்வுகளுக்குத் தான் துருக்கி அரசாங்கம் விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்திய ராணுவக் கும்பல் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், மாற்றுக்கருத்து கொண்டுள்ளவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவதற்கான வாய்ப்பாக ஜூலை 14-15 தேதிகளில் நடந்த சம்பவங்களை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்ற நிலை வரக் கூடாது. அதற்குப் பதிலாக, இது போன்ற விவகாரங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக சர்வதேச அளவில் நீதித் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின்படி அவர்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

துருக்கியில் நடைபெறும் பழிவாங்கல் நடவடிக்கைகள் பற்றிய தங்கள் கவலையை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் துருக்கிக்குத் தெரிவித்துள் ளனர். பழிவாங்கும் எண்ணத்தோடு நடத்தப்படும் நியாய மற்ற விசாரணைகள் துருக்கியின் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக காயப்படுத்தவே செய்யும். பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும், மக்கள் தன்னெழுச்சியாகத் துருக்கியின் அதிபருக்கு ராணுவக் கலகத்தை அடக்குவதில் ஆதரவு அளித்தனர். மக்களின் அந்த உணர்வில்தான் எர்டோகன் தனது இதயத்தைச் செலுத்த வேண்டும். துருக்கியின் பிரதமர் பினலி இல்திரிம் சொன்னதைப் போல, இந்த ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தை நாடாளு மன்றத்துக்குத்தான் கொண்டுசெல்ல வேண்டும். அவசர கதியில் செயல்படக் கூடாது.

Source-Tamil Hindu

Saturday, July 23, 2016

விரிவான விவாதம் தேவை!


குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மக்களவையில் ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், இந்த மசோதா சட்டமாவதில் எந்த இடையூறும் இருக்கப்போவதில்லை.

இந்தச் சட்டத்தில் இரண்டு விஷயங்களில் எதிர்க்கட்சிகளும் குழந்தைகள் நல ஆர்வலர்களும் அதிக அக்கறை காட்டினார்கள். குடும்பத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தினாலும் குற்றமாக கருதப்பட வேண்டும் என்பது முதலாவது கருத்து. அதேபோன்று, 14 வயது வரை சிறார்கள் என்றும், 14 வயது முதல் 18 வயது வரையிலானவர்களை வளர் இளம் பருவத்தினர் (அடோலெசன்ட்) என்றும் இனம்பிரிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினர். அப்படி இருந்தும்கூட எதிர்க்கட்சிகள் அதிக பலம் பொருந்திய மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது.

இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்த மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய, "சிறார்கள் தங்கள் பள்ளி நேரத்துக்குப் பிறகு குடும்பத்துக்குள் பெற்றோருக்கு உதவியாக இருப்பதை இந்தச் சட்டம் தடைசெய்யவில்லை. ஏனென்றால், குடும்பத்துக்குள்ளான தொழில் உதவிகளைப் பொருத்தவரை - முதலாளி -தொழிலாளி என்ற நடைமுறை ஏதும் இல்லை. அதேசமயம், வளர் இளம் பருவத்தினரை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துதல் குற்றம்' என்று குறிப்பிட்டார்.

குடும்பத்துக்குள் பெற்றோருக்கு உதவுதல் என்பது குறித்தும் வரையறுக்கப்பட வேண்டும் என்பது குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கை. அவர்களது வாதம் இதுதான். அந்தக் குழந்தையின் உதவி அல்லது உழைப்பு, தந்தைக்கான கூலியாக அமைந்தால், அத்தகைய தொழில்முறைகளும் குழந்தைத் தொழிலாளர் முறையாகவே கருதப்பட வேண்டும். பெற்றோர் பீடி சுற்றினால், குழந்தையும் அவர்களுக்கு உதவியாக பீடி சுற்றும்போது, அது தந்தைக்குக் கிடைக்கும் கூலியின் அளவை உயர்த்தவே உதவுகிறது. அதேவேளையில், சொந்த வயலில் நீர்ப்பாய்ச்ச உதவுதல், பூ அல்லது காய்கள் பறித்துக் கொடுத்தல் ஆகிய வேலைகளில் சிறார்கள் ஈடுபடும்போது, அதற்கான கூலி தந்தைக்கு கிடைப்பதாகக் கருத முடியாது. இதுபோன்று, எந்தெந்தக் குடும்பத் தொழில்களில் சிறார்களை ஈடுபடுத்துவது என்பதை மேலும் நுட்பமாக இச்சட்டம் ஆராய வேண்டும் என்பதே அவர்களது வாதம்.

ஆனால், தற்போது நிறைவேறியுள்ள மசோதாவில் அதற்கான திருத்தங்கள் இல்லை. குடும்பத் தொழில் என்றாலும் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துதல் குற்றம் என்பது மட்டுமே உள்ளது. திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் சிறார்கள் நடிக்கும்போது, பங்குகொள்ளும்போது அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீர்மானிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. டிவி, சினிமா துறையில் வளர் இளம் பருவத்தினருக்கென தனியான விதிமுறைகளை உருவாக்கவும் இல்லை.

அதேபோன்று, வளர் இளம் பருவத்தினரை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது என்று மட்டுமே சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்தான தொழில் என்கிற பட்டியல் மாறு

தலுக்கு இலக்காகிறது. மேலும், ஆபத்தில்லா தொழில்கள் என்

றாலும்கூட பின்னாளில் உடல்நலனை பாதிக்கும் தொழில்களிலும், நெறிப்பிறழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள தொழில்களிலும் வளர் இளம் பருவத்தினரை ஈடுபடுத்துதல் கூடாது என்கின்ற தெளிவான வரையறை இந்தச் சட்டத்தில் தேவை. ஏனென்றால், ஒரு மதுக்கூடத்தில் சிற்றேவலராக இருப்பது ஆபத்தில்லாத தொழில்தான். ஆனால் அது நெறிப்பிறழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

வளர் இளம் பருவத்தினர் 14 வயதில் 9-ஆம் வகுப்பு படிக்கத் தொடங்கும்போதுதான் உண்மையான கல்வியைப் பெறுகின்றனர். அந்த நிலையில், அவர்களை ஆபத்தில்லா தொழிலில் பணிபுரிய அனுமதித்தால், படிப்பைத் தொடராமல், நடுநிலைப் பள்ளியுடன் நின்றுவிடுவார்கள். இதனால் அறிவான சமுதாயம் உருவாகாது. ஆகவே, வளர் இளம் பருவத்தினர் எனத் தனியாகப் பிரிக்கும்போது அவர்களுக்கான பணிநேரம், பணிசெய்ய அனுமதிக்கப்படும் தொழில்கள், அந்தப் பணிக்கான ஊதியம் ஆகியவற்றையும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது.

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தில் இந்தியா முழுவதிலும் 1.26 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தில் இந்த எண்ணிக்கை 43.5 லட்சமாக குறைந்தது. பத்து ஆண்டுகளில் 50 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் குறைந்திருப்பது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு சட்டத்தால்தான். "அனைவருக்கும் கல்வி' திட்டமும் ஒரு முக்கியக் காரணம்.

இருப்பினும், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முற்றிலுமாக இல்லாத சூழலை உருவாக்குவதும், வளர் இளம் பருவத்தினர் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரும்வகையில், அவர்கள் பணியாற்றக்கூடிய தொழில்களை வரைமுறைப்படுத்துவதும் அவசியம்.

குழந்தைகள் டிவி, சினிமாவில் நடிப்பதை அனுமதிப்பது போலவே, குழந்தைகளை எந்தெந்த விளையாட்டில் ஈடுபடுத்துவது என்பதையும் நெறிப்படுத்த வேண்டும். விளையாட்டு என்ற பெயரில் சாதனை செய்து புகழ் பெறுவதற்காக பெற்றோரே தங்கள் குழந்தைகளை இம்சை செய்யும் சூழல்கள் உள்ளன.

மக்களவையில் இந்த மசோதா மீண்டும் அறிமுகமாகிறபோது, இத்தகைய குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதித்து, அதன் பிறகு நிறைவேற்றுவதே சரியாக இருக்கும்.

Source:Dinamani

Sunday, July 17, 2016

கொந்தளிப்பும் காரணமும்!- KASHMIR ISSUE

கடந்த ஒரு வார காலமாகக் காஷ்மீர் பள்ளத்தாக்கு மிக மோசமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணம் இஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் இளந்தலைவர் பர்ஹான் முசாபர் வானி, ஜம்மு - காஷ்மீர் மாநில போலீஸ் மற்றும் ராணுவத்தின் கூட்டு நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான்.

2010-ஆம் ஆண்டு முதல் இஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் செயல்பட்ட 22 வயதான வானி, கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும் அனைத்து சமூக வலைத்தள செயலிகள் மூலமாகவும் இளைஞர்களுக்குத் தன்னையும் தனது நோக்கத்தையும் தெரிவித்துக் கொண்டிருந்தவர். "போஸ்டர் பாய்' என்று கொண்டாடும் அளவுக்கு அவர் பிரபலம்.

1989-90 கால கட்டங்களில், இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் தூண்டிவிடப்பட்டு, காஷ்மீர் இளைஞர்களை வெறுப்பும் தனிமையும் கவ்வியது. அதே நிலைமைதான் இப்போது பர்ஹான் வானியால் சமூக வலைதளங்களின் மூலம் உருவாக்கப்பட்டது.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பர்ஹான் வானி, ஏனைய பயங்கரவாதத் தலைவர்களைப் போலல்லாமல், சமூக வலைதளங்களின் மூலம் இளம் காஷ்மீரிகளை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தவர் என்பதும், முஸ்லிம் இளைஞர்களை மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்து பயங்கரவாத உணர்வைத் தூண்டிவந்தார் என்பதும் உண்மை. பர்ஹான் வானியின் கனவு இந்தியாவிலிருந்து காஷ்மீரத்துக்கு விடுதலை பெற்றுத் தருவது மட்டுமல்ல. இந்தியாவில் இஸ்லாமியக் கொடி பறக்க வேண்டும் என்பதுதான் அவர் சமூக வலைதளங்களின் மூலம் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்த கருத்து. முந்தைய காஷ்மீர் பயங்கரவாத இயக்கத்தினர் "காஷ்மீரியாட்' என்கிற முழக்கத்தை முன்வைத்துப் போராடினார்கள் என்றால், வானியின் அறைகூவல்கள் "இஸ்லாமியாட்' என்பதாகத்தான் இருந்தது. இதுதான் பல இளைஞர்களைக் கவர்ந்ததன் காரணம். ÷

இவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமான பிறகே, அவரைக் கைது செய்வதற்காக சுற்றி வளைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசியாக, மாநில போலீஸýம் ராணுவமும் நடத்திய கூட்டுத் தாக்குலில் வானி பலியானார். சுட்டுக் கொல்லப்படும் சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, வலைதள விடியோ பதிவேற்றத்தில் வானி உரைநிகழ்த்தி, தங்களை ஆதரிக்காத போலீஸார், ஊடகம், சமூக அமைப்புகள் தாக்குதலுக்கு ஆளாவர் என்று பகிரங்கமாக எச்சரித்தார். அடுத்த நடவடிக்கையாக காஷ்மீர் போலீஸார் பலர் கொல்லப்படும் சம்பவங்கள் நடந்ததால், இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு பயங்ரவாத அமைப்பில் இருந்த வானிக்காக இந்த அளவுக்கு வன்முறை வெடிக்கும் என்றால் அதற்குக் காரணம் அவரது ஆளுமை என்பதைவிட, சமூகவலைதளங்களின் கட்டற்ற அனுமதியும் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தியின் மெத்தனமும்தான். சமூக வலைதளங்களில் ஒரு பயங்கரவாத இயக்கம் தனது கருத்தை தெரிவித்து ஒவ்வொரு நாளும் புதிதாகப் பதிவிடும் செயல்பாட்டை முடக்க மத்திய - மாநில அரசுகள் தவறிவிட்டன. வானி இந்த அளவுக்குப் பிரபலமாவதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும். அப்போதே அவர் கைது செய்யப்பட்டு, அவரது செயல்பாடுகளை முடக்கி இருக்க வேண்டும்.

மாநில அரசு இதில் அக்கறை காட்டவில்லை. மாறாக, 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் மீது கல்லெறிந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான 104 வழக்குகளை காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி திரும்பப் பெற்றார். 634 பேரை வழக்கிலிருந்து விடுவித்தார். இப்போது, அப்படி விடுதலையானவர்களின் தலைமையில் காஷ்மீர் இளைஞர்கள் பலரும் மீண்டும் தெருவில் இறங்கி கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கலவரத்தின் மூலம் காஷ்மீர் போராட்டத்தை அங்குள்ள அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

அமர்நாத் யாத்திரை சென்றுள்ளவர்களை அச்சத்தில் வைத்திருக்கவும், இனி யாரும் அமர்நாத் யாத்திரையை நினைத்தும் பார்க்கக்கூடாது என்பதற்காகவும் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்திக்கொள்ள காஷ்மீர் பயங்ரவாத அமைப்புகள் விரும்புகின்றன. அமர்நாத் யாத்திரையை இந்தியர்கள் மறக்கும்படி செய்துவிட்டால், அவர்களுக்குக் காஷ்மீர் மீதான பிடிப்பு இல்லாமல் போகும் என்கிற எண்ணமே இதற்குக் காரணம்.

காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கு மத்திய அரசைக் காட்டிலும் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு அதிக பொறுப்பு உள்ளது. முந்தைய ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமையிலான ஆட்சியும் சரி, இப்போதைய மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆட்சியும் சரி, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றிக் சற்றும் கவலைப்படாமல், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவதை ஊக்குவிக்காமல் இருப்பதுதான் பயங்கரவாதம் இந்த அளவுக்கு உயிர்த்தெழுந்திருப்பதற்குக் காரணம்.

பர்ஹான் வானியின் மரணமும் அதைத் தொடர்ந்து காஷ்மீரத்தில் வெடித்திருக்கும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமும் உண்மை. அதே நேரத்தில், பாதுகாப்புப் படைகள் வானியைச் சுட்டுக்கொன்றது தவறு என்றும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது தவறு என்றும் கூறுவது தவறு. பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாத வன்முறைக் கும்பல், அரசு அலுவலகங்களையும், பொதுச் சொத்துகளையும் சூறையாடுவதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று சொல்வது அபத்தம்.

Saturday, July 16, 2016

சவாலை எதிர்கொள்ளும் பிரிட்டன்!


ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது என்கிற கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளிவந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், நான் நீ என்று பிரதமர் பதவிக்குப் போட்டி நிலவாமல், நான் இல்லை, நான் இல்லை என்று பலரும் களத்திலிருந்து விலகிய அசாதாரண சூழல் ஏற்பட்டது என்பதுதான்.

பிரதமர் பதவி என்பது, பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளராக இருக்கும் தெரஸா மேயின் மடியில் வந்து தானாகவே விழுந்தது என்பதுதான் உண்மை. போட்டியில் இருப்பவர்கள் என்று கருதப்பட்ட அனைவரும் போட்டியிலிருந்து விலகி, அவர் தேர்ந்தெடுக்கப்படும் தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டனர்.

26 ஆண்டு இடைவெளியில் மார்கரெட் தாட்சருக்குப் பிறகு, தெரஸா பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவி ஏற்று இருக்கிறார். கருத்து வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திய போரிஸ் ஜான்ஸன் பிரதமராவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்குவதற்கு முன்பே, தான் போட்டியில் இல்லை என்று அறிவித்து விட்டார். இன்னொரு "பிரெக்ஸிட்' ஆதரவாளரான மைக்கேல் கோவ், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டார். விளைவு, தெரஸா மே பிரதமராக வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

நீண்ட நாள் அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறமையும் கொண்ட தெரஸா மேயின் செயல்பாடுகளும், கொள்கை முடிவுகளும் பலராலும் அவரை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருடன் ஒப்பிட வைக்கின்றன. அவர் உள்துறை செயலராக இருந்த ஆறு ஆண்டுகள் மிகவும் சிறப்பானவை. அந்த காலகட்டத்தில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்புகள், எல்லைப் பிரச்னைகள், காவல் துறை சீரமைப்பு போன்றவை பரவலான பாராட்டைப் பெற்றன. வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறுவது குறித்த அவரது கடுமையான நிலைப்பாடு ஒருபுறம் இருந்தாலும், கருத்து வாக்கெடுப்பு நடந்தபோது, பிரதமர் கேமரூனைப் போலவே, தெரஸா மேயும் பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்கிற கருத்தை வற்புறுத்தினார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை பிரிட்டன் அனுமதிக்கக் கூடாது என்கிற கருத்துடைய தெரஸா மே உள்துறைச் செயலாளராக இருந்தபோது, ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் வெளிநாட்டவரை அனுமதிக்கக் கூடாது என்கிற வரம்பை நிர்ணயிக்க முற்பட்டார் என்றாலும், பிறகு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பிரிட்டனின் நுழைவு அனுமதி (விசா) கேட்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் 3,000 பவுண்டு வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் என்றும், தங்களது கல்விக் கடனை அடைப்பதற்கு மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகும் தங்கி இருந்து வேலை பார்க்க அனுமதி கிடையாது என்றும்கூட உத்தரவு பிறப்பிக்க இருந்தார் என்பதை மறந்து விட முடியாது.

ஒருபுறம், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்றும், இன்னொரு புறம் பிற நாட்டவர் பிரிட்டனில் குடியேறுவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தவர் தெரஸா மே என்பதால்தான் "பிரெக்ஸிட்' ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரு சேர இவருக்கு ஆதரவாக இருந்தனர். தாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற சூழலில், பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடருமா என்று பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், "பிரெக்ஸிட் பிரெக்ஸிட்தான்' என்பது. அதேநேரத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்த தெரஸா மே தொடர்ந்து கூட்டமைப்புடன் ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பும் நல்லுறவும் தொடர முயற்சி மேற்கொள்ள கூடும்.

இனிமேல்தான் பிரிட்டன், எப்படி அதிக பாதிப்பு இல்லாமலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடனான நட்புறவு பலவீனப்படாமலும், அடுத்த கட்டத்திற்கு நகரப் போகிறது என்பது தெரிய வரும். ஐரோப்பிய கூட்டமைப்புடனான பிரிட்டனின் நாற்பதாண்டு உறவைத் துண்டித்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. இது பிரிட்டனின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக் கூடும். அப்படி பாதிக்குமானால், இப்போது வெளிநாட்டினரின் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சாமானிய பிரிட்டிஷ் குடிமக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாவார்கள். அதைப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் தெரஸா மே எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியபோது, பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எதிர்கொண்டது போன்ற மிகப்பெரிய சவால்கள், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தெரஸா மேயையும் எதிர்கொள்கிறது. "பிரெக்ஸிட்' தீர்ப்பால் பிளவுபட்டுக் கிடக்கும் பிரிட்டனை ஒற்றுமைப்படுத்தும் பணி மிகப்பெரிய சவால். அதைவிடப் பெரிய சவால் பொருளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும்.

கன்சர்வேடிவ் கட்சி ஒற்றுமையாக இருக்குமா, அவரது தலைமையை ஒருமனதாக ஏற்று நடக்குமா என்பதைப் பொருத்துத்தான், தெரஸா மேயின் எதிர்காலமும், பிரிட்டனின் வருங்காலமும் அமையும்!

SOURCE:DINAMANI