Friday, February 3, 2017

சமநிலை பட்ஜெட்


நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்திருக்கும் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது. முதல் முறையாக திட்டச் செலவு - திட்டமல்லாத செலவு என்ற பாகுபாடு நீக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே துறைக்குத் தனி பட்ஜெட் இல்லாமல் பொது பட்ஜெட்டிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது. மாத இறுதியில்தான் தாக்கல் செய்வது என்ற நடைமுறை மாற்றப்பட்டு பிப்ரவரி முதலிலேயே தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட்டில், விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு, அடித்தளக்கட்டமைப்பு, சிறு - குறு - நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி, டிஜிடல் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தொழில்துறையில் ரூ.50 கோடிக்கும் குறைவான விற்றுமுதல் உள்ள தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி விகிதம் 25%ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தனி நபர் வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. ரூ.50 கோடி விற்றுமுதல் வரை உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் கார்ப்பரேட் வரி 30%-ல் இருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிமாற்றத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. டிஜிடல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ‘மினி ஏடிஎம்’ இயந்திரங்களின் மீதான தீர்வை குறைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர்கள் ரூ.2,000-க்கும் மேல் ரொக்கமாக நன்கொடை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வீடமைப்புத் திட்டங்கள் அடித்தளக் கட்டமைப்பு திட்டத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி ஏய்ப்பவர்களின் சொத்துகளைப் பறிமுதல்செய்ய சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட பிறகு புதிய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை ஒட்டுமொத்த ஜிடிபி மதிப்பில் 3.2%-க்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பைப்பெருக்கவோ, உற்பத்தியை ஊக்கப் படுத்தவோ துணிச்சலான திட்டங்கள் இல்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை 3 மாதங்களுக்கும் மேல் சகித்துக்கொண்ட மக்களில் பலர் தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகிய வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். அவர்களுடைய இழப்புகளை ஈடுகட்ட தனி நடவடிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட் குறித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து நினைவுகூர வேண்டியது. “திட்டம் சார்ந்த செலவுகள், திட்டம் சாராத செலவுகள் என்ற பகுப்பு நீக்கப்பட்டு, மாற்றாக, மூலதனச் செலவுகள் - வருவாய்ச் செலவுகள் என்ற பகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பட்ஜெட் இது. இதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்த்தே இந்த பட்ஜெட்டை மதிப்பிட முடியும்” என்ற சிங்கின் வார்த்தைகள் மிகப் பொருத்தமானவை. அதிக ஆபத்துகள் இல்லாத - துணிச்சலான நடவடிக்கையும் இல்லாத ஒரு பட்ஜெட் இது. விளைவுகளைச் செயல்பாட்டின் வழியேதான் மதிப்பிட முடியும்.

source:Tamil Hindu

No comments:

Post a Comment