Friday, August 13, 2010

இரும்புத்தாது சுரங்கங்கள் மூடலால் கோடிக்கணக்கான வருவாய் இழப்பு

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் மூடப்பட்டுள்ளதால், சென்னை துறைமுகத்தில் அவற்றின் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை துறைமுகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், இரும்பாக மாற்றப்பட்டு, 'ஸ்டீல்' பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், கட்டிகள் மற்றும், துகள்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன.இதில், கட்டியான கற்கள் போன்ற தோற்றம் கொண்ட இரும்புத் தாது. நம் நாட்டில், ஒரிசா மாநிலம், கியாஞ்சோர் மாவட்டத்தில் உள்ள, பர்ப்பில் சுரங்கத்தில், முதல் தர இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன.தென் மாநிலங்களில், கர்நாடக மாநிலம் பெல்லாரி, ஹாஸ்பெட், ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபலாபுரம் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இரும்புத் தாதுக்கள் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டு, ஜப்பான், கொரியா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மத்திய அரசு சார்பு நிறுவனமாக செயல்பட்ட, 'மினரல் மெட்டல் டிரேடிங் கார்பரேஷன்' (எம்.எம்.டி.சி.,) மூலம் மட்டுமே இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கும் பணி முன்பு நடந்தது. அப்போது, துகள்களாக உள்ள தாதின் பயன்பாட்டை உணராமல், உள் நாட்டிலும் அது பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய கொள்கை மூலம், 2003ம் ஆண்டுக்கு பின், தனியாரும் சுரங்கத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, இங்கிருந்து சீன நாட்டிற்கு, கட்டிகள் போன்ற இரும்புத் தாது ஏற்றுமதி துவங்கியது. சீன நாட்டின் இறக்குமதியாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, துகள் தாதுகளும் ஏற்றுமதியாகத் துவங்கியது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ஆந்திர மாநிலம் ஓபலாபுரம் சுரங்கங்களில், கடந்த ஆண்டு ஜூலை முதல் அரசியல் காரணங்களுக்காக இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வந்த இரும்புத் தாதுக்கள், சென்னை துறைமுகம் வழியாகவே, அதிகளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்காக நாள்தோறும் அங்கிருந்து தலா 50 வேகன் கொண்ட ஐந்து சரக்கு ரயில்கள் மூலம் 11 ஆயிரத்து 200 டன் அளவிற்கு இரும்புத் தாதுக்கள் இங்கு எடுத்து வரப்பட்டன.இதுபோல் ஆண்டிற்கு சராசரியாக சென்னை துறைமுகத்தில் இருந்து 80 லட்சம் டன் வரை, சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்றுமதி தொழிலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், சென்னை துறைமுகத்தில், 'பிளாட்' எனப்படும் யார்டுகளை டெண்டர் மற்றும் வாடகைக்கு எடுத்து அங்கு ரயில் மூலம் எடுத்து வரப்படும் இரும்புத் தாதுக்களை தேக்கி வைத்து ஏற்றுமதி செய்து வந்தனர். இவர்களின் வசதிக்காக சென்னை துறைமுகத்தில் 24 யார்டுகள் உள்ளன. ஒவ்வொரு யார்டு மூலமும் மாதத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு வருமானமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்ததால், யார்டுகளை ஏற்றுமதியாளர்கள் துறைமுக பொறுப்பு கழகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் துறைமுக பொறுப்பு கழகத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி இரும்புத் தாது சரக்குகளை கையாள்வதன் மூலம் ஆண்டிற்கு 83 கோடியே 20 லட்சம் ரூபாய், சென்னை துறைமுகத்திற்கு வருமானமாக கிடைத்தது. ஓர் ஆண்டாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருமானமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஏற்றுமதி மூலம் துறைமுகத்திற்கு மட்டுமின்றி, இரும்புத் தாதுக்களை ஏற்றி வந்ததன் மூலம் ரயில்வே துறைக்கு மாதம்தோறும் கிடைத்து வந்த மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, மத்திய வருவாய்த் துறைக்கு ஒரு டன் இரும்புத் தாது ஏற்றுமதி மூலம் கஸ்டம்ஸ் வரியாக 650 ரூபாயும், 'செஸ்' வரி மூலம் ஒரு ரூபாயும் கிடைத்து வந்தது. இவ்வாறு, மாதம் பல கோடி ரூபாய் அளவிற்கு கிடைத்த இந்த வருமானமும் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும், இரும்பு தாது ஏற்றுமதியாளர்களுக்கும் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment