Monday, October 25, 2010

பிரதமர் ஜப்பான் பயணத்தால் தென்மாநிலங்களுக்கு லாபம்: சீனாவால் சாதகம்

பிரதமர் ஜப்பான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் பெரிய அளவு உறவு நெருக்கம் இல்லாத நிலையில் பிரதமர் மன்மோகன், "கிழக்காசியாவின் பக்கம் கவனம்' என்ற கருத்தில் ஜப்பான், வியட்னாம், மலேசியாவிற்கு மேற்கொண்ட பயணம், பொருளாதார அடிப்படையில் பயன் தரும். சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன், ஜப்பான் பிரதமர் நயாடோகனுடன் நடத்திய பேச்சுக்கள் பெரிதாக பலன் தரும் என்ற எதிர்பார்ப்பில்லை.ஆனால், சீனாவின் பொருளாதார அணுகுமுறையில் திருப்தியில்லாத ஜப்பான், இந்தியாவின் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், இதுவரை, "அபூர்வ கனிம வளங்களுக்கு' சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் ஜப்பான், இந்தியா பக்கம் தன் கவனத்தை திருப்ப முன்வந்திருக்கிறது.

இம்மாதிரி கனிமங்கள் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகம் என்று சர்வதேச மதிப்பீடு அறிக்கை தெரிவிக்கிறது.அருணாச்சல் மாநிலத்தில் அர்த்தமற்ற முறையில் உரிமை கொண்டாடும் சீனா, நமக்கு தொந்தரவு தருவதற்கு அந்த விஷயத்தை முக்கியத்துவப்படுத்துகிறது. அதே போல, ஜப்பான் தீவுகளில் சிலவற்றிலும் அர்த்தமற்ற உரிமை கொண்டாட விரும்பும் சீனாவை, ஜப்பான் விரும்பவில்லை.ஆகவே, இந்தியாவில் உள்ள "அபூர்வ கனிம வளங்களை' வாங்கிக் கொண்டால், அதற்கேற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தினால், அது நீண்ட காலத்திற்கு தனது புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவிடும் என்று ஜப்பான் கருதுகிறது. அந்த அடிப்படையில் தொழில் துறை பயன்பாட்டிற்காக, "பெங்களூரு - சென்னை' இடையே அதிவிரைவு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி உதவ நிதி தரவும் தயாராக இருக்கிறது.

ஆகவே, பிரதமர் மேற்கொண்டிருக்கும் ஜப்பான் பயணம் உடனடியாக பலன் தரும் வகையில் பரபரப்பு இருக்காது என்றாலும், நீண்ட கால அடிப்படை உறவில், தொழில் வளர்ச்சியில், பொருளாதார வளர்ச்சியில் வளம் காட்ட வழிவகுக்கும் என்ற கருத்து உருவாகியிருக்கிறது. அதுவும் தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் புதிய தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

No comments:

Post a Comment