Sunday, August 14, 2016

உயிர் காக்கும் உறுப்பு தானம்!-ORGAN DONATION

உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு ஸ்பெயின்

ஒரு வருடத்தில் நம் நாட்டில் மாற்று உறுப்பு கிடைக் காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வருடத்துக்குச் சுமார் 5 லட்சம் பேர் என்கிறது சமீபத்திய ஆய்வு. வருஷத்துக்குக் கல்லீரல் கிடைக்காமல் இறப்பவர்கள் 2 லட்சம் பேர். இதயம் கிடைக் காமல் இறப்பவர்கள் 50 ஆயிரம் பேர். இது தவிர, உறுப்பு கள் முழுச் செயல்பாட்டில் இல்லாமல் போராடுபவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். கார்னியா கிடைக்காமல் 10 லட்சம் பேர் பார்வை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வருடத்துக்கு 5 லட்சம் பேருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 5,000 ஆயிரம் மட்டுமே. கல்லீரல் 500 பேருக்குக்கூடக் கிடைக்கவில்லை. உறுப்பு தானத்தின் அவசியத்தை உணர்ந்து 1994-ம் ஆண்டிலேயே இதற்கெனத் தனிச் சட்டம் இயற்றி, உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது மத்திய அரசு. என்றாலும், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நம் மக்களுக்கு எட்டவில்லை.

ஒரு தனியார் செய்தி நிறுவனம், உறுப்பு தானம் குறித்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ள மூன்று விஷயங்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. முதலாவது, அநேகம் பேர் உடல் தானத்தையும் உறுப்பு தானத்தையும் குழப்பிக்கொள்கின்றனர். இரண்டாவது, கண் மற்றும் சிறுநீரகத்தைத் தானமாகத் தரலாம் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கிறது. உடலின் பல உறுப்புகளைத் தர முடியும் என்பது தெரியவில்லை. மூன்றாவது, உறுப்பு தானத்தை யார், எங்கு, எப்படிச் செய்வது என்பது முக்கால்வாசிப் பேருக்குத் தெரியவில்லை.

எது உறுப்பு தானம்?

ஒருவர் இயற்கையாக இறந்த பிறகு, அவரது முழு உடலையும் மருத்துவ மாணவர்களின் கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் கொடுப்பது உடல் தானம். இவர்களின் கண்களை மட்டும் 6 மணி நேரத்துக்குள் எடுத்து, மற்றவர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாறாக, மூளைச் சாவு ஏற்பட்டவரின் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து, மற்றவர்களுக்குப் பயன்படுத்துவது உறுப்பு தானம். இதயம், கண், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கணையம், குடல், தோல், எலும்பு, இதய வால்வு, ரத்தக் குழாய் என ஒருவரே பல உறுப்புகளைத் தானமாகத் தரலாம். ஒருவர் செய்யும் உறுப்பு தானத்தால், ஒரே நேரத்தில் 14 பேர் பலன் அடைகின்றனர். உயிரோடு இருக்கும்போது சிறுநீரகம், எலும்பு மற்றும் கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாகத் தரலாம்.

உறுப்பு தானத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் இருக்கவும் தமிழக அரசின் உறுப்பு தானத் திட்டம் 2008-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச் சாவு ஏற்பட்டால், உடனே உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள். இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்று, மூளைச் சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி, அவர்களின் சம்மதம் கிடைத்ததும் அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகள், மருத்துவமனை மூலமாக ஏற்கெனவே, இந்தத் திட்டத்தினரிடம் ரூ.1,000 கட்டணம் செலுத்திப் பதிவு செய்திருப்பார்கள். பதிவுசெய்து காத்திருப் பவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் உடல் உறுப்புகள் வழங்கப்படும். பொதுவாக, இதயத்தை 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள்ளும், கல்லீரலை 8 மணி நேரத்துக்குள்ளும் பொருத்திவிட வேண்டும். சிறுநீரகத்தைச் சரியான முறையில் பதப்படுத்திக்கொண்டால் 12 மணி நேரத்துக்குத் தாங்கும். உறுப்புகளை எடுப்பதைவிட முக்கிய மானது, எடுத்த உறுப்பைச் சரியான நேரத்துக்குள் அடுத்தவருக்குப் பொருத்துவது.

உறுப்பு தான அட்டை

உறுப்பு தானம் செய்ய வயது தடையில்லை. எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி, சி நோயாளிகள் உறுப்பு தானம் செய்ய முடியாது. உறுப்பு தானம் செய்ய விரும்புவோர் ‘டோனர் கார்ட்’ எனும் அடை யாள அட்டையைத் தமிழக அரசு இதற்கென்றே அமைத்துள்ள இணையதளத்திலிருந்து (www.tnos.org) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அட்டையில் பெயர், ரத்த வகை, எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக் கும். இதை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் உறுப்பு தானம் செய்ய விரும்புவதை அவர் வீட்டிலும் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் உறுப்பு கேட்டு வரும்போது உறவினரின் சம்மதம் கிடைப்பதில் சிரமம் இருக்காது. உறுப்பைப் பெறுவதில் ஏற்படும் தாமதத்தையும் தவிர்க்கலாம்.

ஏன் அவசியம்? தடைகள் என்னென்ன?

உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயினில் ஒரு லட்சம் பேரில் 400 பேரும், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 8 பேரும் மட்டுமே உறுப்பு தானம் செய்யத் தயாராக இருக்கின்றனர். தமிழகத்தில் 13 பேர். என்ன காரணம்? ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியல் கலாச்சாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில மூடநம்பிக்கைகள்தான் முக்கியத் தடைகள். உறுப்பு தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டால், மருத்துவமனைகளில் வேண்டும் என்றே சரியான சிகிச்சை கொடுக்காமல் இறப்புக்கு வழி செய்துவிடுவார்களோ என்ற பயமும் பலரைத் தடுக்கிறது. இந்த இரண்டையும் நாம் கடந்து வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

என்ன செய்ய வேண்டும்?

தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பிடும்போது 5% கூட அரசு மருத்துவமனைகளில் நடப்பதில்லை. உறுப்பு தான மாற்றுச் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தச் சிகிச்சைக்குப் பெறப்படும் உறுப்புகளுக்கு இவர்கள் பணம் பெறுவதில்லை. ஆனால், அதற்கான சிகிச்சைக் கட்டணங்கள் சில லட்சங்களுக்குக் குறையாது. இதனால், வசதி படைத்தவர்கள் மட்டுமே பயனடைகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு உறுப்புகள் கிடைப்பதில்லை. இந்தக் குறைகளைச் சரிசெய்யும் விதமாக இந்த மையங்களை அமைப்பதற்கு அரசு ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். இப்போது உறுப்பு தான அறுவை சிகிச்சை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும் மட்டுமே செய்யப்படுகிறது.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் அனைத்திலும் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை. அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் உறுப்புகளைத் தானமாகப் பெற்று, அவற்றை முறைப்படி பாதுகாத்து வைப்பதற்கு உண் டான வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.

உறுப்பு தானம் தொடர்பான கருத்துகளைப் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி சமூகத்தின் எல்லா மூலைகளுக்கும் அரசு எடுத்துச் செல்ல வேண்டும். சமூக வலைதளங்களை இதற்கு முக்கியமான கருவியாகப் பயன்படுத்தலாம். மேலை நாடுகளில் 18 வயது நிரம்பியதும் ஓட்டுநர் உரிமம் தரும்போது, அதில் உறுப்பு தானம் செய்ய விருப்பமா எனக் கேட்டு, குறித்துக் கொடுத்துவிடுகின்றனர். இதை நாமும் பின்பற்றலாம்.

உறுப்பு தானம் செய்பவர்களை உற்சாகப்படுத்த, சமூகத்துக்கு அவர்களுடைய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இஸ்ரேல் நாட்டில் உறுப்பு தானம் செய்பவரின் குடும்பத்தினருக்கு ஊதியத்தில் ஊக்கத்தொகை அளிக்கின்றனர். இன்னும் சில மேலை நாடுகளில் அவரின் குடும்பத்தினருக்கு மருத்துவச் சிகிச்சைகள் இலவசம். இப்படி அவரின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும் சலுகையும் அவர்களைத் தனித்துக் காட்டும். இது மேலும் பலரை ஈர்க்கும். பல உயிர்களைக் காக்கும்!

SOURCE:TAMIL HINDU

சவால்களை எதிர்கொள்ளும் பிரசண்டா!-NEW PRIME MINISTER AND NEW HOPE IN NEPAL

நேபாளத்தில் முன்னணி மாவோயிஸ்ட் தலைவரான "பிரசண்டா' என்று அழைக்கப்படும் புஷ்ப கமல் தாஹால் கடந்த புதன்கிழமையன்று மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிறார். நேபாளப் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஓலி பதவி விலகியதால் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

1996 முதல் 2006 வரையிலான மாவோயிஸ்ட் கலவரங்களின் விளைவாக 240 ஆண்டு பழமையான மன்னராட்சி நேபாளத்தில் முடிவுக்கு வந்தது. அது ஆரோக்கியமான மக்களாட்சி முறைக்கு வழிகோலும் என்கிற எதிர்பார்ப்பு ஏனோ நிறைவேறவில்லை. கடந்த 26 ஆண்டுகளில் 24 பிரதமர்களை நேபாளம் சந்தித்திருக்கிறது. ஆனால், இன்னும்கூட நிலையான ஆட்சியை யாராலும் அமைக்க முடியாத நிலைதான் தொடர்கிறது.

அரசமைப்புச் சட்டம் வடிவமைத்து அறிவிப்பதற்குப் பல தடவை நாள் குறித்தும்கூட அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. பல கெடுக்களுக்குப் பிறகு அரசமைப்புச் சட்டம் உருவானபோது, அது நேபாளத்தின் மதேசிகளின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையவில்லை. அவர்கள் தங்களுக்குப் போதுமான இடங்களை அரசின் எல்லா மட்டங்களிலும் உறுதிப்படுத்தக் கோரி போராட்டத்தில் இறங்கினர். நேபாளத்தில் கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்தக் கோரினர்.

கே.பி. சர்மா ஓலியின் பதவி விலகல் எதிர்பார்த்த ஒன்றுதான். பிரதமராவதற்காக அவர் அளித்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்ட பிறகும் அவரை ஆதரித்த மாவோயிஸ்டுகளும் ஏனைய கூட்டணிக் கட்சிகளும் அவரைத் தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவர் எதிர்பார்க்க முடியாது. மலைவாழ் குடிமக்களுக்கும், இந்திய எல்லையை ஒட்டிய சமவெளிப் பிரதேசங்களில் வாழும் மதேசிகள் என்று அழைக்கப்படும் மக்களுக்கும் இடையே ஓலியின் ஆட்சியில் மிகப்பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டு விட்டது. மதேசிகளின் போராட்டத்தை அவர் கையாண்ட விதம்தான் அவரது வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி, தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பது மதேசிகளின் கோரிக்கை. அதை ஓலி அரசு பொருள்படுத்தவில்லை என்பதால்தான் மதேசிகள் இந்திய - நேபாள எல்லையை முடக்கி, எந்தப் பொருளும் ஏனைய நேபாளப் பகுதிகளுக்குக் கிடைக்காமல் செய்தனர். அவர்களது ஐந்து மாத பொருளாதாரத் தடையை, பேச்சுவார்த்தைக்கு அழைத்து முடிவுக்குக் கொண்டுவராமல், மதேசிகள் இந்திய அரசால் தூண்டிவிடப்படுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முற்பட்டார் முன்னாள் பிரதமர் ஓலி.

அனைவரையும் அரவணைத்துச் செல்ல ஓலி முயலவில்லை என்பது மட்டுமே அவரது வீழ்ச்சிக்குக் காரணமல்ல. நேபாளத்தையே முடக்கிப்போட்ட பூகம்பத்திற்குப் பிறகு நிவாரண வேலைகளை முடுக்கிவிட்டு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் அவரது அரசு மெத்தனமாகச் செயல்பட்டதும் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு வீழ்ச்சியடைய இன்னொரு காரணம்.

இரண்டாவது முறையாக நேபாளத்தில் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் சென்டர் கட்சியின் தலைவர் பிரசண்டா மூன்று முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இந்த மூன்று பிரச்னைகள்தான் ஓலியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன என்பதால், உடனடியாக பிரதமர் பிரசண்டா அவற்றில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

முதலாவதாக, மதேசிகளின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான தீர்வு கண்டாக வேண்டும். அவர்களுக்கு முறையான அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்களும், அங்கீகாரங்களும், ஆட்சி அமைப்பில் எண்ணிக்கைக்கேற்ற பங்களிப்பும் தரப்பட்டாக வேண்டும். இரண்டாவதாக, நிர்வாக இயந்திரத்தை முடுக்கிவிட்டு ஏப்ரல் 2015-இல் நேபாளத்தை சீர்குலைத்த பூகம்பத்தின் பாதிப்புகளை சரிசெய்தாக வேண்டும். மூன்றாவதாக, ஓலியின் ஆட்சியில் ஏறத்தாழ சிதைந்து போயிருக்கும் இந்திய - நேபாள நட்புறவை மீண்டும் வலுப்படுத்திப் பழைய நிலைமை ஏற்படச் செய்ய வேண்டும்.

நேபாள மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கை பலத்தில் இருக்கும் மதேசிகளைப் புறக்கணித்துவிட்டு, நிலையான ஆட்சியை அமைத்துவிட முடியாது. இந்திய எல்லையை ஒட்டிய சமவெளிப் பிரதேசத்தில் வாழ்கிறார்கள் என்பதாலும், அவர்களுக்கும் இந்தியாவில் வாழும் மக்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாலும், அவர்கள் நேபாள தேசத்தவர்கள் அல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. இந்தப் பிரச்னையை புதிய பிரதமர் எந்த அளவு சாமர்த்தியமாகக் கையாள்கிறார் என்பதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.

இந்தியாவையும், சீனாவையும் எப்படி அவர் நட்புறவுடன் வைத்துக்கொள்ளப் போகிறார் என்பது அடுத்த பெரிய சவால். ஓலி செய்ததுபோல, வெளிப்படையாகச் சீனாவைக் காட்டி இந்தியாவை பயமுறுத்தும் அணுகுமுறையை பிரதமர் பிரசண்டா கடைப்பிடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கலாம். கொள்கை ரீதியாக பிரசண்டா சீனாவுடன் நெருக்கமானவராக இருந்தாலும், இந்தியாவில் படித்து, இந்தியக் கலாசாரச் சூழலில் வாழ்ந்த பிரசண்டாவுக்கு பூகோள, சரித்திர ரீதியாக நேபாளத்துக்கும் இந்தியாவுக்குமிடையேயான நட்பும் உறவும் எத்தகையது என்பது நன்றாகவே தெரியும்.

கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகள் அவருக்கு நல்ல பாடமாக அமைந்திருக்கும் என்று நம்பலாம். எந்தவொரு முடிவும் நல்லதொரு தொடக்கத்துக்குக் காரணமாக அமையக்கூடும். பிரசண்டாவின் ஆட்சியில் தவறுகள் திருத்தப்பட்டு, நேபாளத்தில் புதியதொரு சரித்திரம் படைக்கப்படும் என்று எதிர்பார்ப்போமாக!

SOURCE:DINAMANI

தனியார்மயத்தை தவிர்க்க முடியாது!-PRIVATISATION OF PSU'S

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நீதி ஆயோக், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 74 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாகப் பட்டியலிட்டுள்ளது. இதில் எட்டு நிறுவனங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பரிந்துரை செய்துள்ளது.

இது பரிந்துரை மட்டுமே. இதேபோன்ற பரிந்துரைகள் முந்தைய அரசுகளுக்கும் அப்போது அமைக்கப்பட்ட குழுக்களால் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் எவற்றையெல்லாம் மீட்டெடுத்து லாபத்தில் இயக்க முடியும், எவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் சீர் செய்ய முடியும், எவை சரிசெய்ய வாய்ப்பில்லாத நிலையில் மூடப்பட வேண்டும் என்று பட்டியல் அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.

இத்தகைய பரிந்துரைப் பட்டியல் வெளியானவுடன் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக அறிக்கைவிடுவதோடு, ஆலையை மூடக்கூடாது, தனியாருக்குப் பங்குகளை விற்கக்கூடாது என்று அந்த நிறுவன ஊழியர்களின் குடும்பத்தோடு சேர்ந்து அறவழிப் போராட்டங்களையும் நடத்தும். இத்தகைய அழுத்தம் காரணமாக அரசும் தனது முடிவைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வரும்.

தற்போதும் நீதி ஆயோக் பரிந்துரையை மத்திய அமைச்சரவை பரிசீலித்து எடுக்கும் நடவடிக்கைக்குப் பிறகுதான், இந்த பரிந்துரைகளில் எத்தனை ஏற்கப்படும், எத்தனை நிறுவனங்கள் மூடப்படப் போகின்றன என்பதெல்லாம் தெரியும். பட்டியல் வெளியானவுடன் அறிக்கைகளும் வெளிவரத் தொடங்குவது எதிர்பாராதது அல்ல.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க முடியும்; ஆனால், உதகை இந்துஸ்தான் போட்டோ நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை; சேலம் தேனிரும்பு ஆலையைப் பொருத்தவரை தனியாருக்குப் பங்குகளை விற்று, அவர்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு, தேனிரும்பு ஆலையையும்கூட தனியாருக்கு விற்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவும் கடந்த பல ஆண்டுகளாகவே பரிசீலனையில் உள்ள யோசனைதான்.

இப்போது, சேலம் தேனிரும்பு ஆலையை மூடக்கூடாது என்கின்ற அறிக்கைப் போரில் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க. என எல்லா கட்சிகளும் அறிக்கை வெளியிட்டாகிவிட்டது. அனைவருமே சேலம் தேனிரும்பு ஆலையை தனியாருக்குத் தாரை வார்க்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

1970-ஆம் ஆண்டு 2,000 தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட, சேலம் தேனிரும்பு ஆலை கடந்த ஆறு ஆண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 2011-12இல் ரூ.100 கோடியாக இருந்த நஷ்டம், 2015-16இல் ரூ.349 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தனைக்கும் சேலம் தேனிரும்புக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், வரவேற்புக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஊழல், அதிக பணியாளர்கள் என நஷ்டத்துக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனவே தனியாருக்கு 51% பங்குகளை விற்று, ஆலையை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவது என்று சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக அது கைவிடப்பட்டது. "புலி வரு

கிறது புலி' என்பதுபோல் அல்லாமல் இந்த முறை நிஜமாகவே தனியாருக்கு பங்குகள் விற்கப்படக்கூடும் என்று கருத வாய்ப்புள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அரசு ரூ.56,500 கோடியை திரட்டும் என்று நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார். ஆகவே, தொடர்ந்து பெருநஷ்டம் காட்டும் நிறுவனங்களை மூடுவதும், பங்குகளை விற்பதும் தவிர்க்க

வியலாதது என்றுதான் தோன்றுகிறது. இந்த முறை அரசியல் அழுத்தம் பலன் அளிப்பது அரிதினும் அரிது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே இந்த நிலை என்றில்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பலவும்கூட நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி கண்டித்து வருகிறது பொதுக்கணக்குத் தணிக்கைக் குழு (சி.ஏ.ஜி.). இதில் எந்த மாநிலமும் விலக்கல்ல.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சி.ஏ.ஜி. அறிக்கை 2015-இன்படி, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 63 நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.70,673 கோடி; நஷ்டம் ரூ.38,233 கோடி. இதில் மிக அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்துவது மின் உற்பத்தி வாரியம்தான். இலவச மின்சாரம் மற்றும் சலுகை கட்டணம் அனைத்துக்கும் அரசு ஈட்டுத்தொகை செலுத்திய பிறகும் ரூ.13,321 கோடி நஷ்டம். முழுக்க முழுக்க அதிகாரிகள், தொழிலாளர்கள் சார்ந்த நிர்வாக குறைபாடுதான் இதற்குக் காரணம்.

அதேபோன்று, இரண்டாவதாக அதிக நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனம் போக்குவரத்துக் கழகங்கள். ரூ.856 கோடி நஷ்டம். ஒரே வழித்தடத்தில் ஓடும் தனியார் பேருந்துகள் பெருலாபம் சம்பாதிக்கும்போது, அரசுப் பேருந்துகள் மட்டும் நஷ்டத்தில் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான். தவறு எங்கே இருக்கிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை

பொதுத்துறை நிறுவன ஊழியர்களை நிறுவனத்தில் குறிப்பிட்ட விழுக்காடு முதலீட்டுக்கு பங்குதாரர்களாக மாற்றிவிடுவதும், ஊதியத்தை செயல்திறன் சார்ந்ததாக மாற்றுவதும்தான் இதற்குத் தீர்வாக இருக்கும். மக்கள் வரிப்பணத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்தப்படுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது!

SOURCE:DINAMANI

இனியும் தகாது தாமதம்!-Pending cases


உயர் நீதிமன்றங்களில் தற்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், காலியாகவுள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் 43 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு விசாரணையின் போது சுட்டிக் காட்டியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக் குழு (கொலீஜியம்) 75 பேர் கொண்ட பட்டியலை அளித்துப் பல மாதங்களாகியும் மத்திய அரசு அதற்கான உத்தரவை இன்னும் பிறப்பிக்காதது குறித்து இந்த அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2015, மார்ச் நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 61,300 வழக்குகளும், 24 உயர் நீதிமன்றங்களில் சுமார் 44.5 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் ஏறத்தாழ 2.6 கோடி வழக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன. வழக்குகளை விரைவாக விசாரித்து, தீர்ப்புகளை தாமதமின்றி வழங்க "லோக் அதாலத்' உள்ளிட்ட வழிமுறைகளை அவ்வப்போது உச்ச நீதிமன்றம் அறிவித்த போதிலும், வழக்குகளின் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைக்க முடியவில்லை

இந்த நிலையில், எந்த விஷயமானாலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போக்கு வழக்கு நடத்துபவர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், நிலுவையில் உள்ள வழக்கு

களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அரசியல் சட்ட விவகாரங்கள் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்த வேண்டிய உச்ச நீதிமன்றம் அதன் தனித்தன்மையை இழந்து வருவதாக நீதிபதிகள் அனில் தவே, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரைக் கொண்ட அமர்வு அண்மையில் ஒரு வழக்கு விசாரணையின் போது கவலை தெரிவித்தது.

உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து செல்வாக்குமிக்க தனிநபர்களும், பணபலமிக்க நிறுவனங்களும் உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேசிய, பொது முக்கியத்துவம் இல்லாத இதுபோன்ற மேல்முறையீடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதுதொடர்பான அறிக்கையை ஓராண்டுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்ட ஆணையத்துக்கு இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதித் துறை சீரமைப்பு தொடர்பாகச் சட்ட ஆணையம் ஏற்கெனவே தெரிவித்துள்ள பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்த ஆண்டு, நவம்பர் மாதம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தவே, கோயல் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 31-ஆக உயர்ந்துள்ள போதிலும், பொது முக்கியத்துவம் இல்லாத, வழக்கமான மேல் முறையீட்டு மனுக்களை விசாரிப்பதிலேயே அவர்களது நேரம் விரயமாகிறது. இதனால், அரசியல் சட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.

"உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்ற நடைமுறையை வழக்கு நடத்துபவர்கள் கடைபிடிப்பதில்லை. விதி

விலக்காக, ஒரு சில விவகாரங்களில் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கலாம் என்பதுதான் வழக்கம். ஆனால், இந்த விதிவிலக்கே இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இதனால், உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் கடந்த 2014-ஆம் ஆண்டு பேசியதையும் நீதிபதிகள் தவே, கோயல் ஆகியோர் தங்களது உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளனர். இதையும் சட்ட ஆணையமும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு, இதுவிஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு எதற்கெடுத்தாலும் மேல்முறையீடு செய்வது மட்டுமல்லாது, பல்வேறு நடுவர் மன்றங்களின் (டிரிபியூனல்) தீர்ப்புகளுக்கு எதிராக நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்ற சட்டப்பூர்வ அனுமதியும் காரணமாக உள்ளது. உதாரணமாக, மின்சார சட்டம் 2003, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்தச் சட்டம் 2000 ஆகியவை நடுவர் மன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்கின்றன. இதுபோன்ற சட்டங்கள் குறித்தும் சட்ட ஆணையம் முழுமையாக ஆராய்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதைக் குறைக்க வழிவகை காண வேண்டும்.

தில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வையும், சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களின் தலைநகரங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகளையும் அமைக்கலாம் என சட்ட ஆணையம் ஏற்கெனவே தனது 229-ஆவது அறிக்கையில் யோசனை தெரிவித்துள்ளது. இந்த யோசனையையும் கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தனித் தன்மை, முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேல்முறையீட்டுக்காக தில்லி வரை செல்ல வேண்டிய சிரமத்தைப் போக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SOURCE:DINAMANI