Monday, August 9, 2010

ஜனநாயக போராட்டம் மியான்மரில் அஞ்சலி

மியான்மர் நாட்டில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், ஜனநாயகத்துக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்காக நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மியான்மரில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங் சாங் சூகி, ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், ராணுவ தளபதி நீவின் உத்தரவு படி, வீட்டுச் சிறையில் ஆங் சாங் சூகி அடைக்கப்பட்டார். அவரிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் ராணுவம் தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது. ஜனநாயகம் கோரி 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்தது ராணுவ ஆட்சி. ஜனநாயகத்துக்காக உயிர் நீத்தவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் டின்ட் சான் என்பவர், இறந்தவர்களின் நினைவு தினத்தை ஆன்மிக ரீதியாக அனுசரித்து வருகிறார். யாங்கூனில் இதையொட்டி புத்த பிட்சுகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான புத்த பிட்சுகள் தலைமையில் நினைவாஞ்சலி கூட்டம், யாங்கூன் நகரில் நடத்தப்பட்டது. கடந்த 2007ல் ஜனநாயகம் கோரி புத்த பிட்சுகள் பலர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய புத்த பிட்சுகள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பலருக்கு 65 ஆண்டு காலம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment