Friday, November 10, 2017

பொருளாதார மீட்சிக்கு புதிய உத்தி உதவுமா?



மந்த நிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு இருமுனை உத்தியை வகுத்திருக்கிறது. அரசுத் துறை வங்கிகளுக்குப் பெருமளவுக்கு முதலீட்டை வழங்கும் உத்தியுடன், மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது. இவ்விரண்டும் அடித்தளக் கட்டமைப்புகளுக்கான செலவை அதிகப்படுத்தி வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், வங்கித் துறையின் வாராக்கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு ஏன் மூன்று ஆண்டுகள் காத்திருந்தது என்பது விளங்கவில்லை.

83,677 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.7 லட்சம் கோடியைச் செலவிட மத்திய அரசு திட்டமிடப்பட்டிருக் கிறது. இந்தச் சாலை நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எல்லைப்புறங்கள், பழங்குடிகள் – மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள், இதுவரை சாலைப் போக்குவரத்துடன் இணைக்கப்படாத தொலைதூரப் பகுதிகளில் அமையவிருக்கிறது. 2022 மார்ச் வரையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும். ‘பாரத் மாலா பரியோஜனா’ என்ற இந்தத் திட்டம் மூலம், நேரடியாக 14.2 கோடி மனிதஉழைப்பு நாட்கள் உருவாக்கப்படும். இந்த திட்டம் உத்தேசிக்கப்பட்டபடி, கடலோரப் பகுதிகளையும் தேசிய நெடுஞ்சாலைகளையும், 550 மாவட்டங்களையும் இணைத் தால் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும். அதன் பலன்களை இவ்வளவென்று ரூபாயில் அளந்து சொல்ல முடியாவிட்டாலும், ஜிடிபிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்யும் என்கிறார் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.

பாரத்மாலா திட்டத்துக்கு மொத்தம் ரூ.5.35 லட்சம் கோடி தேவை. அதில் ரூ.2.09 லட்சம் கோடி சந்தையில் கடன்கள் மூலம் திரட்டப்படும். ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் தனியார் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அடித்தளக் கட்டமைப்புப் பணிகளை ஒப்பந்த முறையில் செய்யத் தொடங்கி, தொடர முடியாமல் திணறிவரும் தனியார் நிறுவனங்கள் புதிய சாலைத் திட்டத்தில் இறங்க அரசிடமிருந்து தெளிவான வழிகாட்டலைப் பெற விரும்பும். அரசும் தனியாரும் இணைந்து மேற்கொள்ளும் பொது திட்டங்களுக்கு (பிபிபி) எப்படிப் புத்துயிர் ஊட்டலாம் என்று பரிந்துரைக்க முன்னாள் நிதித்துறைச் செயலர் விஜய் கேல்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கிடப்பில் உள்ள அந்தப் பரிந்துரைகளை தூசுதட்டி எடுத்து அமல்படுத்த வேண்டும்.

அரசு – தனியார் இணைந்து செயல்படுத்த வேண்டிய பிபிபி திட்டங்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டிலேயே ரூ.500 கோடி ஒதுக்கியிருந்தும் அது பயன்படுத்தப்படவில்லை. பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தனியார்கள் ஓடிவிட்டனர். அரசு இதற்காக ஏற்படுத்த உத்தேசித்த நிறுவனம் இன்னமும் உருவாகவில்லை. தொழில் திட்டங் களுக்காக நிலங்களைக் கையகப்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாண்டில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்குப் பெருமளவில் எதிர்ப்பு எழுந்த தால் அதுவும் கைவிடப்பட்டுவிட்டது. அடித்தளக் கட்டமைப்பு திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்றால் இவ்விரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும்.


Source:Tamil Hindu

Saturday, October 28, 2017

காஷ்மீர் அமைதி முயற்சிக்கு அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம்!



ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப, மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. காஷ்மீர் முதல்வராக இருந்த முஃப்தி முகம்மது சய்யீத் 2016 ஜனவரியில் மரணம் அடைந்தது முதல் மாநிலம் அமைதியின்றிக் காணப்படுகிறது. பிரிவினை கோருபவர்களுடன் பேச முடியாது என்று இதுநாள் வரை கூறிவந்த மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இப்போதாவது மாற்றிக்கொண்டிருப்பது நல்ல விஷயம்.

காஷ்மீரில் அமைதி ஏற்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னதாக ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பிடிபி) வாக்குறுதி அளித்திருந்தது. வாக்குறுதியை நிறைவேற்ற என்னென்ன முயற்சிகளை காஷ்மீர் அரசு எடுக்கும் என்று பார்க்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் நடப்பதை உறுதி செய்வது முதல்வர் மெஹ்பூபா முஃப்திக்குப் பெரும் சவால்.

அத்துடன், சம்பந்தப்பட்ட எல்லா தரப்புடனும் பேச எந்த அளவுக்கு தினேஷ்வர் சர்மாவுக்கு சுதந்திரம் தரப்படவிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பிரிவினைவாதிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சமீபத்தில் நடத்தியுள்ள திடீர் சோதனைகள், பேச்சுவார்த்தைகளில் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் பங்கேற்பைக்கூட பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. மக்களிடையே செல்வாக்கு கொண்ட ஹுரியத்தின் கருத்துக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை அரசு உணர்ந்துகொள்வது அவசியம்.

மெஹ்பூபா முஃப்தி 2016 ஏப்ரலில் முதல்வராகப் பதவியேற்றார். மத்திய அரசை எதிர்க்கும் வகையில் பிரிவினை ஆதரவாளர்கள் ஸ்ரீநகர் வீதிகளில் காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள்; பதிலடியாகப் பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை நிரப்பிய துப்பாக்கிகளால் சுட்டனர். அவ்விரு நிகழ்வுகளுக்கு முன்னதாகவே சமரசத் தூதர் வந்து பேச்சைத் தொடங்கியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகப் போயிருக்காது. புர்ஹான் வானி போன்றோர் கொல்லப்பட்ட போது மக்களிடையே அவர்கள் மீது அனுதாபமும் மத்திய அரசு மீது கோபமும் கொப்பளித்தன. இந்நிலையில், தினேஷ்வர் சர்மா, காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் செல்வது மிக மிகத் தாமதமான பயணம் என்றே கூற வேண்டும்.

எல்லைக்கு அப்பாலிருந்து பீரங்கிகளால் சுடப்படுவது அதிகரித்ததால் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்தது. காஷ்மீர் மாநிலப் போலீஸார் மீது எல்லைக்கு அப்பாலிருந்த தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் தொடுத்தனர். இந்த நிகழ்வுகளால் காஷ்மீரில் அமைதி குலைந்தது. 2013-க்குப் பிறகு புதிய தலைமுறை இளைஞர்கள் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தனர். அவர்களுடைய எண்ணிக்கை குறைந்தபட்சம் 200 ஆக இருக்கும் என்கின்றன பாதுகாப்புப் படை வட்டாரங்கள். இந்நிலையில், மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் தினேஷ்வர் சர்மா எல்லாத் தரப்பினருடனும் பேச அனுமதிக்கப்பட வேண்டும். காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கு அது இன்றியமையாத விஷயமாகும்!

Source:The Hindu Tamil














Tuesday, October 24, 2017

ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்


பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளதாக, ஐ.நாவிற்கான வங்கதேச பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ரக்கைன் மாநிலத்தில் உள்ள ரோஹஞ்சாக்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதாக குறிப்பிட்ட ஷமீம் அஹ்சன், `தினமும் ஆயிரக்கணக்கானோர் நாட்டினுள் வருகிறார்கள்` என்றார்.

ஆகஸ்டு மாதம், ரக்கைன் போராளிகள், மியான்மர் காவல் சாவடி மீது தாக்குதல் நடத்தியது முதல் இதுவரை ஆறு லட்சம் பேர் வங்கதேசத்திற்கு தப்பி வந்துள்ளனர்.

அஹ்சன், ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பேசினார்.

இதுவரை 340 மில்லியன் டாலர்கள் சேர்ந்துள்ள நிலையில், 434மில்லியன் டாலர்கள் பணம் சேர்ந்தால், பத்து லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை உதவ முடியும் என்கிறது ஐ.நா அமைப்பு.

குடிநீர், வசிப்பிடம் மற்றும் உணவிற்கு பஞ்சமுள்ளதாக குறிப்பிடும் தொண்டு அமைப்புகள், குழந்தைகள் அதிகம் மடந்துள்ளதாக கூறுகின்றன.

`இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று` என்றார் அஹ்சன், `மக்களை பாதுகாப்பாக, மரியாதையோடு, தானாக முன்வந்து திரும்ப அழைத்துகொள்கிறோம்` என மியான்மர் கூறும் வரை, உதவிகள் என்பது முக்கியம் என்றார் அவர்.

ரோஹிஞ்சாக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். அவர்கள் ரக்கைன் மாநிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர்.

அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ளாத மியான்மர் அரசு, வங்கதேசத்தில் இருந்து வந்த நாடற்றவர்கள் என எடுத்துக்கொள்கிறது.

`ரோஹிஞ்சா இன அங்கிகாரம் அப்பட்டமாக மறுக்கப்படுவதே முட்டுக்கட்டையாக உள்ளது` என்றார் அவர்.

`இதை இன சுத்திகரிப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டு` என்கிறது ஐ.நா

ஆகஸ்டு 25ஆம் தேதின்ஞ்சா போராளிகள், மியான்மர் பாதுகாப்புத்துறை சாவடிகளில் தாக்குதல் நடத்தியது முதல் இந்த மக்கள் அங்கிருந்து வெளியேறத் துவங்கினர்.ஊ

இதற்கு முன்பு நடந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டு, வங்க தேசத்தில் குடியேறிய ரோஹிஞ்சாக்கள் மூன்று லட்சம் பேர்.

ஐ.நா அகதிகள் மையத்தின் தலைவரான ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில், இரு நாடுகளும் மக்கள் நாடுதிரும்புதல் குறித்து பேசத்துவங்கினாலும், ரோஹிஞ்சாக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லும் நிலையில் மியான்மர் இல்லை என்றார்.

source:BBC TAMIL

Friday, February 3, 2017

மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!- அறிஞர் அண்ணா

பிப்ரவரி 3: அண்ணா நினைவு நாள்

நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால், திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதில் ஒளிவு மறைவு இல்லை. அதைச் சொல்லிக்கொள்வதற்கும் வெட்கப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. திராவிட நாடு என்று தனியாக இருந்தால், நாம் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்று சொன்னோம்.

திராவிட நாடு வேண்டுமென்று கேட்டதற்குக் காரணமே, இங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்; பிராந்திய சமநிலை ஏற்படுவதற்குப் புதுப்புதுத் தொழில்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவியலாக இருக்கக் கூடாது என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை.

மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பல துறைகளிலும் பெற வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. அடுத்து, மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக திராவிட நாடு கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. ஆகவே, திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்ன வென்றால், அவை நியாயமான காரணங்கள். மனமார்ந்து ஏற்றுக்கொண்ட காரணங்கள்.

நாங்கள் திராவிட நாட்டை விட்டுவிட்டோம். ‘திராவிட நாட்டைத் தான் விட்டுவிட்டீர்களே, ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள்?’ என்று கேட்டால் ஒப்புக் கொள்ள முடியுமா? இந்த எதிர்ப்பை விட்டுவிட மாட்டோம். ‘திராவிட நாட்டை விட்டுவிட்டதால், எங்களுக்கு சேலம் இரும்பாலை வேண்டாம். ஜாம் ஷெட்பூரிலேயே வையுங்கள்’ என்று சொல்லிவிடுவோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம். ‘தூத்துக்குடி வேண்டாம்.. இன்னொரு காண்ட்லா கட்டுங்கள்’ என்று சொல்வோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம்.

திராவிட நாடு கிடைத்தால் என்னென்ன பெறுவோமோ அவை ஒவ்வொன்றையும் இந்திய யூனியனின் உள்ளே இருந்தே பெறலாம், பெற வேண்டும், பெற முடியும் என்ற நம்பிக்கையிலேதான் இருக்கிறோமே தவிர, திராவிட நாட்டுக்கான காரணங்கள் ஒன்றையும் நாங்கள் விட்டுவிடவில்லை.

மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட்கிறபோது, இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும்; நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும் என்று கூறுகின்றனர். மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல. மாநில அரசினர்தான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள். மத்திய அரசின் வலிவு அச்சத்தைத் தர, கலக்கத்தைத் தர என்றால், நமது கூட்டு சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்ரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.

மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில், மொகலாய சாம்ராஜ்யத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால், இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? நாட்டுப் பாதுகாப்பு தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!

Source:The Hindu

சமநிலை பட்ஜெட்


நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்திருக்கும் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது. முதல் முறையாக திட்டச் செலவு - திட்டமல்லாத செலவு என்ற பாகுபாடு நீக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே துறைக்குத் தனி பட்ஜெட் இல்லாமல் பொது பட்ஜெட்டிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது. மாத இறுதியில்தான் தாக்கல் செய்வது என்ற நடைமுறை மாற்றப்பட்டு பிப்ரவரி முதலிலேயே தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட்டில், விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு, அடித்தளக்கட்டமைப்பு, சிறு - குறு - நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி, டிஜிடல் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தொழில்துறையில் ரூ.50 கோடிக்கும் குறைவான விற்றுமுதல் உள்ள தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி விகிதம் 25%ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தனி நபர் வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. ரூ.50 கோடி விற்றுமுதல் வரை உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் கார்ப்பரேட் வரி 30%-ல் இருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிமாற்றத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. டிஜிடல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ‘மினி ஏடிஎம்’ இயந்திரங்களின் மீதான தீர்வை குறைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர்கள் ரூ.2,000-க்கும் மேல் ரொக்கமாக நன்கொடை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வீடமைப்புத் திட்டங்கள் அடித்தளக் கட்டமைப்பு திட்டத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி ஏய்ப்பவர்களின் சொத்துகளைப் பறிமுதல்செய்ய சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட பிறகு புதிய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை ஒட்டுமொத்த ஜிடிபி மதிப்பில் 3.2%-க்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பைப்பெருக்கவோ, உற்பத்தியை ஊக்கப் படுத்தவோ துணிச்சலான திட்டங்கள் இல்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை 3 மாதங்களுக்கும் மேல் சகித்துக்கொண்ட மக்களில் பலர் தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகிய வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். அவர்களுடைய இழப்புகளை ஈடுகட்ட தனி நடவடிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட் குறித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து நினைவுகூர வேண்டியது. “திட்டம் சார்ந்த செலவுகள், திட்டம் சாராத செலவுகள் என்ற பகுப்பு நீக்கப்பட்டு, மாற்றாக, மூலதனச் செலவுகள் - வருவாய்ச் செலவுகள் என்ற பகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பட்ஜெட் இது. இதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்த்தே இந்த பட்ஜெட்டை மதிப்பிட முடியும்” என்ற சிங்கின் வார்த்தைகள் மிகப் பொருத்தமானவை. அதிக ஆபத்துகள் இல்லாத - துணிச்சலான நடவடிக்கையும் இல்லாத ஒரு பட்ஜெட் இது. விளைவுகளைச் செயல்பாட்டின் வழியேதான் மதிப்பிட முடியும்.

source:Tamil Hindu