Tuesday, August 17, 2010

எம்.பி.,க்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு தேவையா? முடிவு எடுக்காமல் அமைச்சரவை திணறல்

எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை மூன்று மடங்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. இந்த அதிகரிப்பு தேவையா என, அமைச்சர்கள் பலர் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால், ஒருமித்த கருத்து ஏற்படாமல், இதுதொடர்பாக முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை நேற்று தள்ளி வைத்தது.

எம்.பி.,க்கள் தற்போது மாதம் ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதுபோக பார்லிமென்ட் நடக்கும் நேரங்களிலும், சபை கமிட்டியின் அமர்வுகள் நடக்கும் போதும், தினமும் ஆயிரம் ரூபாய் அலவன்ஸ் பெறுவர். இதுபோக மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு எம்.பி., க்கும் தொகுதி அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. குறிப் பிட்ட அளவுக்கு இலவச விமான பயணங்கள் மற்றும் ரயில் பயணங்கள், வாடகை இல்லாத வீடுபோன்ற சலுகைகளும் உண்டு. இந்நிலையில், ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. இதனால், தங்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசில் செயலர் பதவியில் இருப்பவர் மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். அதை விட ஒரு ரூபாயாவது அதிகமாக தங்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் எம்.பி.,க்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கேற்ற வகையில், காங்கிரஸ் எம்.பி., சரண்தாஸ் மகந்த் தலைமையிலான குழுவினரும் எம்.பி.,க்களின் சம்பளத்தை 80 ஆயிரத்து ஒன்றாக நிர்ணயிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தனர். இந்த குழுவில் சரண்தாஸ் தவிர, பா.ஜ.,வைச்சேர்ந்த அலுவாலியா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மைத்ரேயன், காங்கிரசை சேர்ந்த ராஜிவ் சுக்லா, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இருந்தாலும், எம்.பி.,க்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, பார்லிமென்ட் விவகார அமைச்சகம் யோசனை தெரிவித்தது. இந்த யோசனையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பான மசோதா பார்லிமென்டின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு: இந்நிலையில், எம்.பி.,க் களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை நேற்று பரிசீலித்தது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "பணவீக்கம் அதிக அளவில் உள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலையும் ஆங்காங்கே நடக்கிறது. காமன் வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த மோசமான சூழ்நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது தேவையா?' என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்தும் விவகாரத்தில், முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை தள்ளி வைத்தது. அதேநேரத்தில், "எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது அவசியம்' என, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.

பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் காங்கிரஸ் எம்.பி., ராஜிவ்சுக்லா கூறியதாவது: உலகிலேயே இந்தியாவின் தான் எம்.பி.,க்களின் சம்பளம் குறைவாக உள்ளது. அரசில் எழுத்தர் பணியில் உள்ளவர் பெறுவதை விட குறைவான சம்பளம் பெறுகின்றனர். செயலர்களுக்கு மேம்பட்டவர்கள் எம்.பி.,க்கள். அவர்களின் சம்பளத்திற்கும், எம்.பி.,க்களின் சம்பளத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்க வேண்டும். எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். முன்னர் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெற்ற அரசு செயலர் தற்போது 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால், எம்.பி.,க்கள் சம்பளம் நான்காயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாகத்தான் உயர்த்தப்பட்டது. கவுரவமான சம்பளத்தை எம்.பி.,க்கள் எதிர்பார்க்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன். எம்.பி.,க்களின் பணி ஒன்றும் நிரந்தரமானதல்ல. இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார். இதேபோல், பா.ஜ., எம்.பி.,க்கள் சிலரும் எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த வேண் டியது அவசியம் என, கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு கட்சி எம்.பி.,க்களும் ஒன்றாகியுள்ளனர்.

No comments:

Post a Comment