Tuesday, August 17, 2010

பாகிஸ்தானில் உலகை அச்சுறுத்தும் 5 பயங்கரவாத குழுக்கள்

உலகை அச்சுறுத்தும் ஐந்து பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் செயல்படுவதாக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ரிச்சட் ஹால்புரூக் கூறினார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சார்லி ரோஸ் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானின் சட்டம், ஒழுங்கு செயல்படாத பழங்குடியினப் பகுதிகளில் இவர்கள் பதுங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது:

சர்வதேச அளவில் அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடிய அல்-காய்தா, தலிபான் ஹக்கானி, லஷ்கர் இ தொய்பா, ஆப்கன் தலிபான், பாகிஸ்தான் தலிபான் ஆகியன மிக முக்கியமான குழுக்களாகும். இவை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மீது தாக்குதல் தொடுப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டவை.

அமெரிக்காவின் பிரதான எதிரி அல்-காய்தா. இந்த பயங்கரவாத குழு பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதிகளிலிருந்து செயல்படுகிறது. இப்போது இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மிகவும் ஆபத்து நிறைந்த இக்குழுவினர் செயல்படும் பகுதி முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அல்-காய்தா அமைப்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறது. இவை தவிர, ஆப்கனிலிருந்து செயல்படும் ஆப்கன்-தலிபான் குழுவும் பிரதான குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இப்போது பாகிஸ்தான்-தலிபான் அமைப்பினர் பாகிஸ்தானில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூயார்க் நகரில் கடந்த மே 1-ம் தேதி டைம்ஸ் சதுக்கத்தில் கார் வெடி குண்டு மூலம் தகர்க்க முயன்ற பைசல் ஷாஜத்து, பாகிஸ்தானில் உள்ள தலிபான் குழுவிடம் பயிற்சி பெற்றவர். நல்லவேளையாக இவருக்கு சரிவர பயிற்சி அளிக்கப்படவில்லை. இல்லையெனில் டைம்ஸ் சதுக்க தகர்ப்பு சம்பவம் நிறைவேறியிருக்கும்.

ஹக்கானி குழுவினர் தனி குழுவாக வடக்கு வஜிரிஸ்தானில் செயல்படுகின்றனர். இங்கிருந்து காபூலில் சதித் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

அமெரிக்கர்கள் அதிகம் கவலைப்படாத ஒரு குழு உள்ளதென்றால் அது லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான். இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களை செயல்படுத்துகிறது. 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதும் இக்குழுவினர்தான்.

இந்த ஐந்து குழுக்களும் கலிபோர்னியா பரப்பளவு கொண்ட பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் செயல்படுகின்றனர். ஆப்கனிலிருந்து அமெரிக்க படையை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் எஞ்சிய படையைக் கொண்டு இத்தகைய பயங்கரவாத குழுக்களை அழித்துவிட முடியும். அந்த அளவுக்கு ஆப்கன் படையை கூட்டுப் படை தயார்ப்படுத்திவிடும்.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இது குறித்து பரிசீலித்து முடிவு செய்வார் என்றார் ஹால்புரூக்.

No comments:

Post a Comment