Sunday, January 16, 2011

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்!

சமுதாயத்தில் எல்லா தரப்பினர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும் நிலைமை. சத்தியம், நேர்மை, தர்மம் என்பதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, வெற்றிக்கு ஒரே அளவுகோல் பணம் மட்டுமே என்கிற மேல்நாட்டுச் சிந்தனை நம்மை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலைமையில் சற்று ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாக இருப்பது நீதித்துறையின் நல்ல சில தீர்ப்புகளும், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடும்தான். இப்போது அதையும் கேள்விக்குறியாக்கி, நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கையையும் சிதைக்கும் விதத்திலான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

"கடந்த 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் லஞ்சப் பேர்வழிகள்' என்கிற குற்றச்சாட்டைமுன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பாகாதா என்று சாதாரணப் பொதுஜனம்கூட வியந்தனர். வேறு யாராவது இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருந்தால், நீதிபதிகள் கொதித்தெழுந்திருப்பார்கள். நீதிமன்ற அவமதிப்புக்காக அவர் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும்.

குற்றம் சுமத்தியவர் விவரமில்லாதவர் அல்ல. அவரைக் கூண்டில் ஏற்றினால், என்னென்ன பூதங்கள் கிளம்புமோ? உச்ச நீதிமன்றம் மௌனம் சாதித்தது. உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார். சாந்திபூஷணை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்லுங்களேன் என்று நீதிபதியே வேண்டுகோள் விடுக்கிறார். மொத்தத்தில், குற்றச்சாட்டில் ஏதோ உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பது தெரிகிறது. இன்னும் பிரச்னை நீறுபூத்த நெருப்பாய் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

இப்போது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் இன்னொரு விஷயம் வெளிவந்திருக்கிறது. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இப்போது தேசிய மனித உரிமைக் கமிஷனின் தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்கள் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள்தான் இதற்கெல்லாம் காரணம்.

நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ஜி. பாஸ்கரன், கேரள அரசின் சிறப்பு அரசு வழக்குரைஞராகக் கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்தவர். இவர், கே.ஜி. பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும் வாங்கிக்குவித்த அசையாச் சொத்துகள் பற்றிய விவரம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. வேறு வழியில்லாமல், தனது வருமானத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்த பிரச்னையால் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் சகோதரர்.

பிரச்னை இதோடு முடிந்துவிடவில்லை. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மூத்த மருமகன் பி.வி.ஸ்ரீநிஜன். இவர் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞரும்கூட. இவர் மீதும் கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்க்குப் பொருத்தமின்றி சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பத்திரிகைகளில் வெளியாகியது. திடீர் கோடீஸ்வரரானது இவர் மட்டுமல்ல, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் இளைய மகளின் கணவரான பின்னியும்தான்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மனித உரிமைக் கமிஷனின் இப்போதைய தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணனின் மூத்த மருமகன் ஸ்ரீநிஜன் போட்டியிடும்போது, அவரது மொத்த சொத்து மதிப்பு வெறும் ரூ. 25,000 மட்டுமே. இது அவரே கொடுத்திருக்கும் வாக்குமூலம். இப்போது கோடிகளில் அவர் சொத்து சேர்த்தது எப்படி என்கிற நியாயமான கேள்வி எழுகிறது.

பிரச்னை பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்த நிலையில், புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன். இவர்கள் தங்களது மாமனார் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் பெயரையும், உதவியையும் பயன்படுத்தித்தான் சொத்து சேர்த்தார்களா என்பதை விசாரிக்க வேண்டும் என்று ஒருவரும், தனது மருமகன்கள் தனது பெயரைப் பயன்படுத்திச் சொத்து சேர்க்க முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுமதித்தாரா என்பதை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை தேசிய மனித உரிமைக் கமிஷனின் தலைவர் பதவியிலிருந்து விலக்கக்கோரி பல பார் அசோசியேஷன்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.

எனது மருமகன்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்றும், தனக்கு அதில் தொடர்பே இல்லை என்பது போலவும் அறிக்கை வெளியிட்டுத் தப்பித்துக் கொள்ள முயல்கிறார் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். சட்டப்படி, அவரது கூற்றில் நியாயமிருக்கலாம். ஆனால், மனசாட்சிப்படி அவர் தனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று கூறுவாரேயானால், உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நாம் ஒரு பொய்யரை அமர்த்தி அழகு பார்த்திருக்கிறோம் என்று தலைகுனிந்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் நீதிபதிகளைப் பற்றிய, குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றிய விவரங்களைத் தரவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டவர் அன்றைய தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன். நீதிபதிகள் தங்கள் சொத்துக் கணக்கை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுகூறி நிராகரித்தவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போதல்லவா தெரிகிறது, அதன் பின்னணியும் காரணமும்!

சாந்திபூஷண் குறிப்பிட்ட 8 ஊழல் தலைமை நீதிபதிகளில் ஒருவர் யார் என்பது தெரிந்துவிட்டது. மீதி 7 பேர் யார்யார் என்பதும் வெளியாகக்கூடும். அதுவல்ல முக்கியம். நீதித்துறை களங்கப்படுகிறது. அதன் மீதான நம்பிக்கை தகர்கிறது. இது தேசத்துக்கு நல்லதல்ல.

நீதிபதிகள் நியமனத்தில் தொடங்கி, தவறிழைக்கும் நீதிபதிகளை விசாரிப்பது, பதவி நீக்கம் செய்வது வரை பல மாற்றங்கள் உடனடியாகச் செய்யப்பட்டால் மட்டுமே, நீதித்துறையில் நேர்மையையும், நீதித்துறையின் நன்மதிப்பையும் நிலைநிறுத்த முடியும். உடனடியாக, நீதித்துறைச் சீர்திருத்தத்துக்கு வழிகோலுவதற்கு நீதித்துறை சீர்திருத்தக் கமிஷன் அமைக்கப்படுவதுதான் ஒரே தீர்வு. அப்படி அமைக்கப்படும் கமிஷனுக்கு, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றவர்களைத் தலைவராக நியமித்துவிடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் நமது அடுத்த கவலை!

No comments:

Post a Comment