Friday, August 13, 2010

பெரியகோயில் 1000-வது ஆண்டுவிழா: தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் சிறப்பு நிகழ்ச்சிகள்- துணைவேந்தர் ம.ராசேந்திரன் அறிவிப்பு

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா தொடர்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

÷பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு செப்டம்பர் 25, 26-ம் தேதிகளில் 1,000-வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது.

÷முதல் நாள் விழாவில் பெரிய கோயிலில் 1,000 நடனக் கலைஞர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், நகரில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளும், 2-ம் நாளில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், பெரிய கோயிலில் பொது அரங்கமும், திலகர் திடலில் ராஜராஜ சோழன் உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா மற்றும் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் பெரிய கோயிலின் 1,000-வது ஆண்டு விழாவின் போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பங்கு பற்றி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன் விளக்கினார்.

""தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஓதுவார்களை நியமித்து, திருமுறை பாடவைத்து தமிழ் மொழியை ஆலயத்துக்குள் கொண்டு சென்றவர் மாமன்னர் ராஜராஜ சோழன்.

÷தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூருக்கோ, தனிப்பட்ட பக்தி நெறிக்கோ மட்டும் பெருமை சேர்ப்பதாக இல்லை. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைப்படத்தக்கதாக, ஏன் இந்தியா முழுவதும் பெருமைப்படத்தக்கதாக விண்ணுயர நிற்கிறது.

÷சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த விஜயாலயச் சோழ அரச பரம்பரையில் திலகமாக விளங்கிய முதலாம் ராஜராஜ சோழனால் தஞ்சைப் பெரிய கோயில் எழுப்பப்பட்டது.

÷தென்கிழக்கு ஆசிய நாடுகளை வென்று சோழர் ஆட்சியை சிறப்புறச் செய்தவர் ராஜராஜ சோழன். ராஜராஜ சோழன் தமிழகத்தின், ஏன் இந்திய மன்னர்களில் சிறந்தவர். தஞ்சையைச் சுற்றி எந்த மலைக்குன்றும் இல்லை. அப்படியிருக்க கல்களால் எழுப்பப்பட்ட பெரிய கோயிலுக்கு எங்கிருந்து கல் கொண்டு வரப்பட்டது, எப்படி கொண்டு வரப்பட்டது, எப்படி கட்டடப்பட்டது என்பது இப்போதுள்ள அறிவியல் யுகத்தில் புரியாத புதிராக, புதிர்களின் கொள்கலனாக உள்ளது.

ராஜராஜனின் ஆட்சி முறை இன்றைக்கும் பயன்படக்கூடிய நிர்வாக முறையாக இருக்கிறது. ஆவணப்படுத்துவதில் ராஜராஜ சோழனைப் போல வேறு யாரும் செய்திருக்க முடியாது. மக்களாட்சியை விரும்பிய மன்னன் தன்னுடைய பணியையும், தன்னுடன் பணியாற்றியவர்களின் பணியையும் ஆவணமாகப் பதிவு செய்துள்ளான்.

தஞ்சை பெரிய கோயில் 1,000-வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு நாள் ஆய்வரங்கம், இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு என்ற பொருண்மையில் நான்கு அமர்வுகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அமர்விலும் இரு அறிஞர்கள் கட்டுரை அளிப்பர். ஓர் அறிஞர் தலைமை வகிப்பார்.

இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வரங்கம் செப்டம்பர் 24-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முற்பகல் 11.30 முதல் பகல் 12.30 மணி வரை முதல் அமர்வில் வரலாறு மற்றும் ஆவணப்படுத்துதல் தலைப்பிலும், பகல் 12.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை 2-வது அமர்வில் ஆட்சி முறை மற்றும் வேளாண் தொழில்நுட்பம் தலைப்பிலும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை 3-வது அமர்வில் கட்டடக் கலை மற்றும் தொழில்நுட்பம் தலைப்பிலும், பிற்பகல் 3.30 முதல் 4.30 மணி வரை 4-வது அமர்வில் ஆடல் கலை, இசைக் கலை, ஓவியக் கலை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும்.

கருத்தரங்குக்கு பேராசிரியர்கள் ஜார்ஜ் மிச்சல் (லண்டன்), கபிலா வாத்சாயனா (தில்லி), ரொமிலா தாப்பர் (தில்லி), கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜன் குருக்கள், பேராசிரியர்கள் கேசவன் வெளுத்தாட் (தில்லி), செம்பகலட்சுமி (சென்னை), சுப்பராயலு (புதுச்சேரி), பேராசிரியர் ஓவியர் சந்துரு (சென்னை), முனைவர் இரா. நாகசாமி, முனைவர் பத்மா சுப்பிரமணியம் (சென்னை), முனைவர் கணபதி ஸ்தபதி (சென்னை), முனைவர் சத்தியமூர்த்தி (சென்னை), ஸ்ரீராமன் (சென்னை) ஆகியோரை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலைத் தொழில்நுட்பங்கள், ஓவியக் கலை வரலாற்றில் பெரிய கோயில், சிற்பக் கலை வரலாற்றில் பெரிய கோயில் ஆகிய நூல்களும், இலக்கியங்களில் பெரிய கோயில் என்ற நோக்கில் பெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர், திருவிசைப்பா - கருவூர்த்தேவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர் திருப்புகழ், சோழர் காலச் செப்பேடுகள், பத்துப்பாட்டு இந்தி மொழி பெயர்ப்பு, பிற நாட்டவர் பார்வையில் தஞ்சை பெரிய கோயில், தமிழர்களின் வணிக வரலாறு, தமிழர்களின் கடல்கள் பயண வரலாறு ஆகிய நூல்களை செப்டம்பர் 25-ம் தேதிக்கு முன்பு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தவிர, தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், பண்டைத் தமிழரின் ஓவியங்கள் ஆகிய நூல்கள் மறு வெளியீடு செய்யப்படும்.

பாரதியாரின் படைப்புகளில் பெரிய கோயில் பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. அப்படி ஏதேனும் குறிப்புகள் கிடைத்தால், அவற்றையும் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார் துணைவேந்தர் ராசேந்திரன்.

No comments:

Post a Comment