Friday, August 13, 2010

"பிளாக்பெர்ரி' மீது தடை வருமா? மத்திய அரசு விதித்தது நிபந்தனை

பிளாக்பெர்ரி மொபைல் போன் தகவல்களை இடைமறிக்கும் வசதி தர மறுப்பு தெரிவித்த "ரிம்' நிறுவனத்திற்கு, இந்தியா மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்கு ஒரு முடிவு காணப்படாவிட்டால், தடை விதிக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறது.

பிளாக்பெர்ரி மொபைல் போனை தயாரிக்கும் நிறுவனமான "ரிம்'மின் நடவடிக்கை குறித்து, உள்துறை செயலர் பாதுகாப்பு நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் அதிகாரிகள் நேற்று கூடி விவாதித்தனர். கூட்டம் முடிந்த பின், உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தொலைத்தொடர்புத் துறை செயலர் தாமசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "ரிம்' நிறுவன தயாரிப்புகளின் மூலம் பரிமாறப்படும் பேச்சுக்களையும், குறுந்தகவல்களையும் இடைமறிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் கேட்டறியும் வகையில், வரும் 31ம் தேதிக்குள் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்குங்கள்' என, கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழில்நுட்பத் தீர்வை, வரும் 31ம் தேதிக்குள் உருவாக்கவில்லை எனில், அதன் மேல் அரசின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து, இந்த இரு சேவைகளை தடை செய்ய ஆவன செய்வோம். தற்போதைய நிலையில், பிளாக்பெர்ரி மூலமான வாய்ஸ் மெய்ல், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் சேவை ஆகியவை, சட்ட அமலாக்க நிறுவனங்களால் பார்க்க மட்டுமே முடியும். அவற்றை இடைமறித்துக் கேட்க முடியாது. எனவே, "ரிம்' நிறுவனம் குறித்த அரசின் நிலைப்பாடு எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்தே இன்றைய கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கூட்டம் முடிந்த பிறகு, "ரிம்' நிறுவன உயர் அதிகாரி ஒருவர், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசினார். பிளாக்பெர்ரி தகவல்கள் அனைத்தும் "பிளாக்பெர்ரி என்டர்பிரைஸ் சர்வர்' மூலம் பரிமாறப்படுகின்றன. இந்தத் தகவல்கள் விசேஷக் குறியீடுகள் மூலமே பரிமாறப்படுவதால், சாதா எழுத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட குறியீட்டிலேயே சர்வரில் பதியப்படுகிறது. மீண்டும் இன்னொரு போனுக்கு தகவல் செல்லும்போது மட்டுமே, சாதா எழுத்தில் அனுப்பப்படுகிறது. இந்த விசேஷக் குறியீட்டைப் படிக்கும் உரிமை வேண்டும் என்பது தான், இந்தியாவின் கோரிக்கை.

ஐக்கிய அரபு மற்றும் சவுதி அரசுகள் ஆகியவையும் "ரிம்' கூறுவதை ஏற்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயத்தில் இந்த மொபைல் போனில் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கண்டறிய முடியாது என்பதே இப்போது பேசப்படும் பெரிய விஷயம். ஆனால், இதே "ரிம்' நிறுவனம் இந்த வசதியை அமெரிக்காவுக்கு தந்திருக்கிறது. அது எப்படி என்று கேட்டால், "கோர்ட் உத்தரவு மூலம் பிளாக்பெர்ரி தகவல்களை இடைமறித்து பெறமுடியும். அம்மாதிரி அனுமதி தர மறுக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் நிபந்தனைகளுக்கு உட்பட வில்லை என்றால், பிளாக்பெர்ரி சர்வீஸ் முடக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment