Wednesday, October 6, 2010

உலகளவில் அழிந்து போனதாக கருதப்பட்ட கடல் உயிரினங்கள் இனங்கள் கண்டுபிடிப்பு

உலகளவில் முதல் முறையாக கடலில் உள்ள உயிரினங்கள் குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 5 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கருதிய சில உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகளவில் கடலில் எவ்வளவு உயிரினங்கள் உள்ளன என்பது குறித்து இரண்டாயிரத்து 925 கோடி ரூபாய் செலவில் முதல் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டது. கடுங்குளிர் நிலவும் துருவ பிரதேசங்கள் தொடங்கி, வெப்பம் அதிகமுள்ள நிலநடுக்கோடு பகுதி வரை பல்வேறு தட்ப வெப்பநிலையில், அலைகள் வரும் கடற்கரை முதல் கடும் இருள் சூழ்ந்த ஆழ்கடல் பகுதி வரையுள்ள பல்வேறு பகுதிகளில், கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் முதல் உலகில் பெரியதான நீலத்திமிங்கலம் வரை எல்லா உயிரினங்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 10 லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகள் கடலில் இருக்கலாம் என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 7 லட்சத்து 50 ஆயிரம் உயிரினங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின் போது புதியதாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதிய மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் அடித்தளமாக 21ம் நூற்றாண்டு திகழ்வதுடன், புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு; கடல் வாழ் உயிரினங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்; கடல்வழி பாதைகள் ஆகியவை இந்த கணக்கெடுப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பில் 670 நிறுவனங்கள், 2 ஆயிரத்து 700 விஞ்ஞானிகள், 9 ஆயிரம் நாட்களில் 540க்கும் மேற்பட்ட முறை கடலில் பயணம் செய்து 3 கோடி முறை உற்றுநோக்கி ஒரு லட்சத்து 20 ஆயிரம் இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பில் பணியாற்றிய விஞ்ஞானி ஜெஸ்சி அயூசுபெல் கூறுகையில், "உலகில் முதல் முறையாக தற்போது கடல் உயிரினங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு, கடந்த 250 ஆண்டு காலத்தில் மக்களுக்கு தேவையானவற்றை அளிக்கும் அகராதி மற்றும் கலைக்களஞ்சியம் போன்று தகவல்களை கொடுக்கும். கடலில் செய்யப்பட்டுள்ள ஆய்வு மூலம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் கடலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும், எதிர் காலத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிய வந்துள்ளது,' என்றார்.

கணக்கெடுப்பு குழுவை சேர்ந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஐயன் பயனீர் கூறுகையில், "இதுவரை நமக்கு தெரிந்த உயிரினங்கள் தவிர, இதுவரை கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் அதிகளவில் முதல் முறையாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலில் வாழும் உயிரினங்களுக்கு ஒழுங்கான சீதோஷ்ண நிலை, ஆக்சிஜன், அதிகளவு உணவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளன,' என்றார். கணக்கெடுப்பில், 16 ஆயிரத்து 764 இன மீன் வகைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. 5 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கருதிய சில உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இன்னும் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை மற்ற விஞ்ஞானிகளுக்கு அளித்துள்ளது.

No comments:

Post a Comment